புரட்சித் தலைவிக்குச் சில ஆலோசனைகள்

Saturday, April 12, 2008

"தமிழக மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், சித்ரா பவுர்ணமி அன்று அ.தி.மு.க., உறுப்பினர்கள் வீடுகளில் விளக்கேற்ற வேண்டும்' என ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பான அறிக்கை விபரம்: சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, மின்சார தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு, மறைமுக பஸ் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு போன்ற பிரச்னைகளை சமாளிக்க முடியாமல் தமிழக அரசு ஸ்தம்பித்து நிற்கிறது. இனி தமிழகத்தில் ஒளி பிறக்காதா, இந்த நிலை மாறாதா என்ற கவலை மக்களை கவ்விக் கொண்டுள்ளது.

இருள் அகன்று ஒளி பிறக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தவும், அந்த ஒளியை உருவாக்க அ.தி.மு.க., இருக்கிறது என்ற எண்ணத்தை மக்கள் மனதில் ஏற்படுத்த வேண்டும்.



இதற்கு அடையாளமாக வரும், 19ம்தேதி சித்ரா பவுர்ணமி அன்று மாலை 6.30 மணிக்கு அவரவர் வீடுகளிலும், தங்களுக்கு சொந்தமான நிறுவனங்களிலும், கோவில்களிலும் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் குடும்பத்தோடு விளக்கேற்றி வைக்க வேண்டும்.

தீபம் ஏற்றி வைக்கும் நேரத்தில், "இருண்ட தமிழகத்தில் ஒளியேற்ற வாருங்கள் அம்மா' என்று கோஷமிட வேண்டும். இந்த முழக்கம் தமிழகம் முழுவதும் எழுப்பப்பட வேண்டும்.இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

http://www.dinamalar.com/2008apr12/political_tn1.asp

சித்ரா பவுர்ணமி அன்று மாலை 6:30 மணிக்குத்தான் விளக்கேற்றனும்னு சொல்லப்பட்டிருப்பதிலிருந்து அம்மாவின் ஆஸ்தான ஜோதிட சிகாமனி எவனாச்சும் சொல்லி இருப்பான்னு தெரியுது. இருந்தாலும் அதிரைக்காரன் சார்பில் அம்மாவுக்குச் சில ஆலோசனைகளைச் சொல்லிக் கொள்கிறேன். மொட்டைத்தலையுடன் ஆலோசனை சொன்னால்தான் எடுபடும் என்றால் அம்மாவுக்காக (ரத்தத்தின் ரத்தங்கள் சார்பில்) மொட்டை போடவும் தயார்!)

ஆலோசனை # 1: தமிழக மக்களுக்கு ஒருகிராம் தங்கக்காசு கொடுத்து அம்மாவின் பொற்கால ஆட்சி மீண்டும் வர சபதமெடுக்கச் சொல்லலாம்!

ஆலோசனை # 2: மின்சாரத் தட்டுப்பாட்டைச் சுட்டிக்காட்ட விளக்கேற்றுவது போல், பஸ்கட்டண உயர்வைச் சுட்டிக்காட்ட ஒருநாள் ஆட்டோ கட்டணம் கொடுக்கலாம்.

ஆலோசனை # 3: விலைவாசி உயர்வுக்கு எதிராக இலவச அரிசி,சர்க்கரை மளிகைப் பொருட்களை ஒருநாளைக்கு மட்டும் வழங்கலாம்.

ஆலோசனை # 4: பால்விலை உயர்வுக்கு எதிராக வீட்டுக்கு ஒரு கோமாதா கொடுக்கலாம்.


அம்மாவின் (மூட)நம்பிக்கையொளி ஏற்றும் கோரிக்கையை ஏற்று, ஏழை ரத்தத்தின் ரத்தங்களின் குடிசைகள் தீப ஒளியில் எரிந்துவிடாமலிருக்க உடன் பிறப்புக்கள் இலவசத் தண்ணீர் பந்தல்களை தமிழகமெங்கும் வைக்க வேண்டுகிறேன்.

Read more...

வெற்றியின் ரகசியம்

Thursday, April 03, 2008

வெற்றிகரமான மணவாழ்விற்கான வழிகள் குறித்து அலசும் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இறுதிச் சுற்றிற்கு முன்னேறிய ஒரு கணவனுடன் நடந்த உரையாடல்.

கேள்வி: ஜோடிப்பொருத்தம் நிகழ்ச்சியின் எல்லா சுற்றுகளிலும் வென்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்.ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்குப் பின்னணியிலும் ஒரு பெண் இருப்பாள் என்று சொல்லப் படுவதுண்டு. உங்கள் வெற்றிக்குப் பின்னணியில் யார் இருந்தார்?

பதில்: நிச்சயமாக எனது எல்லா வெற்றிகளின் பின்னணியிலும் என் மனைவியின் பங்களிப்பு குறைத்து மதிப்படப்பட முடியாதது.

கேள்வி:
உங்கள் மகிழ்ச்சிகரமான இல்வாழ்க்கையின் ரகசியம் என்னவென்று நேயர்களுக்குச் சொல்லுங்களேன்.

பதில்: முடிவெடுக்க வேண்டிய விசயங்களில் ஒருவருக்கொருவர் பொறுப்புகளை பகிர்ந்து கொண்டும் விட்டுக்கொடுப்பதுமே மகிழ்ச்சியான மனவாழ்வுக்குக் காரணம்.

கேள்வி: கொஞ்சம் விரிவாகச் சொல்ல முடியுமா?

பதில்: தாராளமாக! எங்கள் வீட்டில், பெரியபெரிய விசயங்களில் முடிவெடுக்கும் பொறுப்பை என்னிடம் விட்டுவிட்டு, சின்னச் சின்ன விசயங்களை என் மனைவியே பார்த்துக் கொள்வாள். ஒருவர் எடுக்கும் முடிவில் பிறர் தலையிடுவதில்லை.

கேள்வி: கொஞ்சம் உதாரணத்துடன் விளக்க முடியுமா?

பதில்: உதாரணமாக, எந்தக் கார் வாங்குவது, எந்தக் கலர் பட்டுப்புடவை எடுப்பது, பழைய நகையை விற்றுவிட்டு புதிய நகை வாங்குவதா அல்லது விற்காமலேயே புதிய நகையை வாங்குவதா, எனது வங்கி சேமிப்பிலிருந்து எவ்வளவு செலவு செய்வது, ஷோபா, குளிர்சாதனப் பெட்டி, வேலைக்காரி தேவையா வேண்டாமா போன்ற விசயங்களைத் தீர்மானிப்பது என் மனைவியே! (மனைவி கணவனைப் பார்த்து புன்முறுவல் செய்கிறார்)

கேள்வி: உங்களின் பங்களிப்புப் பற்றி உதாரணத்துடன் சொல்லுங்களேன்.

பதில்: மேற்சொன்ன சின்னசின்ன விசயங்களில் என் மனைவி எடுத்த முடிவை அப்படியே ஒப்புக் கொள்வேன். என்னுடைய முடிவுகள் பெரிய பெரிய விசயங்களில் மட்டுமே இருக்கும். உதாரணமாக, அமெரிக்கா ஈராக்கை தாக்க வேண்டுமா வேண்டாமா,ஜிம்பாப்வேக்கு எதிரான தடையை விலக்கிக் கொள்ள வேண்டுமா வேண்டாமா,ஆப்பிரிக்க பொருளாதாரத்தை விரிவாக்க வேண்டுமா வேண்டாமா, சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற வேண்டுமா வேண்டாமா போன்றவற்றைச் சொல்லலாம்! (மனைவிக்கு ஆனந்தக் கண்ணிர் அரும்புகிறது. பெருமிததுடன் கைக்குட்டையின் நுனியால் துடைக்கிறார்)

ஒன்று தெரியுமா சார் உங்களுக்கு! என் இந்த முடிவுகளை ஒருபோதும் என் மனைவி ஒருபோதும் மறுத்ததே இல்லை. இதுவே எங்கள் மகிழ்ச்சியான, வெற்றிகரமான மனவாழ்க்கைக்குக் காரணம்!

கேள்வி கேட்டவருக்கும் கண்ணீர் வருகிறது. ஆனந்தக் கண்ணீரல்ல கணவனின் நிலையை எண்ணி பரிதாபத்துடன் கண் கலங்குகிறார்.

குறிப்பு: இப்பதிவுக்கு போலிப்பெயரில் பின்னூட்டம் வந்தால் அது நிச்சயம் ஏதாவது பெண் பதிவராகத்தான் இருக்கும். :-))

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP