புரட்சித் தலைவிக்குச் சில ஆலோசனைகள்
Saturday, April 12, 2008
"தமிழக மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், சித்ரா பவுர்ணமி அன்று அ.தி.மு.க., உறுப்பினர்கள் வீடுகளில் விளக்கேற்ற வேண்டும்' என ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பான அறிக்கை விபரம்: சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, மின்சார தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு, மறைமுக பஸ் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு போன்ற பிரச்னைகளை சமாளிக்க முடியாமல் தமிழக அரசு ஸ்தம்பித்து நிற்கிறது. இனி தமிழகத்தில் ஒளி பிறக்காதா, இந்த நிலை மாறாதா என்ற கவலை மக்களை கவ்விக் கொண்டுள்ளது.
இருள் அகன்று ஒளி பிறக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தவும், அந்த ஒளியை உருவாக்க அ.தி.மு.க., இருக்கிறது என்ற எண்ணத்தை மக்கள் மனதில் ஏற்படுத்த வேண்டும்.
இதற்கு அடையாளமாக வரும், 19ம்தேதி சித்ரா பவுர்ணமி அன்று மாலை 6.30 மணிக்கு அவரவர் வீடுகளிலும், தங்களுக்கு சொந்தமான நிறுவனங்களிலும், கோவில்களிலும் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் குடும்பத்தோடு விளக்கேற்றி வைக்க வேண்டும்.
தீபம் ஏற்றி வைக்கும் நேரத்தில், "இருண்ட தமிழகத்தில் ஒளியேற்ற வாருங்கள் அம்மா' என்று கோஷமிட வேண்டும். இந்த முழக்கம் தமிழகம் முழுவதும் எழுப்பப்பட வேண்டும்.இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
http://www.dinamalar.com/2008apr12/political_tn1.asp
சித்ரா பவுர்ணமி அன்று மாலை 6:30 மணிக்குத்தான் விளக்கேற்றனும்னு சொல்லப்பட்டிருப்பதிலிருந்து அம்மாவின் ஆஸ்தான ஜோதிட சிகாமனி எவனாச்சும் சொல்லி இருப்பான்னு தெரியுது. இருந்தாலும் அதிரைக்காரன் சார்பில் அம்மாவுக்குச் சில ஆலோசனைகளைச் சொல்லிக் கொள்கிறேன். மொட்டைத்தலையுடன் ஆலோசனை சொன்னால்தான் எடுபடும் என்றால் அம்மாவுக்காக (ரத்தத்தின் ரத்தங்கள் சார்பில்) மொட்டை போடவும் தயார்!)
ஆலோசனை # 1: தமிழக மக்களுக்கு ஒருகிராம் தங்கக்காசு கொடுத்து அம்மாவின் பொற்கால ஆட்சி மீண்டும் வர சபதமெடுக்கச் சொல்லலாம்!
ஆலோசனை # 2: மின்சாரத் தட்டுப்பாட்டைச் சுட்டிக்காட்ட விளக்கேற்றுவது போல், பஸ்கட்டண உயர்வைச் சுட்டிக்காட்ட ஒருநாள் ஆட்டோ கட்டணம் கொடுக்கலாம்.
ஆலோசனை # 3: விலைவாசி உயர்வுக்கு எதிராக இலவச அரிசி,சர்க்கரை மளிகைப் பொருட்களை ஒருநாளைக்கு மட்டும் வழங்கலாம்.
ஆலோசனை # 4: பால்விலை உயர்வுக்கு எதிராக வீட்டுக்கு ஒரு கோமாதா கொடுக்கலாம்.
அம்மாவின் (மூட)நம்பிக்கையொளி ஏற்றும் கோரிக்கையை ஏற்று, ஏழை ரத்தத்தின் ரத்தங்களின் குடிசைகள் தீப ஒளியில் எரிந்துவிடாமலிருக்க உடன் பிறப்புக்கள் இலவசத் தண்ணீர் பந்தல்களை தமிழகமெங்கும் வைக்க வேண்டுகிறேன்.