Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

சில்லரை வணிகம் Vs. சில்லரை அரசியல்

Tuesday, October 16, 2012

"பணமென்ன மரத்திலா காய்க்கும்?" -  என, பேசாமடந்தை என்று பரிகசிக்கப்பட்ட நமது பிரதமரே வெகுண்டெழும் அளவு "சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டுக்கு அனுமதி" என்ற மத்திய அரசின் முடிவு குறித்த  விவாதங்கள் தேசிய அளவில்  எழுந்துள்ளன. இதன் பின்னணியில் சமூக,பொருளாதார காரணங்கள், புள்ளிவிபர ஒப்பீடுகளை எல்லாம் தாண்டி அரசியல் லாபநட்டக் கணக்கீடுகளே பிரதான காரணமாக இருக்கின்றன

அடுத்தடுத்த ஊழல் குற்றச்சாட்டுகளால் எதிர்கட்சிகளின் வசவுக்கு ஆளாகி நெருக்கடியில் தவிக்கும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, வரும் 2012 குளிர்கால கூட்டத்தொடரில் பெருத்த எதிர்ப்பைச் சந்திக்குமென்று எதிர் பார்க்கப்படுகிறது.இந்நிலையில் குஜராத் சட்டமன்ற தேர்தலைத் தொடர்ந்து 2014 மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ள நரேந்திர மோடிக்கு வசதியாக, காங்கிரஸைப் பலவீனப்படுத்த வேண்டிய கட்டாயம் பாஜகவுக்கு என்றால்,காங்கிரஸுடன் கூட்டணிவைப்பதுதவிர வேறு வழியில்லாத கம்யூனிஸ்டுகளுக்கும் காங்கிரஸின் பலவீனம் எதிர்கால பேரங்களுக்கு வசதியாக இருக்கும். இவையன்றி திமுக, சமாஜ்வாதி ஆகிய கட்சிகளுக்கும் காங்கிரஸுக்கு மூக்கணாங்கயிறு போட்டு வைத்துக் கடந்த முறை ஒதுக்கிய இடங்களையேனும் பெறமுடியும் என்ற கணக்கீடு.

இவற்றையெல்லாம் மறைத்து வைத்து,மக்கள் நலன் என்ற பெயரால் இருதரப்பினராலும் வைக்கப்படும் வெவ்வேறான வாதங்களால் பாமரர்கள் மட்டுமின்றி நன்குபடித்தவர்களும் குழம்பியுள்ளனர். ஆள்பவர்களால் சொல்லப்படும் ஆசை வார்த்தைகளும்,எதிர்ப்பாளர்களால் விதைக்கப்படும் அதீதஅச்சமும் நியாயமானவையா,   நாட்டு நலனுக்கு உகந்ததா என்று தெளிவுபெறும் நோக்கில் இருதரப்பு வாதங்களையும் அலசுவோம்.

உலகமயப் பொருளாதார முன்னெடுப்புகளைக் கடந்த 20 ஆண்டுகளாகச் செயல்படுத்தி 2020 ஆம் ஆண்டிற்குள் வல்லரசு நாடுகளில் ஒன்றாகிவிட வேண்டும் என, பொருளாதார சவால்களை எதிர்கொள்ள வேண்டி, நமது அண்டை நாடான சீனாவைப் போன்று 'சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடுகளை' அனுமதிப்பது என்ற முடிவு கடந்த செப்டம்பரில் மத்திய அரசால் உறுதியாக அறிவிக்கப்பட்டது.மின்சாரம், போக்குவரத்து மற்றும் சில்லரை வணிகத்திலும் நேரடி அந்நிய முதலீடுகளை அனுமதிப்பது என்ற முடிவில், சில்லரை வணிகத்திற்கு 51% அனுமதி வழங்கியது மட்டுமே எதிர்கட்சிகளில் எதிர்ப்புக்கு இலக்காகியுள்ளது.

'சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடை அனுமதிப்பது' என்ற மத்திய அரசின் முடிவு 2002 ஆம் ஆண்டில் பாஜக தலைமையிலான அரசில் தொழில்துறை அமைச்சராக இருந்த முரசொலி மாறனால் பரிந்துரைக்கப்பட்டது. அந்நிய முதலீடுகளை அனுமதிப்பதால் ரியல் எஸ்டேட்,குளிர்பதன சேமிப்பு (Refrigiration And Storage)  மற்றும் போக்குவரத்து  போன்ற துறைகள் வளர்ச்சியடைந்து,உள்நாட்டுச் சிறுதொழில் உற்பத்திகளுக்கு சர்வதேச சந்தை வாய்ப்புகளும் பெருகும். மேலும் வேலைவாய்ப்புகள் அதிகரித்து,சர்வதேசச் சந்தைப் போட்டிகளால் விலை குறைந்து நுகர்வோர் பெரிதும் பயன்பெறுவர்" என்பதால் சில்லரை வணிகத்தில் 100% நேரடி அந்நிய முதலீடுகளை அனுமதிக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டது! (சுட்டி-1)

சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடுகளை சீனா 1992  ஆம் ஆண்டிலும்,  பிரேஸில், மெக்ஸிகோ, அர்ஜெண்டினா ஆகிய நாடுகள் 1994 ஆம் ஆண்டிலும்,கொரியா 1996 ஆம் ஆண்டிலும்,தாய்லாந்து 1997 ஆம் ஆண்டிலும் இந்தோனேசியா 1998 ஆம் ஆண்டிலும் அனுமதித்துள்ளன.இவற்றில் ஓரிரு நாடுகளைத்தவிர ஏனைய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி வீதம் அதிகரித்துள்ளது. நமது அண்டை நாடான சீனா,ராணுவ/ஆயுத தளவாடங்கள் ரீதியாக உலகவல்லாதிக்க அரசாக விளங்கும் அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளிப் பொருளாதார வல்லரசாக விளங்குவதற்கு 30 வருடங்களுக்கு முன்பு திட்டமிடப்பட்ட வளர்ச்சியே காரணம் என்பதும், சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடை அனுமதித்ததும் முக்கிய காரணம் என்பது பொருளாதார வல்லுனர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று.

உலகின் பல நாடுகளைவிட இந்திய ஏற்றுமதி விகிதம் அதிகமாக இருந்தபோதும்,கனிசமான உள்நாட்டு வரிகளால் அரசுக்கு நிதி வந்தபோதும் ஒவ்வொரு ஆண்டும் பற்றாக்குறை பட்ஜெட்டையே எந்தக்கட்சி ஆட்சியிலிருந்தாலும் நிதியமசைச்சர் சமர்பிக்கிறார்.அரசுக்கு வரும் வருவாய்க்கும் செலவுகளுக்குமுள்ள இடைவெளியே பற்றாக்குறை பட்ஜெட்டுக்குக் காரணம். அரசு வழங்கும் மானியங்கள் மற்றும் இலவசங்களால் பெருமளவு அரசுச் செலவினங்கள் அதிகரிக்கின்றன. நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிப்பதன்மூலம் இந்த இலவசங்களும் மானியங்களும் நிறுத்தப் பட்டு அரசின் செலவுகளைக் கட்டுப்படுத்த முடியும்.

அரசின் அனேக சலுகைகளும்,இலவசங்களும்,மானியங்களும் விவசாயிகள்,மொத்த/சில்லரை வணிகர்கள் போன்ற குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே கிடைக்கின்றன. நாட்டின் உற்பத்தியையும் நுகர்வோரின் நலனையும் பேணும் வகையில் அரசு வழங்கும் சலுகைகளின் பலன் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே செல்வதால் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் தொடர்கின்றன. இதைச் சரிசெய்ய அரசு எடுக்கும் சில கசப்பான முடிவுகளில் சிலர் பாதிக்கப்பட்டாலும் பெரும்பாலோர் பயனடைவர் எனும்போது இத்தகைய முடிவுகள் தவிர்க்க முடியாதவை

நமது சில்லரை வணிக அமைப்பு இலாப நோக்கம் மட்டுமின்றி,சமூக உறவு,கலாச்சாரம் ஆகிய காரணிகளோடும் தொடர்புள்ளதாகவும்,வெளிநாட்டு நேரடிமுதலீடுகளால் அத்தகைய பாரம்பர்ய வணிக தொடர்புகள் சிதைவடையும் என்றும் எதிர்ப்பாளர்கள் காரணம் சொல்கிறார்கள்.அந்நிய நிறுவனங்களின் வருகையால் ஏற்கனவே அத்தகைய தொழிலில் ஈடுபட்டுள்ளோர் பாதிக்கப்படுவார்கள் என்பதும், வாங்குவோர்- விற்போரிடையேயான சுமூக பிணைப்பு அறுபடும் என்றும், உற்பத்திப் பொருட்களை வெளிநாட்டு முதலாளிகள் நிர்யணிக்கும் விலைக்கேவாங்கவேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் சொல்லப்படுபவை ஓரளவு உண்மை என்ற போதிலும்,அந்நிய முதலீடுகளால்மட்டுமே இவை சிதையும் என்பது சரியன்று.

நெல், கோதுமை, கரும்பு, வாழை, பருத்தி ஆகிய விவசாய உற்பத்திகளுக்கும்,பால்,மீன் போன்றவற்றுக்கும் விலை நிர்ணயிக்கும் உரிமை உழைப்பவனுக்கில்லை. வாங்குவோருக்கும் விற்போருக்கும் இடையில் இடைத்தரகர் என்ற மூன்றாம் நபர்கள் பலனடைகிறார்கள்.அரசு வழங்கும் விவசாயக் கடன்களுக்கு இயற்கை பொய்க்கும்போதும், சீறும்போதும் இழப்பீடுகளும், கடன்/வட்டியில் தள்ளுபடி போன்ற சலுகைகளும் உண்டு. இடைத்தரகர்களிடம் வாங்கும் கடன்களுக்கு விளைச்சலுக்கு முன்பே கந்துவட்டி பிடித்தம்போக அறுவடைக்குப் பின்பும் உழவனைக் கடனாளியாக்கி உழைத்தவனின் வயிற்றிலடிக்கும் கொடுமைக்காரர்களும் வட்டிகட்ட முடியாமல் தற்கொலைக்குத் துணியும் விவசாயிகளும் 51% அந்நிய முதலீடுகளுக்கு அனுமதிக்கப்பட்டிராத இந்தியாவில்தான் இலட்சக்கணக்கில் உள்ளனர்.

கிழக்கிந்தியக் கம்பெனி என்ற பெயரால் இந்தியாவுக்கு வந்தவர்களே நம்மை அடக்கி, அடிமையாக்கி ஆண்டார்கள் என்பதால் அந்நிய முதலீடுகளை அனுமதிப்பது அந்நியர்களுக்கு நாமே வழிவகுத்துக் கொடுப்பதாகி விடுமென்ற அதீத அச்சம், வரலாறு அறியாதாரின் வாதம் மட்டுமின்றி நமது ராணுவ, நீதிமுறைகளைக் குறைத்து மதிப்பிடும் செயலுமாகும்.அன்றைய அரசியல் சூழல்களுக்கும்,ஆட்சிமுறைக்கும் தற்போதைய நிலைக்கும் பெருத்த வேறுபாடு உள்ளது. பெண்ணையும் பொன்னையும் மன்னருக்குப் பரிசாக வழங்கிவிட்டால் அரசின் எந்தப்பகுதியையும் தாரை வார்க்கலாம். ஆனால்,தற்காலத்தில் பிரதமருக்குத் தரப்படும் பரிசும்கூட அரசின் சொத்தாகக் கருதப்படும் என்பதால் மீண்டும் அந்நியரிடம் அடிமைப்படுவோம் என்பது அறிவார்ந்த வாதமில்லை.

எதிர்ப்பவர்களின் காரணங்களில் ஒன்றில்கூடவா நியாயமில்லை என்ற ஐயம் எழலாம்;அவற்றை மறுக்கவில்லை. ஆனால், முறையான சட்டங்களியற்றி, சொல்லப்படும் காரணங்கள் அனைத்தையும் களைய முடியும் என்பதையும் மறந்து விடுகிறோம். மக்கள் நலனுக்காகவே எதிர்க்கிறார்கள் என்பதும் சரியில்லை. ஏனெனில், கூடங்குளம் அணு உலையை தீவிரமாக எதிர்க்கும் அப்பகுதி மக்களின் நலனை பொருட்படுத்தாதவர்கள்தாம் தற்போது மக்கள் நலன் குறித்துக் கவலைப்படுகிறார்கள்!

சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடுகளால் 4 -7% இருக்கும் சில்லரை வணிகர்களைவிட அல்லது இதனால் நேரடியாகப்  பயனடைந்து கொண்டிருக்கும் 4 கோடி வணிகர்களைவிட அதிக எண்ணிக்கையுள்ள பொதுமக்கள் பயனடைவர் என்பதே அண்டை நாடுகள் சொல்லும் உண்மை. அந்நிய முதலீடுகள் அனுமதிக்கப்பட்டதால் சீனா எந்த நாட்டுக்கும் அடிமையாகி விடவில்லை என்பதோடு 51% அந்நிய முதலீட்டுக்கும் எஞ்சியுள்ள 49% உள்நாட்டு முதலீட்டுக்கும் இடையேயான வித்தியாசம் 2% மட்டுமே. கடின உழைப்பாலும், அதிகமான ஏற்றுமதியாலும் அந்நிய நிறுவங்களைப் பின்னுக்குத்தள்ள முடியும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.சீனா இதை செயலளவில் நிரூபித்துள்ளது.

உலகம் உள்ளங்கைக்குள் சுருங்கிவிட்ட போதிலும் உலகின் ஒருபகுதியிலுள்ளவர்கள் உணவின்றி இறக்கின்றனர்.  இன்னொரு பகுதியிலோ உண்டது சீரணமாகுமுன்பே மறுவேளை உண்டுகொழுக்கிறார்கள். இவ்விடைவெளியைக் களைய பொருளாதாரச் சமநிலை வேண்டும். விளைச்சலில் பகிர்வு வேண்டும். உழுதவன் வியர்வை நிலத்தில் சொட்டும் முன்பே ஊதியம் வழங்கப்பட வேண்டும். உழைப்பை உறிஞ்சிக் கொழுக்கும் இடைத்தரகர்களும், கந்து வட்டிக் கயவர்களும் ஒழிந்து,நாடு வளம்பெற வேண்டும். 51% அந்நிய முதலீடுகளை அனுமதிக்கும் அரசின் முடிவு எதிர்க்கக்கூடிய ஒன்றன்று என்பதே இப்பதிவின்மூலம் சொல்ல விரும்பும் கருத்து.

ஜெய் அல் ஹிந்த்!

அன்புடன்,
அதிரைக்காரன்

சுட்டிகள்:
1) http://indiatoday.intoday.in/story/fdi-in-retail-sector-nda-bjp-murasoli-maran/1/162218.html
2) http://adirainirubar.blogspot.com/2012/02/blog-post_24.html
3) http://adirainirubar.blogspot.com/2012/10/blog-post_9.html
4) இனிய திசைகள்( அக்டோபர்-2012) - முனைவர் சேமுமு கட்டுரை
5) Wikipedia

Read more...

தமிழக அரசியலில் அற்புதம்! - அதிமுக-திமுக கூட்டணி ஆட்சி!!

Thursday, April 14, 2011

பணப்பட்டுவாடா செய்யவிடாமல் தேர்தல் கமிஷன் கொடுத்த கெடுபிடிகளால் தமிழக வாக்காளர்களுக்குச் செல்ல வேண்டிய பணம் கிடைக்கவில்லை. இதனால் வெருத்துப் போன வாக்காளர்கள் துரதிஷ்ட வசமாக சுயமாக முடிவெடுத்து கருத்துக்கணிப்புகள் எல்லாம் பொய்த்துப்போய் எந்தக்கூட்டணியும் ஆட்சி அமைக்குமளவு பெரும்பான்மை பெறவில்லை.

உறுப்பினர்களைவிட அதிகமான கோஷ்டிககளைக் கொண்டுள்ள தமிழக காங்கிரஸ் கட்சியால் இனி காமராஜர் ஆட்சிக்கு வாய்ப்பே இல்லை என்பதால் தங்கபாலுவை ஆளுநராக அறிவித்து மறைமுக காங்கிரஸ் ஆட்சி ஏற்படுதைத் தடுக்கும் நோக்கில் திமுக தலைவர் மு.கருணாநிதியும் அதிமுக தலைவி ஜெயலலிதாவுடன் கலந்தாலோசித்து திமுக-அதிமுக கட்சிகளை இணைத்து ஜெயலலிதா முதல்வராகவும் மு.க.ஸ்டாலின் துணை முதல்வர் என்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க அரசியல் அற்புதம் நடந்தேறுகிறது.

குழுக்களாகப் பிரிந்து கிடந்த திராவிடக்கட்சிகள் ஒன்றாகிவிட்டதால் இனி கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு தேவையில்லை என்று கூட்டணியிலிருந்து ஒவ்வொருவராகக் கழட்டிவிடப் படுகிறார்கள். ஜூன்-1,2011 இல் தமிழகத்தின் புதிய சட்டசபை தொடங்குகிறது. வைகோ பேரவைத் தலைவராக இருந்து வழிநடத்தும்படி கருணாநிதியின் அன்புவேண்டுகோள் ஏற்கப்பட்டு, தனது முதல் உரையைத் தொடங்குகிறார்.

வைகோ: ஏறத்தாழ 37 ஆண்டுகளுக்குப்பிறகு அண்ணாவின் ஆட்சி மீண்டும் மலர்ந்துள்ளது. பெரியார்,அண்ணா ஆவிகளுடனும், கலைஞரின் ஆசியுடனும் நடக்கும் நல்லாட்சியில் நான் அவைத் தலைவராக வீற்றிருப்பதில் உவகை கொள்கிறேன். மூதறிஞர் செந்தமிழ் காவலர் கருணாநிதி ஐயா அவர்களின் வாழ்த்துரையுடன் அவைநடவடிக்கைகளைத் தொடங்கலாம்.

கலைஞர்: மாண்புமிகு முதல்வர் அன்புச்சகோதரி ஜெயலலிதா அம்மையார் தலைமையில் தளபதி ஸ்டாலின் இணைந்து நாம் வாக்களித்தபடி எல்லா திட்டங்களையும் நிறைவேற்ற வேண்டும். இந்த ஆட்சியில் சேதுக்கால்வாய் தூர்வாரப்பட்டு கூடுதலாக நவீன ராமர் பாலமும் அமைக்கப்பட வேண்டும். இத்திட்டத்திற்கு "சேதுராமர் கால்வாய் பாலம்" என்று பெயரிடுகிறேன்.

ஜெயலலிதா: மாண்புமிகு மூதறிஞர் கருணாநிதி அவர்களின் திருவாயால் இத்திட்டத்திற்கு சேதுராமன் என்று பெயரிட்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. சகோ.ஸ்டாலினுடன் இணைந்து அடுத்த மூன்று மாதங்களுக்குள் இந்தப் பாலம் வழியாக வடஇலங்கைக்கு பெரியார்-அண்ணா நல்லுறவு பேருந்து செல்லும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஸ்டாலின்: மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா அம்மையார் சித்தப்பா M.G.R அவர்களின் பெயரையும் சேர்த்து வைத்திருந்தால் MGR ன் விசுவாசிகளான அண்ணன் பண்ருட்டியார் இன்னும் மகிழ்ச்சியடைந்திருப்பார். (தேமுதிகவில் சுதீஸ் கோஷ்டியால் ஓரங்கட்டப்பட்டதால் வேறுவழியில்லாமல் திராவிடக் குடும்பத்திற்கே திரும்பிவிட்டார்)

பண்ருட்டியார்: ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்குப் பிறகு நாம் எல்லோரும் ஒரே அணியாகியுள்ளோம். இதைக்காண 'வெள்ளை' எம்.ஜி.ஆர் நம்மோடு இல்லை என்பது வருத்தமாக உள்ளது. இனி எக்காரணம் கொண்டும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு கருப்பு பெயிண்ட் அடிக்க மாட்டேன்.

ஓ.பன்னீர் செல்வம்: துணைமுதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்களே, நமது மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் அடிக்கடி சுட்டுக் கொல்கிறார்கள். இதை எப்படி தடுத்து நிறுத்துவது என்று ஆலோசிக்கலாமா?

பொன்முடி: மாண்புமிகு கடற்பாசி வளத்துறை அமைச்சர் திரு.ஜெயக்குமார் அவர்கள்தான் இதற்கு வழி சொல்ல வேண்டும்.

ஜெயக்குமார்: மாண்புமிகு இலவசங்கள் துறை அமைச்சர் திரு.பொன்முடி அவர்களே. தமிழக மீனவர்களைச் சுடாத இலங்கை கடற்படைக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என்று அறிவிக்கலாம்.நிதியமைச்சர் பா.வளர்மதி இதற்கு ஒப்புக்கொள்வாரா?

பா.வளர்மதி: இலங்கை எல்லையில் அம்மா பெயரில் மிதக்கும் அரங்கம் ஒன்றை அமைத்து அதில் தினமும் கலைமாமணி நமீதாவின் தலைமையில் மானாட-மயிலாட நிகழ்ச்சிகளை நடத்தலாம். இதன்மூலம் இலங்கை கடற் படையினரின் கவனம் திரும்பும்போது,நமது மீனவர்கள் மீன் பிடித்து விட்டு பத்திரமாகத் திரும்பி விடலாம்.

செங்கோட்டையன்: ஊய்ய்.(விசில்.) சரியான திட்டம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதுபோல் ஒரே கல்லில் இரண்டு மீன்கள்! எப்படியோ இனி மீனவர்கள் உயிரோடு திரும்பினால்தான் ஆட்சிக்கு நல்லபேர் கிடைக்கும்! வாழ்க புரட்சித் தலைவி!

ஜெயலலிதா: அன்புத் தம்பி செங்ஸ் அவர்கள் சகோதரி பா.வளர்மதியை புரட்சித் தலைவி என்று தவறுதலாகச் சொல்லியிருக்கக்கூடும்.மாண்புமிகு அவைத் தலைவர் அவர்கள் அதை அவைக்குறிப்பிலிருந்து நீக்கிவிடும்படி உத்தரவிடுகிறேன்.

கலைஞர்:புரட்சித்தலைவி என்ற பட்டப்பெயரை சகோதரி ஜெயலலிதாதவிர வேறு யாருக்கும் கொடுப்பதை பார்த்துக்கொண்டு இந்த கருணாநிதி வ்சனம் எழுதிக்கொண்டு சும்மாயிருப்பானென்று யாரேனும் மூடநம்பிக்கைகொண்டு வைத்திருந்தால், தயவு செய்து அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.

ஜெயலலிதா: மூதறிஞர் மு.கருணாநிதி அவர்கள் தனது ஓய்வுக்காலத்தை சினிமா பார்த்துக் கழிக்காமல் தனது பார்புகழ் செம்மொழிப் புலமைகொண்டு 'புரட்சித்தலைவி புராணம்' எழுதினால் வருங்கால சந்ததிகள் பயன்பெறுவர் என்று மாண்புமிகு ஓ.பன்னீர்செல்வம் விரும்புகிறார் என்று நினைக்கிறேன்.

ஓ.பன்னீர்செல்வம்: மாண்புமிகு அம்மாவைவிட எனது எண்ணங்களைப் புரிந்தவர் எனக்குத் தெரிந்து யாருமில்லை.இதுபற்றி சகோ.ஸ்டாலினுடன் நேற்றே பேசினேன்.இதற்கான சிறப்புத் தீர்மானத்தை தம்பி திருமாவளவன் கொண்டுவந்தால் எவ்வித பரிசீலனையுமின்றி நடவடிக்கை எடுக்கலாம் என்று ஆட்சிப்பொறுப்பேற்கும் முன்பே ஒப்புதல் வழங்கிவிட்டார்.

ஜி.கே மணி (ஸ்...ஜால்ரா சத்தம் காதைப் பிளக்கிறது.) விஜய.T.R..சிலம்பரசன் மற்றும் நடிகர் தனுஷ் இணைந்து புதுக்கட்சித் தொடங்கப் போவதாக செய்தி வந்துள்ளதே அதுபற்றியும் பேசலாமே!

மு.கருணாநிதி: சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது. மீறிவந்தால் அரசியல்வாதிகள் சினிமாவிலும் 'நடிக்க' வேண்டிவரும் என்று பொதுவான எச்சரிக்கையை தம்பி கீ.வீரமணியிடம் சொல்லி விடுத்தால் தமிழினத்திற்கு நல்லது என்று நினைக்கிறேன்.

ஸ்டாலின்: அப்படிச்சொன்னால் உடன்பிறவா அன்புச் சகோதரி கற்புக்கரசி குஷ்பு வருத்தப்பட மாட்டாரா? அப்புறம்,சினிமாவளத்துறை அமைச்சர் தம்பி சரத்குமாரும் கோவிச்சுப்பார்.ஆகவே இப்பிரச்சினையை ஆறப் போடலாம்.

சுயேட்சையாகப் போட்டியிட்டுவென்ற டாக்டர் ராமதாஸ் இதைக்கேட்டதும் அவையிலிருந்து வெளிநடப்புச் செய்கிறார். பாமகவிலிருந்து விலக்கப்பட்ட டாக்டர் அன்புமணியும் கூடவே வெளிநடப்புச் செய்கிறார்.

அன்றைய அவை நடவடிக்கைகள் அனைத்தும் ஜால்ரா மயமாக இருந்தது. டாக்டர் ராமதாஸ் அன்புமணி தலைமையில் 2031 இல் ஆட்சிக்குவரும்வரை இனிமேல் அவைக்கு வரப்போவதில்லை என்றும் மீறி வந்தால் டாஸ்மாக் பாட்டிலால் என்னை அடியுங்கள் என்று சொல்லிவிட்டு அரசியல் துறவரம் போனதாக அரசு தொலைக்காட்சியான 'சன் நியூஸ்' தெரிவிக்கிறது.
*************
தமிழக அரசியல் உப்புசப்பு இன்றி போனதால் ஜூனியர் விகடன், நக்கீரன் ஆகிய பத்திரிக்கைகள் "30 நாட்களில் சரளமாக ஆங்கிலம் பேசுவது எப்படி? "நக்கீரனின் கீரை வகைக் குழம்புகள்" போன்ற புத்தகங்களை வெளியிட்டு காலம்தள்ள முடிவு செய்துள்ளன.அதேபோல் சாட்டிலைட் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் எந்த பரபரப்புமின்றி உழவர்உலகம்,கல்வி வழிகாட்டி போன்ற் நிகழ்ச்சிகளை மட்டுமே ஒளிபரப்பின.வலைப்பூக்களில் "விடைபெறுகிறேன்" என்ற தலைப்பிட்ட பல பதிவுகள் பின்னூட்டமின்றி காணப்பட்டன.

பிரபல ?!வலைப்பதிவர் அதிரைக்காரணுக்கு தமிழக அரசு வலைமாமணி விருது வழங்கி, அவரின் பதிவுகளை தமிழக பாடநூல் திட்டத்தில் சேர்த்துக் கொள்ளத் திட்டமிட்டு உள்ளதாகவும் அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது! :)

பி.கு: ஒருமாத அரசியல் களேபரங்களையும், எந்தக் கட்சிக்கு வெற்றிவாய்ப்பு என்ற ஜோதிட கணிப்புகளை கொஞ்சகாலம் மறக்க வேண்டி எழுதப்பட்டது. உண்மையில் இது நடந்து விட்டால் நான் வலைப்பதிவு எழுதுவதையே விட்டுவிடுவேன்!

Read more...

ஏழையின் சின்னம் செருப்பு

Sunday, April 19, 2009

தொண்டர் (1): செருப்பு போடாம தலைவர் பிரச்சாரத்துக்குப் போறாரே! அவ்வளவு எளிமையானவரா?

தொண்டர் (2): அதெல்லாமில்லே! பிரச்சாரதுல எப்படியும் செருப்பு வந்து விழும்ங்கற நம்பிக்கைதான்!

****
தொண்டர் : தலைவரே! பொதுக்கூட்டத்துக்குப் போகாம தவிர்ப்பது நல்லது.

தலைவர் : ஏன் என்னாச்சு?

தொண்டர் : தொகுதி மக்கள் எடைக்குஎடை செருப்பு தரத் திட்டமிட்டிருக்கிறார்களாம்!

****

தொண்டர் (1): தேர்தல்ல தோத்துப்போன நம் தலைவர் இப்ப என்ன செய்றார்?

தொண்டர் (2): செருப்புக்கடை வச்சிருக்கிறார்!

****
தொண்டர் (1): காலில் விழுந்து ஓட்டுக் கேட்கும் நம்தலைவர் ஏன் காலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்?

தொண்டர் (2): தலைவர்மேல செருப்புவீச முயற்சி செஞ்சதைப் பார்த்துட்டார்.

****
தொண்டர் (1): தலைவருக்கு டெப்பாசிட் போனாலும் நஷ்டமில்லே!

தொண்டர் (2): எப்படி?

தொண்டர் (1): அவர்மேல விழுந்த செருப்புக்களை விற்று ஈடுகட்டிடார்!
****

தொண்டர் (1): என்னதான் இருந்தாலும் எதிர்க்கட்சியினர் நம்மத் தலைவரை மிஞ்ச முடியாது!

தொண்டர் (2): எதை வச்சு சொல்றே?
தொண்டர் (1): நம்ம தலைவருக்கு அவங்களைவிட ஒரு செருப்பு அதிகமா விழுந்திருக்காம்!
****

இப்பதிவுக்குச் சம்பந்தமில்லாத செய்தி

Read more...

விஜய T.ராஜேந்தர் சிறப்புப் பேட்டி!

Wednesday, January 09, 2008


நேற்று நெல்லை மாவட்டத்தில் கட்சிக் கொடியேற்றி முடித்துவிட்டு தாடியைத் தடவிக் கொண்டிருந்த விஜய T.ராஜேந்தர் 'வெட்டிப் பேச்சு'க்கு அளித்த சிறப்புப் பேட்டி!


அதிரைக்காரன்: என்னா சார்! தாடி வெளுக்காமல் அப்படியே 'கரு.கரு'ன்னு வளர்ந்திருக்கு.


விஜய.T.R: நான் 'கரு'ணாநிதியே கதி என்று இருப்பதால் என் முடியும் 'கரு-கரு' என்று இருக்கின்றன போலும்!


அதிரைக்காரன் : உங்கள் கட்சி நிலவரம் எப்படி இருக்கிறது?


விஜய.T.R: பெரும் நஷ்டத்தில் இருக்கிறது. இந்தக் கொடியைக்கூட என் சொந்த செலவில்தான் வாங்கி வந்தேன் என்றால் நிலமை எப்படி இருக்கும் என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன். கண்டவன் பின்னாடியும் அலையுறதாலதன் தமிழ்நாடு வல்லரசாக முடியலே! நாங்க ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை வல்லரசாக மாற்றுவோம்

அதிரைக்காரன்: சிலம்பரசாகவோ குறளரசாகவோ மாற்றாமல் விட்டால் சரி! அப்புறம் விஜயகாந்த் உங்களுக்குப் போட்டியா?


விஜய.T.R: எனது ஆஸ்தான குடும்ப சோதிடர் சொன்னபடி என் பெயருடன் 'விஜய' என்று சேர்த்துக் கொண்டுள்ளேன். சொல்லப் போனால் நான்தான் விஜயகாந்துக்குப் போட்டி!


அதிரைக்காரன்: உங்கள் கட்சியின் இலட்சியம் என்ன?


விஜய.T.R: ஊழல் குற்றச்சாட்டு இல்லாதவரை முதல்வராக்குவதே எங்கள் கட்சி முக்கியஸ்தர்களின் இலட்சியம்.என் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. இனி வரும் தேர்தல்களில் எங்கள் கட்சி ஆதரவில்லாமல் யாரும் ஆட்சியமைக்க முடியாது என்பதை பொறுத்திருந்து பாருங்க! இதைச் சொல்றது விஜய. டி.ஆருங்க!

அதிரைக்காரன்: உங்கள் கட்சி முக்கியஸ்தர்கள் யார் யார்?


விஜய.T.R: உ.வி.டி.ஆர்,ரா.சி.,ரா.கு.மற்றும் பலர்.!


அதிரைக்காரன்: என்னா சார் புதுப்புது பேரா இருக்கு? இவங்கல்லாம் யாருன்னு கொஞ்சம் விளக்க முடியுமா?


விஜய.T.R: இதுக்குத்தான்யா அரசியல் அரிச்சுவடி தெரியாத தத்தக்கா பித்தக்கா நிருபர்களுக்குப் பேட்டி கொடுக்கக் கூடாது. உ.வி.டி.ஆர்=உஷா விஜய டி.ராஜேந்தர், ரா.சி= சிலம்பரசன், ரா.கு= குறளரசன்!


அதிரைக்காரன்: உங்கள் மகள் இலக்கியா பெயரைக் காணோமே! அவங்களுக்கு அரசியல் பிடிக்காதா?


விஜய.T.R: அவங்களுக்கு அரிசியல்தான் பிடிக்கும். காலத்தின் கட்டாயத்தால் மத்திய அரசில் காபினட் அமைச்சராகும் வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே நிச்சயமாக கட்சித் தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று அரசியலுக்கு வருவார் என்று நம்புகிறோம்!


அதிரைக்காரன்: நீங்கள் தீவிர அரசியலில் இறங்கி சினிமாவுக்கு முழுக்குப் போடுவீர்களா?


விஜய.T.R: அரசியல்வாதிகளிடம் போய், நீங்கள் தீவிர சினிமாவில் இறங்கி அரசியலுக்கு முழுக்கு போடுவீர்களா?என்று கேட்பீரா? அவரவருக்கு எதில் லாபமோ அந்தத் தொழிலைச் செய்துவிட்டுப் போகட்டுமே.


அதிரைக்காரன்: அப்படீன்னா அரசியல் கட்சி நடத்துவது தொழில் என்கிறீர்களா?


விஜய.T.R: என் அனுபவத்தில் நான் அப்படித்தான் கருதுகிறேன். கலைச் 'சேவை' செய்வதாகச் சொல்லி சினிமாக்காரர்கள் சம்பாதிக்க வில்லையா? அதுமாதிரிதான் அரசியலும். நானெல்லாம் ஒரு கொள்கையோடு அரசியலுக்கு வந்தவன்.


அதிரைக்காரன்: ஓஹோ! உங்கள் கட்சியின் கொள்கைதான் என்ன?


விஜய.T.R:எக்காரணம் கொண்டும் கொள்கையை விட்டுக் கொடுக்க முடியாது.எங்கள் கொள்கையைச் சொல்லி விட்டால் "ப்பூ" இதானா என்று மற்றவர்கள் இளக்காரமாக நினைந்து விடக்கூடும் என்பதால் அதை தற்போதைக்குச் சொல்ல முடியாது.நேரம் வரும்போது நிச்சயம் சொல்வேன்!


அதிரைக்காரன்: மோடி, ஜெயலலிதா வீட்டில் பொங்கல் சாப்பிட வருகிறாரே! அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?


விஜய.T.R: தமிழனின் முக்கிய டிஃபன் பொங்கல்.மற்றவர்களும் பொங்கலை விரும்பபினால் தமிழனுக்குப் பெருமைதானே! அதே போல், நரேந்திர மோடி ஜெயலலிதாவை குஜராத்துக்கு அழைத்து பாணிபூரி கொடுக்க வேண்டும்.


அதிரைக்காரன்: பொங்கலும் பாணிபூரியும் சேர்ந்தால் உருப்படுமா? வழக்கமா ஜெயலலிதா வடநாட்டு அரசியல்வாதிகளுக்கு அல்வா தான் கொடுப்பார். சமீபத்தில் மூன்றாவது அணி என்று சொல்லி நிறைய பேருக்கு அல்வா கொடுத்தார்.சென்ற சட்டமன்றத் தேர்தலில் உங்களுக்கும் கூட அல்வா கொடுத்தார்!


விஜய.T.R: ஜெயலலிதா மட்டுமா எனக்கு அல்வா கொடுத்தார். அதென்னமோ தெரியவில்லை என்னை பார்த்தாலே எல்லோருக்கும் அல்வா கொடுக்கத் தோன்றுகிறது.(கண்கலங்குகிறார்!) பிறகு ஆவேசமாக,


என் பேரு VTR
என் உண்மையான தலைவன் பேரு MGR
நானும் ஒருநாள் ஆவேன் முதல்வர்
எனக்குப் பின்னாடி என்னிரு புதல்வர்
நீ ஒரு வெட்டி! - ஒனக்கெல்லாம்
இனி கிடையாது பேட்டி!!
ஏய் டண்டனக்கா! ஏய் டண்டனக்கா!
எடத்தக் காலிபண்ணு மக்கா!
எக்கா!

பின்குறிப்பு: விரைவில் விஜய டி.ராஜேந்தர் இளைஞர்களைத் திரட்டி மாநாடு நடத்த இருக்கிறார். கலந்து கொள்ள விருப்பமுள்ள இளைஞர்கள் பின்னூட்டத்தில் முன்பதிவு செய்யலாம்!

Read more...

சுடச்சுட 'உள்குத்துச்' செய்திகள்

Wednesday, March 07, 2007

பதிவின் சாரத்தை தலைப்பே சொல்கிறது. இனி அனானிகளுக்குக் கொண்டாட்டம்தான் போங்க!

1) நேபாளி கூர்க்காவாகலாம்! இந்திய எம்.பி ஆக முடியுமா?

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி. மோனி குமார் சுப்பா. இவர் தேஸ்பூர் தொகுதியில் இருந்து பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கிறார்.

ஆனால் இவர் நேபாளம் நாட்டை சேர்ந்தவர் என்றும், அங்கு ஒரு குற்றத்துக்காக, 1971-ம் ஆண்டு, ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டவர் என்றும் எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. (நம் நாட்டில் தண்டணை விதிகப்பட்டவர்கள் நேபாளத்தில் தேர்தலில் நிற்கலாம் என்று ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாம்!) அவர் நேபாளத்தில் இருந்து, அசாம் மாநிலத்துக்குள், சட்டவிரோதமாக வந்து, அங்கு லாட்டரி வியாபாரம் செய்து பெரிய தொழில் அதிபர் ஆனார் என்றும் கூறப்படுகிறது. அவர் முதலில் சட்டமன்ற உறுப்பினராகவும், பின்னர் பாராளுமன்ற உறுப்பினராகவும் ஆனார் என்று குற்றச்சாட்டு கூறப்பட்டு இருக்கிறது. (இதைத்தான் அரசியலில் படிப்படியாக முன்னேறுவது என்பார்கள்!)
இந்த பிரச்சினையை, டெல்லி மேல்-சபையில், திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜனதா, சமாஜ்வாடி, மற்றும் கம்யூனிஸ்டு உறுப்பினர்கள் எழுப்பினார்கள். அவர்கள் பேசியதாவது:-

பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சுப்பா, இந்தியாவை சேர்ந்தவரா? அல்லது வெளிநாட்டை சேர்ந்தவரா? என்ற கேள்வி எழுந்து இருக்கிறது. அவர் நேபாளத்தை சேர்ந்தவர் என்பதை டி.வி. சேனல் ஒன்று தெளிவு படுத்தி இருக்கிறது.

அயல் நாட்டை சேர்ந்த ஒரு குற்றவாளி, இந்தியாவில் 2 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், 3 முறை பாராளுமன்ற உறுப்பினராகவும் ஆகி இருக்கிறார். அவர் இந்திய அதிகாரிகளை 30 ஆண்டுகளுக்கு மேலாக ஏமாற்றி இருக்கிறார். அவர் நேபாள நாட்டின் குடி உரிமை பெற்றவர்.

அவர் தனது வயது, பிறந்த இடம், கல்வித்தகுதி ஆகியவற்றை மறைத்து, வேட்பாளர் பத்திரத்தில் தவறான தகவல்களை கொடுத்து இருக்கிறார். இதுபற்றி இந்த சபையில் விவாதிக்க வேண்டும். இவ்வாறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசினார்கள்.

இதற்கு சபைத்தலைவர் பொறுப்பில் இருந்த உதவி தலைவர் ரெஹ்மான்கான் அனுமதி மறுத்தார். இது குறித்து அவர் கூறியதாவது:-

இந்த பொருள் பற்றி, (காங்கிரஸ் எம்பியைச் சொல்லவில்லை! விவாதப் பொருள் என்று படிக்கவும்) இந்த சபையில் விவாதிக்க முடியாது. குற்றம் சாட்டப்பட்டவர், இந்த சபையின் உறுப்பினர் அல்ல.அவர், பாராளுமன்றத்தின் உறுப்பினராக இருக்கிறார். மேல்சபை உறுப்பினராக இருந்தால், இங்கு விவாதிக்கலாம். என்றாலும், இதுபோன்ற பிரச்சினையை விவாதத்துக்கு கோரும் முன், இதுபற்றிய நோட்டீசை சபைத்தலைவருக்கு கொடுக்க வேண்டும் என்பது விதி. இவ்வாறு துணைத்தலைவர் கூறினார்.

இந்த பிரச்சினை பற்றி, டெல்லியில் பா.ஜனதா மூத்த தலைவர் வாஜ்பாய் தலைமையில் நடந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதுபற்றி பாராளுமன்றத்தில் பேசுவது என்றும், இந்த பொருளை, உரிமைக் குழுவுக்கு அனுப்ப கோருவது என்றும் முடிவு செய்யப்பட்டது. (எதிர்கட்சித் தலைவர் அத்வானி, இந்த விசயத்தில் அடக்கிவாசித்தால் நல்லது! அய்யாவுக்கு சொந்த ஊர் கராச்சி!!)

காங்கிரஸ் எம்.பி. எம்.கே. சுப்பா இந்தியரா? நேபாளியா? என்று கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு ஒன்றும் விசாரணையில் இருந்து வருகிறது. இந்த வழக்கில் ``சுப்பா, தனது குடியுரிமையை நிரூபிக்கும் தஸ்தாவேஜுவை ஏப்ரல் 21-ந் தேதிக்குள் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்'' என்று கோர்ட்டு உத்தரவிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. (நல்லதாப் போச்சு ஏப்ரல்-1 ஆம் தேதியன்று என்று சொல்லாமல் விட்டார்களே!)
http://www.dailythanthi.com/article.asp?NewsID=320540&disdate=3/8/2007

2) காங்கிரஸ் கட்சியை கல்லரையிலும் வளர்க்கத் திட்டம்!

3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துபோன காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு கட்சிப் பதவி தொண்டர்கள் அதிர்ச்சி!(மேலோகப் பதவி அடைந்தவருக்கு தவறாகப் புரிந்து கொண்டு கட்சிப் பதவி கொடுத்திருக்கிறார்களோ?) இறந்துபோன எம்.எல்.ஏ.வுக்கு காங்கிரஸ் கட்சியில் தேர்தல் பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளதை அறிந்த தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பெல்காம் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியை வளர்ப்பதற்காக கட்சியில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். காங்கிரஸ் கட்சியின் பல்வேறு பிரிவுகளுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு உறுப்பினரும், பெல்காம் மாவட்ட காங்கிரஸ் கட்சியில் தேர்ந்து எடுக்கப்பட்ட தலைவருமான என்.எஸ். ரத்னபிரபா புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறார்.

இந்தநிலையில் பெல்காம் மாவட்டத்தில் உள்ள மால்மருதி வட்டத்துக்கு காங்கிரஸ் கமிட்டியின் தேர்தல் பொறுப்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. ஜி.கே.தாக்கத் பெயரும் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை கேட்டதும் பற்றுள்ள காங்கிரஸ் தொண்டர்களுக்கு பேரதிர்ச்சி அடைந்தனர். ஆகா கட்சியை இனி ஆண்டவனாலும் கூட காப்பாற்ற முடியாது என்று மாவட்ட தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்கள்.

இதற்கு காரணம் அந்த பொறுப்பாளர் மீது தொண்டர்களுக்கு இருந்த வெறுப்பு கிடையாது. ஆனால் அந்த முன்னாள் எம்.எல்.ஏ. இறந்து 3 ஆண்டுகள் ஆனபிறகு அவருக்கு காங்கிரஸ் கட்சியில் அவரை தேடிப்போய் பதவி கொடுத்து இருக்கிறார்களே என்று தொண்டர்களுக்கு ஆதங்கம்.

பெல்காம் மாவட்டத்தில் 'சவுத்தி' என்ற சட்டமன்ற தொகுதியில் இருந்து காங்கிரஸ் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினராக முன்பு தேர்ந்து எடுக்கப்பட்டவர்தான் ஜி.கே.தாக்கத். அவர் இறந்து 3 ஆண்டுகள் ஆனபிறகு கட்சியில் பதவி கொடுத்து இருப்பதுதான் வேடிக்கை.

அதேபோல் காங்கிரஸ் கட்சியிலும் ஒரு பதவி மாற்று கட்சியிலும் ஒரு பதவி வழங்கப்பட்டுள்ள அரசியல் வேடிக்கை நிகழ்ச்சியும் இதே பெல்காம் மாவட்டத்தில் நடந்துள்ளது. சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி மதசார்பற்ற கட்சியில் தன்னை இணைத்துக்கொண்ட உமாதேவி தோப்பன்னவர் என்பருக்கும் காங்கிரஸ் கட்சியில் பதவி வழங்கப் பட்டுள்ளது. அதேபோல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சோபா என்பவருக்கு கட்சிக்குள்ளே இருவேறு இடங்களில் இரட்டை பதவி கொடுத்து தொண்டர்களை ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதே மாவட்டத்தில் ஆஷாகோரே, பி.எஸ்.ஷில்பா மற்றும் சுனிதாசர்வான் ஆகியோருக்கும் இருவேறு இடங்களில் இரட்டை பதவிகள் வழங்கப் பட்டுள்ளன. மாவட்ட தலைவரின் இந்த அரசியல் குழப்படியை பார்த்து தொண்டர்கள் ஆச்சரியமும், ஆவேசமும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=320753&disdate=3/8/2007

ஊழல் பேர்வழிகளை பொதுமக்கள் முன்னிலையில் மின்கம்பத்தில் தூக்கில் போட வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டு நீதிபதி கூறினார். நாட்டில் எங்கு பார்த்தாலும் ஊழல் உள்ளது. ஊழலில் இருந்து எதுவுமே தப்பவில்லை.ஒவ்வொருவரும் இந்த நாட்டை கொள்ளையடிக்க விரும்புகின்றனர். (இதைத்தானே ஜனநாயகம் என்கிறோம்!) இந்த ஆபத்தில் இருந்து நாட்டை காப்பாற்ற ஒரே வழி, ஊழல் பேர்வழிகளில் சிலரை, பொதுமக்கள் முன்னிலையில் மின்கம்பத்தில் தூக்கில் போட வேண்டும். இது மற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக அமையும்.

எனினும் இதை செய்ய சட்டம் எங்களை அனுமதிக்கவில்லை. இல்லாவிட்டால் ஊழல் பேர்வழிகளை மின்கம்பத்தில் தூக்கில் போட உத்தரவு போட்டு விடுவோம்.

ஊழல்வாதிகளை மின்கம்பத்தில் தூக்கில் போட வேண்டும் என்று கூறிய நீதிபதி ஆப்கானிஸ்தானில் தலிபான்களால் நியமிக்கப்பட்டவர் அல்ல! முன்பு சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதியாக இருந்த மார்க்கண்டேய கட்ஜு என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=320763&disdate=3/8/2007

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP