மதுரைக்காரர்கள் கைது செய்யப்படுவார்கள்!!! - தினமலர்
Sunday, April 08, 2007
மதுரை நகரில் பொதுமக்களுக்கு இடையூறாக பிச்சை கேட்பவர்கள் நாளை (ஏப்.9) முதல் கைது செய்யப்படுவார்கள் என போலீஸ் கமிஷனர் சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார். மதுரை நகர் போலீஸ் கன்ட்ரோல் ரூமில் பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் ஜவஹர், போலீஸ் கமிஷனர் சுப்பிரமணியன், சமூக நல அலுவலர் ஜெயலட்சுமி, டாக்டர் ராமசுப்பிரமணியன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.
பிச்சைக்காரர்களிடம் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டு அரைமணிநேரத்தில் மத்திய பஸ் ஸ்டாண்ட், மேலவெளிவீதியில் பிச்சை எடுத்த 25 பேர் போலீசாரால் "பிடித்து' கொண்டு வரப்பட்டனர். அவர்களுக்கு பிஸ்கட், பன் மற்றும் காபி வழங்கப்பட்டது. பிச்சைக்காரர்களிடம் விசாரணை: பிச்சை எடுத்த ராமநாதபுரம் மாவட்டம் அபிராமத்தைச் சேர்ந்த கண் தெரியாத லீலா(65), சகோதரர் நாராயணன்(70) ஆகியோர் தங்களை பள்ளிவாசலில் சேர்த்து விட்டால் "பிழைத்துக்' கொள்வோம் என்றனர். மதுரை சக்கிமங்கலத்தைச் சேர்ந்த முத்துமாரி(21) பிச்சை எடுத்தே வளர்ந்துள்ளார். திருமணம் ஆகாமல் ஒரு குழந்தைக்கு தாயாகி உள்ள அவர், அக்குழந்தையை வைத்து பிச்சை எடுத்து வருகிறார். தனக்கு வேலை கொடுத்தால் செய்வேன் என்றார்.
கணேசன் என்ற ஊனமுற்ற நபர், வயதான பெற்றோரை காப்பாற்ற தினமும் நத்தத்திலிருந்து வந்து பிச்சை எடுத்துச் செல்கிறார். இவருக்கு பசுமாடுகள் வழங்கி வேலை வாய்ப்பு கொடுக்க முடிவு செய்யப்பட்டது. இதேபோல் 10க்கும் மேற்பட்ட பிச்சைக்காரர்களிடம் விசாரணை நடத்தினர். தங்களுக்கு தினமும் ரூ.50 முதல் ரூ.100 வரை வருவாய் கிடைப்பதாக அவர்கள் கூறினர். மறுவாழ்வு கவுன்சிலிங்: பிச்சைக்காரர்களுக்காக பெருங்குடி அருகே தனது ஐந்தரை சென்ட்டில் இல்லம் அமைக்க தயார் என்று மாதா பிதா உலக அமைதி சாரிடபிள் டிரஸ்ட் தலைவர் ஜெயசந்திரன் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
பின்னர் கலெக்டர் ஜவஹர் கூறுகையில்,"பிச்சைகாரர்கள் குறித்து சமுதாய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். அவர்களுக்கு கவுன்சிலிங் நடத்தி மறுவாழ்வுக்கு தேவையான அரசு உதவிகள் செய்து தரப்படும். குழந்தையை வைத்து பிச்சை எடுப்பவர்கள் மீதும், பிச்சை எடுப்பதை தொழிலாக செய்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பிச்சைக்காரர்களுக்காக மதுரையில் இல்லம் அமைக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது' என்றார்.
கமிஷனர் சுப்பிரமணியன் கூறுகையில்," கணக்கெடுப்பில் 120 பிச்சைக்காரர்கள் ஆதரவற்ற இல்லத்தில் சேர முன்வந்துள்ளனர். 80 பேர் விரும்பவில்லை. பிச்சைக்காரர்களில் 17 பேர் குருடர்கள், 29 பேர் உடல் நிலை பாதிக்கப்பட்டவர்கள், 4 பேர் தொழு நோயாளிகள், 6 பேர் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். வரும் திங்கட்கிழமை முதல் (ஏப்.9) பொதுமக்களுக்கு இடையூறாக பிச்சை எடுப்பவர்கள் கைது செய்யப்படுவர். முக்கிய இடங்களில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்படும். இவர்கள் குறித்து போலீஸ் கன்ட்ரோல் ரூமிற்கு தகவல் தெரிவிக்கலாம்' என்றார்.