மும்பை தாக்குதலுக்கு யாருமே காரணமில்லை?!

Wednesday, January 14, 2009


மும்பை தாக்குதல் குறித்து என்னென்ன ஆதாரங்களை இந்தியா சார்பாக பிரனாப் முகர்ஜி கொடுத்திருப்பார் என்று சரிவரத் தெரியவில்லை. அவற்றை வெறும் தகவல்களே என்று பாகிஸ்தான் சொல்லியிருப்பதால் அடுத்த பாராளுமன்றத் தேர்தல்வரை இதைவைத்தே எஞ்சிய நாட்களை காங்கிரஸ் அரசாங்கம் ஓட்டிவிடும் என்பது மட்டும் உறுதி. இதுசம்பந்தமாக பிரனாப் - சர்தாரி என்ன பேசியிருப்பார்களென்று ஒரு கற்பனை உரையாடல். (இது உண்மையாகவே இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை ;-)

பிரனாப்: தாக்குதல் இந்தியாவில் நடத்தப்பட்டுள்ளதால் நிச்சயமாக அதைப் பாகிஸ்தானே செய்திருக்கும் என்பதே காலங்காலமாகச் பின்பற்றப்படும் நடைமுறை! நாங்கள் சொல்வதற்கு முன்பே மோடியும் அத்வானியும் இதை உடனடியாக உறுதி செய்து விட்டார்கள்.

சர்தாரி: அப்படியென்றால் எங்கள் நாட்டில் நடக்கும் குண்டு வெடிப்புகளுக்கு இந்தியாதான் காரணம் என்று நாங்களும் பதிலுக்குச் சொன்னால் ஒப்புக் கொள்வீர்களா?

பிரனாப்: தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் கடல்வழியாக கராச்சியிலிருந்து விரைவுப் படகில் வந்ததை எங்கள் நாட்டு மீனவர்கள் பார்த்திருக்கிறார்கள்.

சர்தாரி: இந்தியாவுக்கு ரயில் வழியாக சிரமமின்றி வரமுடியும்போது எதற்கு அவர்கள் படகில் கஷ்டப்பட்டு வரவேண்டும்? கொஞ்சமாவது லாஜிக்காகப் பேசுங்கள் பிரனாப்ஜி.

பிரனாப்: பிடிபட்ட அஜ்மல் கஸாப் பாகிஸ்தானைச் சார்ந்தவன்.

சர்தாரி : நீங்கள் சொன்னதையேதான் எங்கள் நாட்டு பாதுகாப்பு ஆலோசகர் குரேஷியும் சொல்லி அநியாயமாகப் பதவி பறிபோனது. அதுபோன்று துரித நடவடிக்கை எடுக்க உங்கள் நாட்டில் யாருமில்லை என்ற தைரியத்தில் பேசுகிறீர்கள்!

பிரனாப்: தாக்குதல் குறித்து விசாரித்த இஸ்ரேல் மற்றும் அமெரிக்க உளவுத் துறையினரும் உங்கள் நாட்டுமீதான எங்கள் குற்றச்சாட்டுகளை உறுதி செய்துள்ளார்கள்.

சர்தாரி: பாகிஸ்தான் சார்பாக அவற்றை வன்மையாகக் கண்டிக்கிறேன்.சீனா மற்றும் இங்கிலாந்து புலணாய்வுகள் பாகிஸ்தானுக்கு அதில் தொடர்பிருக்க வாய்ப்பில்லை என்று சொல்கிறார்களே!

பிரனாப் : சீனாவிலிருந்து வெளியானவைகளெல்லாம் 99% டூப்ளிகேட். மசூத் மற்றும் தாவூத் இப்றாஹீமுக்கும் இதில் தொடர்புள்ளதற்கு எங்களிடம் பலமான ஆதாரங்கள் உள்ளன.

சர்தாரி: எதை வைத்துச் சொல்கிறீர்கள். அதற்கான ஆதாரங்களைக் முதலில் கொடுங்களேன்.

பிரனாப் : இருவருமே தற்போது பாகிஸ்தானில் இருக்கிறார்கள். இதைவிட வேறென்ன வேண்டும்?

சர்தாரி: இருக்கலாம்.ஆனால் அவர்களுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நீங்கள் ஏன் பாகிஸ்தானையே குற்றஞ்சாட்டுகிறீர்கள்? அல்கைதா அல்லது தாலிபான்கள்கூட இதைச் செய்திருக்கலாமே?

பிரனாப்: எங்கள் நாட்டில் எது நடந்தாலும் அதற்கு பாகிஸ்தானைத்தான் குறைசொல்ல வேண்டும்.இல்லாவிட்டால் எதிர்கட்சிகள் நாட்டு மக்களிடம் எங்களைப் பற்றி தவறாகச் சித்தரிப்பார்கள்.எங்கள் நிலையை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.

சர்தாரி: ஒண்ணு செய்வோம்!.இருநாடுகளுக்குமிடையே புரிந்துணர்வை வளர்க்க 20 x 20 கிரிக்கெட் மேட்ச் நடத்தலாமா?

பிரனாப்: எங்கள் வீரர்கள் இதற்குத் தயாராக இல்லை. ராணுவ வீரர்கள் மட்டுமே தயாராக இருக்கிறார்கள் என்று தளபதி சொன்னார்.

சர்தாரி: பிரனாப்ஜி, உங்கள் நாட்டு ராணுவத்தை எங்கள் நாட்டு எல்லையில் குவிப்பது பதட்டமாக இருக்கிறதே.

பிரனாப்: எப்படியும் இந்தப்பதட்டம் மேலும் 6-7 மாதங்களுக்கு நீடிக்க வாய்ப்பு உள்ளது. பேசாமல் குற்றவாளிகளை எங்களிடம் ஒப்படைத்து நிம்மதியாக இருக்கலாமே.

சர்தாரி : பிரனாப்ஜி, நாங்கள்தான் உங்களது குற்றச்சாட்டுக்களை ஒப்புக் கொள்ளவில்லையே. பிறகு எப்படி பிரனாப்ஜி ஒப்படைக்க முடியும்?

பிரனாப் (மனதுக்குள்) எவண்டா இவன். நாமளும் அத்வானி மாதிரிப் பேசி அடுத்த பிரதமர் வேட்பாளராகத் தகுதிபடுத்திக் கொள்ளலாம்னு பார்த்தால் விடமாட்டான் போலிருக்கே!

சர்தாரி: புரிந்து கொள்ளலுக்கு மிக்க நன்றி பிரனாப்ஜி. எப்ப நீங்க இலங்கை போகப்போறீங்க?

பிரனாப்: ஹலோ! ஒபாமாவா!! ஓக்கே..! ஆமா! ஆமா! சர்தாரி பக்கத்துலதான் இருக்கார். நான் எப்படியும் உங்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு வந்துடுறேன். நீங்களே சர்தாரியிட கேட்டுக் கொள்ளுங்கள். (போனைக் கொடுக்கிறார்)

சர்தாரி: முபாரகோ ஒபாமா. கண்டிப்பா கலந்துக்கறேன். தீவிரவாதத்திற்கு எதிராக வழக்கம்போல் நாங்கள் எப்பவுமே உங்கள் கூட்டாளிதான். நேரில் பேசிக் கொள்வோம். ஓக்கே..பை..பை..ஸீயு..

Read more...

ஜார்ஜ் புஷ்'ஷூ'வுக்கும் டோண்டுவுக்கும் கண்டனம்

Sunday, January 04, 2009

எதற்கெடுத்தாலும் கண்டனம் தெரிவிப்பது சிலரின் வாடிக்கையாகி விட்டது. சமீபத்தில் அஸ்ஸாமில் நடந்தக் குண்டு வெடிப்புக்கு பிரதமர் மன்மோகன் சிங்கும், ஜனாதிபதி பிரதீபா 'பாட்டி'யும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். புத்தாண்டு,பண்டிகை வாழ்த்துக்கள் சொல்வதைப்போல் இதுவும் ஒப்புக்குச் சொல்லப் படுவதாகவே நினைக்கத் தோன்றுகிறது.

வாய்வார்த்தைக் கண்டனங்களால் தீவிரவாதிகள் வெட்கமோ அல்லது வருத்தமோ படப்போவதில்லை! சட்டங்களையும் இறையாண்மையையும் பொருட்படுத்தாது இயங்குபவர்களை இத்தகையக் கண்டனங்கள் ஒன்றும் செய்துவிடாது என்பதால் கண்டனங்கள் எத்தகைய உயர்மட்டத்திலிருந்து வந்தாலும் அதனால் பயனில்லை! மாறாக, நடத்தப்பட்ட பயங்கரவாதங்கள் நாட்டின் உயர்மட்டம்வரை கவனத்தை ஈர்த்துள்ளதைக் கண்டு மென்மேலும் ஊக்கம் அளிக்கக்கூடும் என்பதால் வெறும் கண்டனங்களைப் மட்டும் பதிவு செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

அரசியல்வாதிகள் குண்டுவெடிப்புகளால் உயிர்ப்பலி ஏற்பட்டால் மட்டுமே கண்டனம் தெரிவிக்கிறார்கள். இதுவும் வன்மையான கண்டனத்திற்குறியது! கள்ளச்சாராயத்தினால் பலியாகும்போதும் கண்டிக்க முன்வரவேண்டும். உயிர்ப்பலி எந்த ரூபத்திலிருந்தாலும் பாரபட்சமின்றி கண்டிக்க வேண்டும்.

*****

உள்நாட்டு உயிர்ப்பலிகளுக்கு மட்டுமே கண்டனம் தெரிவிக்கும் போக்கும் கண்டனத்திற்குறியது. ஜெயலலிதா அம்மையாரைப்போல் 'எல்லைதாண்டி' கண்டனம் தெரிவிக்கத் தயங்கக்கூடாது. மோடியால் நடத்தப்பட்ட குஜராத் படுகொலைகளைக் கண்டிக்காமல், இஸ்ரேலின் பாலஸ்தீனப்படுகொலைகள் குறித்துக் கண்டனம் தெரிவிப்பதும் கண்டனத்திற்குறியது. படுகொலைகளை ஓல்மர்ட் செய்தாலும் மோடி செய்தாலும் தாட்சன்யமின்றி உடனடியாகக் கண்டிக்கணும்!

பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் அத்துமீறலுக்கு எதிராக மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. ஒருபக்கம் இஸ்ரேலுடன் தூதரக உறவை வைத்துக் கொண்டு, இன்னொரு பக்கம் பாலஸ்தீனர்களுக்காகப் பரிந்து இரட்டைவேடம் போடுவது கண்டிக்கத் தக்கது! தொட்டிலையும் ஆட்டிவிட்டு பிள்ளையையும் கிள்ளிவிடும் நயவஞ்சகப் போக்கு மிகவும் கண்டனத்திற்கு உரியது!


மும்பை தாக்குதல் சம்பவத்துக்கு ஒபாமா கண்டனம் தெரிவித்தார். ஆனால், காஸா தாக்குதல் குறித்து மௌனம் காத்து வருகிறார்' என்று அரபுக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து ஒபாமாவிடம் கேட்டபோது, மும்பை தாக்குதல் பயங்கரவாதம் தொடர்புடையது, "காஸா தாக்குதல் நாடுகள் தொடர்புடையது" என்று பதிலளித்துள்ளார். என்னே வியாக்கியானம்! ஜார்ஜ் புஷ்'ஷூ'க்குக் கிடைத்தமாதிரி ஒபாமாவுக்கும் ஷூஅபிசேகம் கிடைக்காமல் இருக்க வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபையில் இஸ்ரேலுக்கு எதிரான கண்டனத் தீர்மானங்கள் வழக்கம்போல் தோல்வியடைந்துள்ளது! இஸ்ரேலுக்கு எதிரான கண்டனத் தீர்மானங்கள் எதுவும் பலனளிக்காது என்பதும் அப்படி நிறைவேறினாலும், அதை ரத்து செய்யும் வீட்டோ அதிகாரம் அமெரிக்காவிடம் இருக்கும்வரை ஒருபயனும் இல்லை என்பதும் உலகறிந்த உண்மை. ஒன்றுக்கும் உதவாத ஐ.நா சபையில் கண்துடைப்புக் கண்டனத்தீர்மானம் கொண்டுவருவதையும், அதை அமெரிக்கா ஒவ்வொரு முறையும் வீட்டோ கொண்டு ரத்து செய்து விளையாடி மகிழ்வதையும் வன்மையாகக் கண்டனம் செய்கிறேன்.

******************
பின்குறிப்பு: புஷ்ஷூக்குக் கண்டனம் சரி! எதற்கு டோண்டுவையும் கண்டிக்க வேண்டும் என்று யாராவது கேட்டுவிடக்கூடாது என்பதால் கடைசி நான்கு பத்திகளில் டோண்டுவின் அபிமான இஸ்ரேலையும் சேர்த்துள்ளேன்.

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP