ஒபாமாவுடன் நேர்காணல்!!!

Sunday, November 16, 2008

தஞ்சையின் கடைமடைப் பகுதியிலிருக்கும் United Streets of Adiramapattinam திற்கு அரசுமுறைப் பயணமாக அல்லாமல் தனிப்பட்டப் பயணமாக வந்திருந்த United States of America அதிபர் பாராக் ஒபாமாவுடன் நடந்த நேர்காணல்.

அதிரைக்காரன் : உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி ஒபாமா! உங்கள் ரகசிய வருகையை எதிர்பார்க்கவே இல்லை. யார் உங்களுக்கு இந்த ஐடியா கொடுத்தார்?

ஒபாமா: எல்லாம் உங்கள் வைகோ ஸ்டைல்தான். மன்னார் வளைகுடாவில் வரும்போது தமிழக மீனவர் என்று நினைத்துக் கொண்டு சிங்கள ராணுவம் சுடப்போனார்கள்! மீன்பிடிவலை எதுவும் இல்லாததால் விட்டுட்டார்கள்! சென்ற முறை ஜார்ஜ் புஷ்ஷுடன் நடந்த உங்களின் நேர்காணலைப் படித்து விட்டு எப்படியும் அதிரைக்கு ஒருமுறையேனும் வர நினைத்திருந்தேன். என் கனவு பலித்து விட்டது. வாருங்கள் வழக்கம்போல் அதே ராஜாமடம் பாலத்தில் காலாற நடந்து கொண்டே பேசலாமா?

அதிரைக்காரன்: போகலாம். அங்கிருக்கும் செக்போஸ்டில் யாரும் உங்களை அடையாளம் கண்டுகொண்டால் விசயம் மீடியாக்காரர்களுக்குத் தெரிந்து விடும். அதனால் பட்டுக்கோட்டையிலிருந்து மல்லிப்பட்டனம் வந்து, அங்கிருந்து ராஜாமடம் பாலத்திற்குச் செல்லலாம்.

ஒபாமா: அப்படியே செய்வோம். (என்று சொல்லி விட்டு நான் கொடுத்த கருப்பு வேட்டியைக் கட்டுகிறார். இடுப்பிலிருந்து வேட்டி நழுவாதிருக்க சிங்கப்பூர் பச்சைபெல்டை இறுக்கிக் கட்டுகிறார். கருப்பு வேட்டி கருப்புச் சட்டையில் ஒபாமா எடுப்பாக ஐயப்ப பக்தர் மாதிரி இருந்தார்.)

அதிரைக்காரன்: அதிரைக்காரர்களுக்கு பெரும்பாலும் வெள்ளை வேட்டிதான் பிடிக்கும். ஒரு CHANGE க்காக இம்முறை கருப்பு வேட்டி!

ஒபாமா: YES. WE CAN CHANGE! கருப்புத்தான் எனக்குப் புடிச்ச கலரு!அக்கும் ஜுக்கும்! (ஆடிக்காட்டுகிறார். நல்லவேளை இடுப்பில் பெல்டை இறுக்கமாகக் கட்டியிருந்தார்!)

அதிரைக்காரன்: ஒருவழியாய் வெள்ளை மாளிகைக்குள் கருப்பு ஆடு புகுந்து விட்டது!

ஒபாமா: மன்னிக்கவும். நான் கருப்பு ஆள். கருப்பு ஆடல்ல. முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷை வேண்டுமானால் கருப்பு ஆடு எனலாம்.

அதிரைக்காரன்: ஜார்ஜ் புஷ்ஷை கருப்பு ஆடு என்று சொல்ல முடியாது. கருநாகம் என்று சொல்லலாம். சரி..சரி விசயத்துக்குப் போகலாம். வெள்ளை மாளிகையை எப்போது "கருப்பு மாளிகை"எனப்பெயர் மாற்றப் போகிறீர்கள்?

ஒபாமா: அட! நல்ல ஐடியாவாக இருக்கிறதே. நோட் பண்ணிக்கிறேன். ஆமா திடீரென இப்படிப் பெயர் மாற்றினால் வெள்ளையர்களுக்குக் கோபம் வந்து விடுமே. அதை எப்படிச் சமாளிப்பது?

அதிரைக்காரன்: எங்கள் நாடாக இருந்தால் வாஸ்து கீஸ்து என்று சொல்லி சமாளிக்கலாம். இரானிலிருந்து இரவில் தாக்குதல் நடத்தப்போவதாக FBI இடமிருந்து தகவல் வந்துள்ளது, கருப்பாக இருந்தால் இரவில் அடையாளம் தெரியாது என்று சொல்லிப் பாருங்கள்!

ஒபாமா: கொஞ்சம் கஷ்டம்தான். எதற்கும் CNN மற்றும் FOX சேனலில் இது குறித்து செய்தியை முன்கூட்டியே பரப்புவோம். தினமலருக்கும் மறக்காமச் சொல்லிடனும்.

அதிரைக்காரன்: கவலையே படாதீங்க. இந்தச் செய்தி அமெரிக்காவில் வெளியாகும் முன்பே தினமலரில் வந்துடும். அப்படித்தால் எங்கள் நாட்டில் நடந்த குண்டு வெடிப்புச் செய்திகளை முந்திக் கொண்டு தந்ததில் தினமலருக்கு ஈடில்லை. பின்லேடன் பேய்க் கதைகளைச் சொல்லி அமெரிக்க மக்களை நீங்களும் மிரட்டப்போகிறீர்களா? அல்லது கைவிட்டு விடப்போகிறீர்களா ஒபாமா?

ஒபாமா: பின்லேடன் டெமாக்ரடிக்னருக்கு எப்பவுமே நண்பன்தான் என்பதை மறக்கவில்லை. ரஷ்யாவுக்கு ஆப்படிக்க எங்களுக்கு உதவியவர் அல்லவா!

அதிரைக்காரன்: உங்கள் நாட்டு இரட்டைக் கோபுரத்தைத் தகர்த்தவர் என்று சொல்லப்படுகிறதே!

ஒபாமா: 9/11 சம்பவமே நடக்கவில்லை.எல்லாம் COMPUTER GRAPHICS என்று மக்களை நம்ப வைப்பதில் அதிகம் சிரமமிருக்காது என்று நம்புகிறேன். ஹாலிவுட்ல நாலு சினிமா எடுத்துவிட்டா மக்கள் பழசை மறந்துடுவாங்க.

அதிரைக்காரன்: அமெரிக்கர்களிடம் நாங்கள் நிறையக் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.

ஒபாமா: அமெரிக்கர்களிடம் இந்தியர்கள் போதுமான அளவு கற்றுள்ளார்கள். அதனால்தான் அவர்களைத் திருப்பி அனுப்பும் "இந்தியனே வெளியேறு" திட்டத்தையும் விரைந்து செயல்படுத்த உள்ளோம்.

அதிரைக்காரன்: செய்யப்போவது யார்? எங்கள் நாட்டு பால் தாக்கரேயை வேண்டுமானால் கூட்டிச் செல்லுங்களேன். பிராந்திய வெறி ஸ்பெசலிஷ்ட் அவர்.

ஒபாமா: தேவையில்லை.அமெரிக்கர்களிடம் இதைச் சொல்லித்தான் CHANGE என்று பீலா விட்டுள்ளோம். அதை வைத்து 1-2 வருஷத்தை ஓட்டலாம் என்றும் திட்டம் உள்ளது. பார்ப்போம்.

அதிரைக்காரன்: சொந்த நாட்டு மக்களையே எரிகணைவீசிக் கொல்லும் ராஜ பக்சே குறித்து உங்கள் கருத்து என்ன?

ஒபாமா: மிகவும் கண்டிக்கத் தக்கது. சொந்த நாட்டு மக்கள்மீது குண்டுவீசக் கூடாது.

அதிரைக்காரன்: ஆனால் அடுத்த நாட்டு மக்கள்மீது வீசுவீர்கள்! இல்லையா?

ஒபாமா: COOL...COOL..புஷ்ஷின் தவறான வழிகாட்டுதலால் அவ்வாறு நடந்து விட்டது. ஏன் 9/11 கோபுரத் தகர்ப்பே எங்கள் அதிபர் ஏற்பாட்டின் பேரில்தான் நடந்தது என்றும் சொன்னோமே. இராக்கிற்கு எங்கள் ராணுவ வீரர்களை அனுப்பி சொந்த நாட்டு வீரர்களையே பழி கொடுக்கவில்லையா? புஷ்ஷின் தவறுகளைச் CHANGE பண்ணவே மக்கள் என்னைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள்.

அதிரைக்காரன்: புஷ் மீது விசாரனைக் கமிஷன் ஏதும் அமைப்பீர்களா?

ஒபாமா: அத்தகைய திட்டம் எதுவும் இப்போதைக்கில்லை. நெருக்கடியான சூழலில் ரிபப்ளிகன்கள் ஒத்துழைக்கா விட்டால் அதைச் செய்யவும் தயங்க மாட்டோம்.

அதிரைக்காரன்: எங்கள் நாட்டில் கார்பைடு தொழிற்சாலையில் அணுக்கசிவு மூலம் ஆயிரக்கணக்கான மக்களைக்கொன்ற ஆண்டர்சனை இந்தியாவிடம் ஒப்படைக்கும் திட்டம் எதுவும் இருக்கிறதா?

ஒபாமா: பழசைக் கிளறும் பழமைவாதியாக இருக்காதீர்கள்.

அதிரைக்காரன்: பாலஸ்தீனம், இராக் பிரச்சினைகளைத் தீர்க்க திட்டம் ஏதும் உள்ளதா?
ஒபாமா: பாலஸ்தீனப் பிரச்சினையைவிட இராக் பிரச்சினையே விரைந்து தீர்க்கப்பட வேண்டும். ஏனென்றால் அங்கிருந்து நிறைய பெட்ரோல் எங்கள் நாட்டிற்கு வரவேண்டியுள்ளது. இராக்கில் டெமக்கரசி இருந்தால்தான் சுதந்திரமாக பெட்ரோல் எடுத்து புஷ்ஷினால் ஏற்பட்ட நஷ்டங்களை ஈடுகட்டலாம்.

அதிரைக்காரன்: ஆப்கான் பிரச்சினை குறித்து...

ஒபாமா: தற்போதைக்கு பாகிஸ்தானுடன் அவர்களை மோதவிட்டுள்ளோம். இருவரும் பேசி விரைவில் சமாதானத்திற்கு வந்துவிடுவார்கள்.அப்படி வராத பட்சத்தில் பெருந்தலைவர் பில் கிளிண்டனை சமாதானத் தூதுவராக அனுப்பவும் திட்டம் உள்ளது. நல்லதையே நினைப்போம்.

அதிரைக்காரன்: அமெரிக்கப் பொருளாதார மந்தநிலையை எப்படி தீர்ப்பீர்கள்?

ஒபாமா: உலகப் பொருளாதார மந்தநிலையை குறுகிய பார்வையுடன் "அமெரிக்கப் பொருளாதார மந்தநிலை" என்று சுருக்காதீர்கள். அமெரிக்கர்கள் சந்தோசமாக இருக்கும்போது உலகமே சந்தோசப்பட்டது. அமெரிக்கர்கள் கவலைப்படும்போது உலகமும் கவலைப்படுவதுதானே நியாயம்?

அதிரைக்காரன்: நன்றி. ஒபாமா. வெள்ளை வேட்டி கட்டிய புஷ்ஷும் சரி. கருப்பு வேட்டி கட்டிய ஒபாமாவும் சரி. எல்லாமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைதான். அடுத்த நான்கு வருடத்திற்குள் புஷ் செய்த பெருந்தவறுகளை நீங்கள் சரி செய்யாவிட்டால் அமெரிக்கர்கள் விரைவில் சில்லரை(CHANGE)க்கு கையேந்த நேரிடும். அப்புறம், உலகமே CHANGE, WE BELIVE IN என்று உங்களுக்கு எதிராகச் சொல்லக்கூடும். உஷாராக இருங்கள்.

Read more...

ஒபாமாவின் ஓரவஞ்சனை

Wednesday, November 12, 2008

அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து உலக நாட்டுத் தலைவர்களுடன் போனில் பேசிய ஒபாமா, இந்தியாவைத் தவிர்த்திருந்தார். இஸ்ரேல், பாகிஸ்தானை எல்லாம் மதித்துப் பேசிவிட்டு, இந்தியா புறக்கணிக்கப் பட்டதற்கு கத்தார், ஓமன் சுற்றுப்பயணத்தில் இருந்ததே காரணம் என்று பிரதமர் மன்மோகன் சிங் சப்பைக் கட்டியுள்ளார்.

பிரதமர் மன்மோகன் சிங்கிடம் செல்போன் இல்லையா? அல்லது ரோமிங் வசதி இல்லையா? அல்லது ஒபாமா லேண்ட் லைனில் மட்டும்தான் பேசுவாரா? மன்மோகன் சிங்குதான் ஊரிலில்லை. அட நம்ம வைகோ ஊர்ல தானய்யா இருந்தார்! அட நான்கூட.................சரிசரி...அடுத்து வரும் வெட்டிச் செய்திகளைப் படித்துவிட்டு, முந்திய பதிவுக்கு பின்னூட்டமிட மறந்தவர்கள் இந்தப் பதிவில் நாலுவரி வேணாம் ஒருவரி பின்னூட்டமாச்சும் போடுங்க.

பின்குறிப்பு: பின்னூட்டமிட விரும்பாவிட்டால் அதையும் சொல்லிடுங்க. அனாணி பெயரில் நானே 4-5 போட்டுக் கொள்கிறேன் (நன்றி: டோண்டு)

=====================================

சந்திராயன் -1 வெற்றியைத் தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்யும் விண்கலம் அனுப்பப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்த விண்கலத்திற்கு ஆதித்யா என பெயரிடப்பட்டுள்ளது

ஐயா விஞ்ஞானிகளே! மதசார்பற்ற நாட்டில் சந்திராயன், ஆதித்யான்னு சமஸ்க்ருதப் பெயர்கள்தான் கிடைத்ததா? அதைவிட முன்னணி நட்சத்திரம் சூர்யா பெயரை விட்டுட்டு 1-2 படங்களில் நடித்த ஆதித்யா பெயரை வைத்தால் சூர்யா ரசிகர்கள் கோபப்பட மாட்டார்களா?

++++++++++++++++++

அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள பாரக் ஓபாமாவின் ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றுள்ள இந்தியப் பெண்மணி சோனால் சிங்குக்கு ஆர்.எஸ்.எஸ். தொடர்புகள் இருப்பதாக, 3 இந்திய அமெரிக்க அமைப்புகள் எதிர்ப்பும், அதிருப்தியும் தெரிவித்துள்ளன

சோனால் சிங் சாமியாரினியாக இருந்திருக்கிறாரா? என்றும் விசாரித்தால் நல்லது.

+++++++++++++++++++

பாஜக தலைவர் இல.கணேசன் மற்றும் இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராம. கோபாலன் ஆகியோருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. இதுகுறித்து போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது.

வரவர கொலை மிரட்டலுக்கு மரியாதையே இல்லாமப் போச்சு!

++++++++++++++++++++

மாலத்தீவு கடற்பகுதியில் கடல் நீரின் மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால்,அருகாமை நாடு ஒன்றில் நிலம் வாங்கி அங்கு மக்களை இடம் பெயரச் செய்ய மாலத்தீவு அரசு திட்டமிட்டுள்ளது. இருப்பினும் இந்தியாவில் நிலம் வாங்கும் திட்டம் அந்த நாட்டு அரசிடம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவே கடனில் மூழ்கும் அபாயம் இருக்கிறது! அடப்போங்க சார் நீங்க!

+++++++++++++++++++++

பெய்ஜிங்: அருணாசலப் பிரதேசம் இந்தியாவுக்கு சொந்தமானது அல்ல, அதன் மீது இந்தியா சொந்தம் கொண்டாடுவது முறையல்ல என சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

லாட்டரிச்சீட்டு விற்க மட்டும் இந்தியா தேவையா? எல்லாவற்றிலும் Made in China என்று போடுவதுபோல் அருணாச்சல பிரதேசிலும் போடலாம்னு நெனைக்காதீங்கப்பூ!

++++++++++++++++++++++

திருவாரூர் மாவட்டம் சீரங்குளம் என்ற இடத்தில் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் சிலை சேதப்படுத்தப்பட்டது. இதற்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முதல்வர் கருணாநிதியின் சொந்த ஊர் திருக்குவளை திருவாரூரில்தான் இருக்கிறது. அனேகமாக கலைஞர்தான் தூண்டி விட்டிருப்பாரென்று ஜெயா ப்ளஸ் செய்திகளில் 2-3நாட்களுக்கு FLASH NEWS ஆக ஓடவிடலாமே!

++++++++++++++++++++++++

இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று காலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய ஒபாமா, அமெரிக்காவின் முக்கிய கூட்டாளி இந்தியா என்று என்று கூறினார்.

மன்மோகன் ஜி! உஷாரா இருங்க! அமெரிக்கப் பொருளாதாரம் சரிவடைந்து வரும் இச்சூழலில் ஒபாமா இப்படிச் சொல்லி நஷ்டத்தையும் நம் தலையில் கட்டிவிட்டுடப்போகிறார்!
+++++++++++++++++++++++++

Read more...

க்காஆஆஆஆ த்த்தூ!

Sunday, November 09, 2008

உலகம் முழுவதிலுமுள்ள இந்துக்களின் பாதுகாவலர்களாகச் சொல்லி உண்டியல் குலுக்கி, இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக பாமர மக்களுக்கு மதவெறியூட்டி கலவரங்களை நடத்தி அரசியல் பண்ணும் சங்பரிவாரக்கும்பல் இலங்கைத் தமிழர்களை இந்துக்களாகக் கருதவில்லை; அவர்களை இன்னும் இராவணின் சந்ததிகளாகவே பார்க்கிறார்கள்!

பங்களாதேஷிலும் பாகிஸ்தானிலும் இந்துக்கள் பாதிக்கப்பட்டால் பதிலாக இந்தியாவில் முஸ்லிம்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தத் தயங்குவதில்லை. மலேசியாவின் சட்டத்திற்குப் புறம்பாக இந்துக்களைத் திரட்டிப் போராட்டம் செய்துவரும் ஹிண்ட்ராப் எனும் சங்பரிவாரக் கிளைக்கும்பல் மலேசிய போலீஸாரால் கைது செய்யப்பட்டபோது "ஐயையோ இந்துக்களுக்குப் பாதுகாப்பில்லை" என்று மூக்கு சிந்திய தமிழக இந்துமுன்னனிக் கும்பல், ஈழத்தமிழர்களிலும் இந்துக்களுள்ளார்கள் என்பதை அறியவில்லையா?

தமிழக இந்துக்களைப் போன்றே முருகனுக்கு அலகு குத்தி, காவடி எடுத்து, விரதமிருந்து வருகிறார்கள். இலங்கையில் மட்டுமின்றி புலம்பெயர்ந்துள்ள நாடுகளிலும் இந்துசமய திருவிழாக்களைத் தவறாது கொண்டாடி அக்மார்க் இந்துக்களாகவே வாழ்ந்து வருகிறார்கள்.காஷ்மீர் பண்டிட்களுக்காக ர(த்)த யாத்திரைச் செல்லும் அத்வானி இந்தியப் பூர்வகுடிகளான இலங்கைத் தமிழர்களுக்காகவும் ஓர் யாத்திரை செய்திருக்கலாமே?

தமிழ்திரையுலகினர் நடத்திய ஈழத் தமிழர் ஆதரவுப் பேரணியில் இயக்குனர் அமீர்,நடிகர் மன்சூர் அலிகான்,இயக்குனர் சைமன் என்கிற சீமான் ஆகியோர் சிறுபான்மையினர் என்ற காரணத்தால் பெயர்குறிப்பிட்டுக்கைது செய்யக் கோரினார் இல.கணேசன்! உணர்வுப்பூர்வப் போராட்டங்களில் உணர்ச்சி வயப்பட்டு தேசவிரோதமாகப் பேசியது தவறுதான். சட்டப்படி குடியுரிமை பெற்று ,வரிசெலுத்தி,வாக்களித்து தேசப்பற்றுடன் இந்தியாவில் வாழும் முஸ்லிம்களைப் பார்த்து பாகிஸ்தானுக்குப் போகச் சொல்லிவரும் சங்பரிவாரங்களுக்கு அதைச் சொல்ல அருகதையில்லை!

சங்பரிவாரக் கும்பலைப் பொருத்தவரை ஆதாயமில்லாமல் சேற்றில்குதிக்க மாட்டார்கள். இந்தியாவில் சிறுபான்மையினருக்குப் பாதிப்பு ஏற்படுமென்று உறுதியாக நம்பினால் மட்டுமே இந்துக்களுக்காக மூக்குச் சிந்துவார்கள். மலேசிய இந்துக்களுக்காக மூக்கு சிந்தியதுகூட உண்டியலில் வந்துவிழும் காணிக்கைகள் தடைபட்டுவிடக்கூடாது என்ற நல்லெண்ணமே தவிர வேறில்லை.

சேதுக்கால்வாய் திட்டம் நிறைவேறுவதற்குத் தடையாக இருக்கும் மணல் திட்டுக்கள் தகர்க்கப்பட்டபோது, இந்துக்களின் உணர்வுகள் புண்படுமென்று நிர்வாண சாதுக்களைத் திரட்டி தாண்டவமாடிய சங்பரிவாரங்கள், இலங்கை ராணுவத்தின் குண்டுக்களால் அப்பாவித் ஈழத்தமிழ்மக்களின் குடியிருப்புகள் அநியாயமாகத் தகர்க்கப்படும்போது உணர்வுகள் புண்படவில்லையா? அமர்நாத்தில் கழிப்பிடத்திற்காகப் போராடிய பாஜக கும்பலுக்கு ஈழத்தமிழர் வசிப்பிடங்கள் தகர்க்கப்படுவதை யார்தான் எடுத்துச் சொல்வதோ?

இந்துக்களுக்குப் பாதுகாப்பு என்று சொல்லிக் கொண்டு இனி எவனாச்சும் தமிழர்களிடம் உண்டியல் குலுக்கிக் கொண்டு வந்தால் மறக்காமல் செய்ய வேண்டியது:


"க்காஆஆஆஆ த்தூ"

குறிப்பு: பின்னூட்டங்களைத் துப்பலாகவும் பதிக்கலாம் ;-)

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP