ஆதாயம் தரும் பதவிகள்.

Monday, March 27, 2006

சென்ற வாரத்தலைப்புச் செய்திகளில் "ஆதாயம் தரும் பதவி" என்ற வாசகம் அடிக்கடி கண்ணில் பட்டது. அரசு பதவியில் இருக்கும் ஒருவர், ஒரே நேரத்தில் அரசு உதவி பெறும் மற்ற பதவிகள் வகிப்பதால், அதற்கான இரட்டை நிர்வாகச் செலவுகளால் அரசுக்கு செலவு இரட்டிப்பாவதுடன், இரு பதவியில் இருக்கும் ஒருவரால் இரண்டையும் சரிவரச்செய்ய முடியாது என்ற நோக்கில், அரசு உதவி பெறும் பதவிகளில் "ஒருவருக்கு ஒரு பதவி" என்ற வழிகாட்டல் இந்திய அரசியல் அமைப்பிலும் சட்டத்திலும் இருக்கிறது.

சென்ற மாதம் சமாஜ்வாதி கட்சியின் எம்.பியும் அமிதாப்பச்சனின் மனைவியுமான ஜெயாபச்சனை இக்காரணம் சொல்லி பதவி நீக்கம் செய்ய தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்தது. காங்கிரஸ் எம்.பி ஒருவரால் எறியப்பட்ட இந்த அரசியல் அம்பு, அதே காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியாவின் பதவி இழப்பிற்கும் காரணமாகி விட்டது. இவ்விவகாரம் பெரிதாகும் முன்பே சோனியா தான் வகித்த சர்ச்சைக்குறிய ஆதாயம் தரும் பதவியையும், அதனால் இழக்கவிருந்த எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்து, இதை வைத்து அரசியல் குளிர்காய திட்டமிட்டிருந்த பா.ஜ.க.வினருக்கு அதிர்ச்சியளித்தார்.

சோனியாவின் பதவி இழப்பைக் காக்க ஆளும் காங்கிரஸ் அரசு அவசரமாக அரசியல் சட்டத் திருத்தம் கொண்டுவர முயன்றதன் மூலம் ஆளும் கட்சியினர் தங்கள் வசதிக்கு ஏற்ப சட்டங்களை திருத்திக் கொள்வார்கள் என்ற உண்மை அம்பலத்திற்கு வந்துள்ளது. நாட்டில் எத்தனையோ தலை போகிற காரியங்களுக்கு காட்டாத அவசரம், தங்கள் பதவிக்கு வேட்டு வைக்கப்படும் என்பதால் எதையும் செய்யத் துணிவார்கள். தகவல் பெறும் மசோதாவை சட்டமாக்கி விட்டு, புலணாய்வு (Investigation Journalizsm) ஊடகவியலாளர்களைக் கட்டுப்படுத்தவும் கட்சி சட்டம் கொண்டுவர பாகுபடின்றி திட்டமிட்டுள்ளார்கள்!

ஆதாயம் தரும் பதவியால் பாதிக்கப்பட்டது சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மட்டுமல்ல. கம்யூனிஸ்ட் கட்சியின் சோம்நாத் சட்டர்ஜி, பாஜகவின் மல்ஹோத்ரா ஆகியோரும் கூட ஆதாயம் தரும் பதவிகளில் இருந்து வருகிறார்கள். நான்கு திருடர்களை போலிஸ் விரட்டிக் கொண்டு வரும்போது முதலில் பிடிபட்ட திருடனுக்கு விழும் தர்ம அடிகள் அடுத்தடுத்து பிடிபடும் திருடர்களுக்கு விழுவதை விட குறைவாக விழும். திருடனே முதலில் பிடிபட்ட திருடனுக்கு தர்ம அடியைக் கொடுத்தால் தனக்கு அடி விழாது அல்லது குறைவாக விழும் என்ற நப்பாசையில் பா.ஜ.க. இப்பிரச்சினையை கிளறியது.

இன்னொரு வகையில் சொல்வதென்றால் தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை; எதிரியின் இரண்டு கண்ணும் போக வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தங்கள் கட்சியின் மல்ஹோத்ரா பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை ஆளும் கட்சியின் முக்கிய தலைகளும், பாராளுமன்றத்தில் சதா தலையில் குட்டிக் கொண்டிருக்கும் சபாநாயகரும் பதவி விலக வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இவ்விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளது.

ஆதாயம் தரும் பதவிகளால் பெரும்பாலும் பாதிக்கப்படுவது ஆளும் கட்சியினரே என்பதால் ஆட்சியில் இருக்கும் வரை ஆதாயம் அடைந்து விட்டு, திண்ணையைக் காலி செய்யும் போது புது வீட்டுக்காரரை திட்டிவிட்டுச் செல்வது மாதிரி, எதிர் கட்சியான பிறகு அல்லது ஆட்சியில் இல்லாத போது இது போன்ற பிரச்சினைகளைக் கிளப்பி (பா.ஜ.க, தெலுங்கு தேசம், திரிணாமூல் போன்றக் கட்சியினர்) அரசியல் நடத்துகிறார்கள்.

காங்கிரஸைப் பொருத்தவரை இன்னும் சில மாதங்களில் நடக்க இருக்கும் மாநில சட்டமன்ற தேர்தல்களில் சோனியா அனுதாப அலையை தக்க வைத்து அரசியல் ஆதாயம் பெறும் என்று அரசியல் வல்லுனர்கள் கருதுகிறார்கள். ஆனால் பிஜேபிக்கு புலிவாலைப் பிடித்தவன் கதையாகி விட்டது அல்லது சாண் ஏறினால் முழம் சறுக்குகிறது. நல்லவேளை சோனியா முன்னதாகவே ராஜினாமாச் செய்து விட்டார். இல்லாவிட்டால் இதைச் சொல்லி அத்வானி இதற்கும் ஒரு ரதயாத்திரை கிளம்பி இருப்பார்.

ஒரு புள்ளி விபரப்படி, அரசின் பாராளுமன்றச் செலவுகள் யாருக்கெல்லாம் வீணாக செலவளிக்கப் பட்டுள்ளது என்று பாருங்கள். மொத்தமுள்ள 545 எம்பிக்களில்,

29 பேர் மீது கணவன்/மணைவி துஷ்பிரயோகத்திற்காக வழக்குகள் உள்ளன.

7 பேர் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

117 பேர் கொலை, கற்பழிப்பு, அடிதடி கொள்ளை,வழிப்பறி வழக்குகளுக்காக விசாரிக்கப்பட்டுள்ளார்கள்.

71 பேர் மோசமான கடன் நடவடிக்கைகளால் எந்த வகைக்கடனும் பெற முடியாது.

21 பேர் பல்வேறு நீதிமன்ற வழக்குகளில் சிக்கியுள்ளார்கள்.

84 பேர் பல்வேறு குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டு அபராதம் விதிக்கப் பட்டுள்ளார்கள்.

சரி, இதெல்லாம் இருக்கட்டும் அரசியல்வாதிகள் வகிக்கும் பதவிகளில் எந்தப் பதவியில் ஆதாயம் இல்லை என்று யாராவது சிந்தித்தோமா? இது போன்ற பொறுப்பற்ற எம்.பிக்களுக்கு ஆகும் வெட்டிச் செலவுகளையும் நாடாளுமன்ற புறக்கணிப்பையும் குறைத்திருந்தால் நம்நாடு இருபது வருடங்களுக்கு முன்பே வல்லரசாகி இருக்கும்.

பாரத மாதாவுக்கு ச்சே....!

Read more...

தேர்தல்களினால் மக்களுக்கு என்ன பயன்?

Sunday, March 19, 2006

தேர்தல் நெருங்கிடுச்சு. வாக்காளர்களும் வேட்பாளர்களும் இன்னும் ஓரிரு மாதங்களுக்கு சொந்தக்காரர்களாக உறவு பாராட்டிக் கொள்வார்கள். ஓட்டு கேட்டு வரும் வேட்பாளர்களை "உங்கள் வீட்டுப் பிள்ளை..............உங்கள் பொற்பாதங்களை நோக்கி வருகிறார்" என்ற ஒலிபெருக்கி அறிவிப்புகள் இனி அடிக்கடி கேட்கும். ஐந்தாண்டுக்கொருமுறை வரும் தேர்தல்களினால் சாமான்ய மக்களுக்கு என்னென்ன பயன்கள் என்று யோசித்ததில் கிடைத்த அரிய கண்டுபிடிப்புகள்.

தோரனம், கொடி & பேனர்:

1) துணி பேனராக இருந்தால் போர்த்திக் கொள்ளலாம்.

2) டிஜிட்டல் பேனராக இருந்தால் கூரை மீது போர்த்தலாம்.

3) தோரனக் கொடியை சலூனில் சேவிங் பண்ணிய பிளேடை சுத்தம் செய்ய உபயோகிக்கலாம்.

4) தெருமுழுக்க தோரணம் கட்டி இருப்பதால் காக்கா-குருவி எச்சங்கள் தலையில் விழ வாய்ப்பு குறைவு


போஸ்டர்:

1) அழுக்கு சுவரை அலங்கரிக்க உதவுகிறது.

2) புது வீட்டில் திருஷ்டி பூசணிக்கு பதில் சில வேட்பாளர்கள் போட்டோ பொருத்தமாக இருக்கும்.

3) புது போஸ்டரை மேய்வதால் மாட்டுத் தீவனச் செலவு தேர்தல் முடியும் வரை மிச்சம்.

4) எதிர்க்கட்சியினர் போஸ்டரில் சாணி அடிக்கப்படுவதால், ரோடு சாணியின்றி சுத்தமாக இருக்கும்!


ஒலிபெருக்கி:

1) கரகர குரலில் பிரச்சாரம் செய்யப்படுவதால் சோடா,விக்ஸ் ஆகியவற்றின் விற்பனை கனிசமாக அதிகரிக்கும்.

2) வேட்பாளர் வருகிறார் என்பதை தூரத்திலிருந்தே அறிந்து கொள்ள முடிவதால் கடந்த வருடம் தொகுதிப்பக்கம் தலை காட்டாமல் இருந்த வேட்பாளர்களை விரட்டியடிக்க துடைப்பக்கட்டை, பழைய செருப்பு ஆகியவற்றை தயார் செய்து கொள்ள ஏதுவாகும்.

3) காக்கா, கழுதை,நாய் ஆகியவை, பிரச்சாரகர்களின் குரலைப்பார்த்து சந்தோசமடையும்.

தற்போதைக்கு இவைதான் யோசிக்க முடிந்தது! வேற எதுவும் இருந்தால் 'சும்மா நச்சுன்னு' பின்னூட்டமிடுங்க(டோய்!/டியோ!!)

Read more...

அன்பார்ந்த வாக்களப் பெருங்குடி மக்களே!

Wednesday, March 15, 2006

தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமடைந்து விட்டன. கூட்டணிக் கட்சிகளின் பிரச்சார பீரங்கிகள் இனி(தே) முழங்க ஆரம்பித்து விடுவார்கள். தேர்தலுக்கு முன்பு இருந்த கூட்டணிகள் தேர்தல் முடிந்து இடம் மாறி இருக்கலாம். முன்பு கூட்டணியில் இருக்கும் போது பேசியவற்றை அணி மாறியதும் சமாளிக்க வேண்டிய (?) காலத்தின் கட்டாயம் அரசியல் கட்சிகளுக்கு எழலாம். ஏற்கனவே கிடைத்த தொகுதிகளில் தங்கள் கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதி கிடைக்க வேண்டுமே என்ற கவலையில் இருக்கும் கட்சித் தலைவர்களுக்கு ஏதோ நம்மால் முடிஞ்ச உதவி.

1) சுனாமி

[கூட்டனியில் இருந்தால்]

அம்மா ஆட்சியில்தான் பெரும் திட்டங்களும் வெளிநாட்டுக் கம்பெனிகளும் தமிழகத்திற்கு வந்தன. அமெரிக்காவிலும் ஜப்பானிலும் மட்டுமே இருந்த("""பலத்தக் கைதட்டல்""") சுனாமி கூட அம்மா ஆட்சியில்தான் இந்தியாவிற்கு வந்தது! (மக்கள் எதற்கு கைதட்டுகிறார்கள் என்று பேச்சாளர் குழம்பிவிட்டார். சமாளித்துக் கொண்டே தொடர்கிறார்)

டிசம்பர்-24 ஐ மறக்க முடியுமா? சாதாரணமாக ஒரு நாளில் இருபது மணி நேரங்கள் பணி செய்யும் முதலமைச்சர் அம்மா சுனாமி தாக்கிய நாட்களில் ஒரு நாளைக்கு நாற்பது மணி நேரம் பணி செய்தார்கள். அள்ளிக் கொடுத்து சிவந்த கரங்களல்லவா? இன்னொரு முறை சுனாமி நிவாரண நிதி வழங்க எங்களுக்கு மீண்டும் வாய்ப்புக் கொடுங்கள். (சுனாமி வந்தது சாதனையா? சோதனையா? மக்களுக்கு ஒன்றுமே புரியவில்லை!)

[கூட்டனியில் இல்லாவிட்டால்]

இந்த ஆட்சியின் அவலங்கள் கொஞ்சமா நஞ்சமா? எந்த ஆட்சியிலும் வராத சுனாமி அந்த அம்மா ஆட்சியில வந்ததே? அந்தம்மாவின் அராஜகம் கடலுக்கே பொறுக்காமல் தானே சுனாமியாகப் பொங்கி எழுந்தது! வாக்காளர்களே! இன்னொரு சுனாமி இனி வராமல் தடுக்க சுனாமியாகப் பொங்கி இந்த காட்டாட்சிக்கும் முடிவு கட்டிடுவீர்!

2) சேது சமுத்திர திட்டம்

[கூட்டனியில் இருந்தால்]

சேதுக் கால்வாய் திட்டத்தால் கடற்கரையோர கிராம மக்கள் வெளிநாட்டுக் கப்பல்களை அடிக்கடி கண்டுகளிக்கலாம் இது இந்தக் கூட்டணியின் சாதனையல்லவா?

[கூட்டனியில் இல்லாவிட்டால்]

சேது சமுத்திரத் திட்டத்தால் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ருசியான மீன்களான கெளுத்தி, கெண்டையெல்லாம் இலங்கைக்குப் போய்விட்டன. கடலை ஆழப்படுத்துவதால் தமிழகக் கடற்கரையோரங்களில் மாசு ஏற்படுகிறது. அடிக்கடி கடல் கொந்தளிப்பது கூட, அடிக்கடி கப்பல்கள் கடந்து செல்வதால்தான் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.

3) நாடு முழுவதும் ஒரு ரூபாயில் தொலைபேசிச் சேவை

[கூட்டனியில் இருந்தால்]

காஷ்மீரிலுருந்து கன்னியாக்குமரி வரை ஒரு ரூபாயில் இனி நீங்கள் பேசச் செய்து மகத்தான சாதனை செய்தது எங்கள் கூட்டணி அரசுதான்.

[கூட்டனியில் இல்லாவிட்டால்]

ஒரு ரூபாய்ல நாடுமுழுவதும் டெலிபோன் பேசும் வசதியால் ஏற்பட்ட தொந்தரவு எக்கச்சக்கம். மக்கள் நிம்மதியா தூங்க முடியலே. நேற்று யாரோ ஒரு பஞ்சாப்காரன் போன் பண்ணி பல்பீர் சிங் வந்தானான்னு கேக்குறான். பல்பீர் சிங் எதுக்கய்யா பட்டுக்கோட்டைக்கு வரனும்? இனியும் இது போன்ற கொடுமைகள் தொடர வேண்டுமா?


பின்குறிப்பு: உங்களுக்கும் ஏதாச்சும் சமாளிஃபிகேஷன் தெரிஞ்சா கொடுத்து உதவலாமே! சிறந்த சமாளிப்பை வழங்குபவருக்கு அடுத்த தேர்தலில் கச்சத் தீவில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும்.!

Read more...

அமெரிக்க அதிபருடன் ஒரு நேர்காணல்!

Wednesday, March 01, 2006

இந்தியாவுக்கு மூன்று நாள் சுற்றுப்பயணம் வந்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷுடன் "ராஜாமடம்" பாலத்தில் நடந்து கொண்டே அதிரையின் பாரம்பரிய உடையான வெள்ளைக் கைலியணிந்து (!) பல விசயங்களை வெட்கப்படாமல் மனம் விட்டு பேசினோம். அதிராம்பட்டினதுக்கு வரும் பிரமுகர்கள் இந்த பாலத்திற்கு விசிட் அடிப்பது மரபு!

இப்பாலத்தின் சிறப்புகள் என்று சொன்னால் கலைஞர் ஆட்சியில் கட்டப்பட்ட பாலங்களில் விசாரனைக்குள்ளாகாத முப்பது வருடத்தைய பாலம். இந்தியாவின் மாதிரிக்கிராமங்களாக மத்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு முன்னாள் தமிழக ஆளுநர் திருமதி.ஃபாத்திமா பீவி அவர்களால் திறந்து வைக்கப்பட்ட மல்லிப்பட்டினம் அருகிலுள்ள மனோராவிற்குச் செல்லும் கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ளது. இவையன்றி கமலஹாசன் நடித்த கடல் மீன்கள் திரைப்படம் இங்கு சூட்டிங் எடுக்கப்பட்டது. இனி உரையாடலைக் கேளுங்கள்.

அதிரைக்காரன்: வாங்க புஷ் அவர்களே! நீங்கள் இந்தியாவுக்கு வருவது இதுதான் முதல் தடவை என்று நினைக்கிறேன்.

புஷ்: ஆமாம். இதுதான் முதல் தடவை!

அதிரைக்காரன்: மகிழ்ச்சி! உங்கள் வருகை நல்வருகையாகட்டும். உங்கள் வருகை மூலம் இந்திய-அமெரிக்க உறவு பலப்படட்டும்.

புஷ்: நன்றி அதிரைக்காரன்! ஒன்னு சொல்ல மறந்துட்டேன். எனக்கும் இந்தியா மீது தனிப்பிரியம் உண்டு. எப்படியும் நாளில் ஒருதடவையாவது இந்தியாவுடன் கொஞ்சி விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும்.

அதிரைக்காரன்: அப்படியா! நீங்க இருக்கிற பிஸிக்கு, டெய்லி இந்தியாவுடன் கொஞ்சுவது என்பது கஷ்டம். எப்படி போனில் பிரதமர்/ஜனாதிபதியோட பேசுவீங்களா? அல்லது இண்டெர்நெட்டில் சாட் பண்ணுவீங்களா?

புஷ்: அப்படியெல்லாம் இல்லே அதிரைக்காரன்! நான் சொன்னது என் செல்ல நாய்க்குட்டியைப் பற்றி! அதன் செல்லப்பெயர் "இந்தியா"

அதிரைக்காரன்: (மனசுக்குள்) கடிக்கும் வரை நாயும் அழகுதான். அப்புறம் உலக விசயத்தைப் பற்றி கொஞ்சம் கதைக்கலாமா?

புஷ்: ஓ! தாராளமாக!! எனக்கு அமெரிக்காவை விட உலக விசயங்களில் ரொம்ப ஆர்வம்.

அதிரைக்காரன்: ஒஸாமா பின் லாடனை எப்போ பிடிப்பதாக உத்தேசம்?

புஷ்: எங்கள் நாட்டு FBI யும் இன்னும் பல உளவு அமைப்புகளும் வலைவீசி தேடி வருகிறோம். அஞ்சு வருஷம் பொறுத்துட்டீங்க. மேற்கொண்டு சில வருஷங்கள் பொறுத்தா குடியா மூழ்கிடப்போகுது? உங்க நாட்டு சாதாரண வீரப்பனை பிடிக்கவே இருபது வருஷங்களாச்சு உங்களுக்கு. இஸ்ரேல் ராணுவம் கூட உங்க நாட்டு காட்டுல தேடிட்டு அலுத்துப் போயி திரும்பிட்டாங்க. உலகமகா தீவிரவாதி பின்லாடன்னா சும்மாவா?

அதிரைக்காரர்: சரியாச் சொன்னீங்க. ஒஸாமா பின் லாடன் மேல ஏன் உங்களுக்கு அவ்வளவு கோபம்?

புஷ்: என்ன அதிரைக்காரன் இப்படிக் கேட்டுட்டீங்க! எங்க நாட்டில் இருந்த உலக வர்த்தக மையத்தை பாம் போட்டு இடிச்சதும் அதன் மூலம் மூவாயிரத்திற்கும் அதிகமான அப்பாவி மக்களைக் கொன்றதும் தெரியும் தானே? அதை எப்படி எங்களால் பொறுத்துக் கொள்ள முடியும்? அதனால்தான் எங்களுக்கு அவனைப் பிடிக்கவில்லை.

அதிரைக்காரன்: ஓஹோ..அதனாலதான் பிடிக்கலையா? சரி, உலக வர்த்தகக் கட்டிடம் தகர்க்கப் பட்டபோது அமெரிக்கா மீது பரிவும், அதை செய்த தீவிரவாதிகள் மீது வெருப்பும் வந்தது. ஆனால் அதை விட மோசமாக ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் பல வீடுகளைத் தகர்த்ததும், அப்பாவிகளைக் கொன்றதும் நீங்கள்தான் என்பதால் உங்கள் மீதான பரிவு போய் விட்டது. உங்களுக்கும் ஒஸாமா பின் லாடனுக்கும் அதிகம் வித்தியாசமில்லை.

புஷ்: ஹி.ஹி..நானும் பார்த்தேன். இண்டெர்நெட்டுல ஒஸாமா பின்லாடன் மாதிரி என்னை படம் போட்டிருந்தாங்க. பிரபலமானவர்களைக் கார்ட்டூன் போட்டு கிண்டலடிப்பது நிச்சயம் ஜெயிலண்ட்ஸ் போஸ்டெனாத்தான் இருக்கனும்.

அதிரைக்காரன்: ஜயிலண்ட்ஸ் போஸ்டெனில் கிறிஸ்தவர்களைக் கார்ட்டூன் வரைந்து கேவலப்படுத்துவதில்லை என்பதை பாலிஸியாகக் கடைபிடிக்கிறார்கள் என்று ஒரு கார்ட்டூனிஸ்ட் வருத்தப்பட்டிருந்தார். சில மாதங்கள் முன்பு ஒரு கார்ட்டூனிஸ்ட் ஜீசஸ் கிறிஸ்டைக் கிண்டலடித்து வரைந்ததை பிரசுரிக்க மறுத்த செய்தியை கேள்விப்பட்டீங்களா?

புஷ்: அது கிடக்குது விடுங்க! கருத்துச் சுதந்திரத்தை மதிக்க வேண்டும்.

அதிரைக்காரன்: ஆமாமா! சரியாச் சொன்னீங்க!! நீங்க ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் செஞ்ச வண்டவாளங்களை அல்ஜஸீரா புட்டு புட்டு வெச்ச போது, அவர்களின் ஒளிபரப்பு நிலையங்கள் மீது குண்டு போட்டும் நிருபர்களையும் தாக்கியும் கருத்துச் சுதந்திரத்தை மதிச்சதை பார்த்தோமே!

புஷ்: அதிரைக்காரன்! உங்களுக்கு அரசியல் தெரியலேன்னா சும்மா கம்முன்னு கிடங்க. மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடாதீங்க. வேற ஏதாவது ஜாலியான விஷயத்துக்கு வருவோம். பல அப்பாவிகளைக் கொன்ற ஒஸாமாவுக்கு அடைக்கலம் கொடுத்ததால்தான் ஆப்கானிஸ்தானை தாக்கி தாலிபான்களை விரட்டி விட்டு ஆப்கானில் ஜனநாயகத்தை மலரச் செய்தோம்.

அதிரைக்காரன்: மத்தியப் பிரதேசம் போபாலில் பல அப்பாவிகளைக் கொன்ற யூனியன் கார்பைடு ஆண்டெர்ஸனுக்கு நீங்க அடைக்கலம் கொடுத்து வருவது மாதிரின்னு சொல்லுங்க! அப்படியே பாகிஸ்தானிலும் முஷர்ராபையும் கவுத்திட்டு இராணுவ சர்வாதிகரத்திற்கும் முடிவு கட்டணும்.

புஷ்: மத்தியப் பிரதேசத்தை விட எங்களுக்கு மத்தியக் கிழக்குதான் முக்கியம். முஷராப் பேரழிவு ஆயுதங்களை வைத்திருக்கவில்லை. ஆனால் சதாம் ஹுசேன் பேரழிவு ஆயுதங்களை வைத்திருந்தார். அவற்றைக் கொண்டு அமெரிக்காவை 45 நிமிடங்களுக்குள் தாக்க முடிந்திருக்கும். அதற்குள் நாங்கள் போரிட்டு தடுத்து விட்டோம்.

அதிரைக்காரன்: சதாம் பேரழிவு ஆயுதங்களை வைத்திருந்ததால் தானே படையெடுத்து போய் நாட்டை துவம்சம் செய்து விட்டு, இன்று உங்களின் பிடியில் கோர்ட்டு,கேஸு என்று அலைந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் உண்ணாவிரதம் கூட இருந்திருக்கிறார். கடைசியில் பேரழிவு ஆயுதங்கள் அவரிடம் இல்லையல்லவா?

புஷ்: அதுக்குத்தான் தவறான தகவல் கொடுத்த உளவுத் துறைத் தலைவரை பதவி நீக்கம் செய்து தண்டித்து விட்டோமே!

அதிரைக்காரன்: உங்களுக்கு தவறான தகவல் கொடுத்தவருக்கு தண்டனை கொடுத்துட்டீங்க. ஆனால் உலகத்துக்கு தவறான தகவல் கொடுத்த நீங்களும் டோனி பிளேரும் தப்பிச்சுட்டீங்க. ரொம்ப புத்திசாலிகள்தான் நீங்கள் ரெண்டுபேரும்!

புஷ்: காதைக் கொடுங்க அதிரைக்காரன்! (ரகசியமாக) டோனி பிளேருக்கு அவ்வளவு புத்திசாலித்தனம் கிடையாது. எங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தியதைக் காரணம் சொல்லி இன்று ஆப்கானிஸ்தானும், இராக்கும் எங்கள் வசம். அதே மாதிரி இலண்டன் குண்டு வெடிப்பைக் காரணம் காட்டி ஏதாச்சும் ஒரு முஸ்லிம் நாட்டை பிடித்திருக்கலாம். இலண்டன் குண்டு வெடிப்புகளுக்கு ஈரான்தான் காரணம் என்று சொன்னால் நாங்கள் என்ன இல்லை என்றா மறுக்கப் போறோம்?

அதிரைக்காரன்: மறந்தே போச்சு, ஆமா உங்கள் அடுத்த குறி ஈரானாமே?

புஷ்: (நமுட்டுச் சிரிப்பை அடக்கிக் கொண்டு) ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கிறது. இதனால் மிடில் ஈஸ்ட்டில் அமைதிக்கு ஆபத்து என்று இஸ்ரேல் எங்களிடம் முறையிட்டுள்ளது.

அதிரைக்காரன்: இஸ்ரேலும் கூட அணு ஆயுதங்களை வைத்திருக்கிறதே?

புஷ்: நான் என்ன இல்லைன்னா சொன்னேன்? எங்கள் அனுமதியோடு வைத்திருந்தால் பிரச்சினையில்லை. அதிரைக்காரன்! உங்களுக்கு பாலஸ்தீன தீவிரவாதிகளால் இஸ்ரேலியர்கள் எப்படியெல்லாம் இன்னல் படுகிறார்கள் என்று தெரியுமா? தேவையே இல்லாத விசயத்துக்கெல்லாம் இஸ்ரேல் இராணுவ டாங்கிகளை "கல்லால்" அடிக்கிறார்கள். நீங்களே சொல்லுங்கள் "கல்"லு பெரிசா? "அணு" பெரிசா?

அதிரைக்காரன்: உங்களோட பேசிக் கொண்டிருந்ததில் சட்டென்று முடிவுக்கு வர முடியவில்லை. கொஞ்சம் டயம் கொடுங்க எங்கள் வலைப்பூ வாசகர்களிடம் கேட்டுச் சொல்றேன். சரி, இவ்வளவு தூரம் எங்க ஊருக்கு வந்துட்டீங்க. என்ன சாப்பிடுகிறீர்கள்?

புஷ்: எது வேணும்னாலும் கொடுங்க "அதிராம்பட்டினம் அல்வா" மட்டும் வேணாம்! ஏன்னா எனக்கு அல்வா கொடுத்துதான் பழக்கம்!

பி.கு: இந்தியாவிற்கு வந்து விட்டு பாகிஸ்தானுக்கும் செல்லும் வெளிநாட்டு பிரமுகர்கள், இந்தியாவில் இருக்கும் வரை ஒரு மாதிரி பேசிவிட்டு, பாகிஸ்தானுக்குச் சென்ற பிறகு வேறு மாதிரி பேசுவது அல்லது அவ்வாறு பேசியதை பத்திரிக்கைகாரர்கள் திரித்து எழுதி விட்டனர் என்று மறுப்பது வழக்கம். அதனால அடுத்த முறை யாரும் இந்தியாவிற்கு வரும் முன் பாகிஸ்தான் சென்று விட்டு இந்தியாவுக்கு கடைசியாக வந்தால் நல்லது!

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP