வெட்டிப் பேச்சு

(அதுக்காக மற்றதெல்லாம் விவரமான பேச்சு என்று அர்த்தமல்ல.)

வெட்டிப்பொழுது
வந்தவங்க
மினி வெட்டிப்பேச்சு

Free shoutbox @ ShoutMix
ஆதரவு
உருப்படி
td>
அதிராம்பட்டினம் காக்காவும் பட்டுக்கோட்டை அண்ணன்களும்
காக்க! காக்க! என்பது போல் இது இன்னொரு சினிமாப் பெயர் இல்லை. எங்களூரில் அண்ணனை இப்படித்தான் அழைப்போம். இலங்கை-கேரளா போன்ற இடங்களிலும், கீழக்கரை, காயல்பட்டினம் போன்ற முஸ்லிம்கள் அதிகமாக உள்ள ஊர்களிலும் அண்ணனை, காக்கா என்றுதான் அழைக்கிறார்கள்.

இந்நகரங்களுடன் வர்த்தகத் தொடர்பு கொண்டிருந்ததால் அண்ணனை காக்காவாக ம/பதம்மாற்றி இருப்பார்கள் என்று நினைக்கிறேன். மற்றபடி தம்பி, தங்கை, மாமா, மாமி ஆகிய உறவு முறைகளில் மாற்றம் இல்லை. அப்பாவை 'வாப்பா' என்று மரியாதையாக அழைப்போம்! அம்மாவுக்கு 'உம்மா' கொடுப்போம்!! தாத்தாவை 'அப்பா' என்றும் பாட்டியை 'பெரியம்மா' என்றும் சொல்லி இளமையாக்குவோம். எப்படி? எப்போது இந்த உறவு முறைகள் பதம் மாறின என்று தெரியவில்லை. இதைப் படிக்கும் 'காக்கா' க்கள் எவராவது விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

இவ்வுறவுமுறைகளைப் பயன்படுத்துபவன் என்ற முறையில் மற்ற ஊர்களில் சொல்லப்படும் உறவு முறைகளை விட சற்று உரிமையாக அழைப்பது போல் உணருகிறேன். உதாரணமாக மூத்த(வர்களை அல்லது) சகோதரனை 'காக்கா' என்றழைப்பதில் இருக்கும் நெருக்கம் 'அண்ணா' என்றழைப்பதில் இல்லை. துபையில் தமிழர்களை மலையாளிகள் 'அண்ணா' என்றே அழைக்கிறார்கள். இது மரியாதையாகவா அல்லது ஏளனமாகவா என்று தெரியவில்லை.

ஆகவே, அண்ணனை காக்கா என்று வகைப் படுத்துவதும் ஒருவகையில் நன்றே என்று நினைக்கிறேன். அண்ணன் என்பதே சரியான தமிழ்! ஆகவே காக்கா என்பது சரியல்ல என்று நினைக்கும் தமிழ் அண்ணன்மார்கள், அண்ணனுக்கு மிகச்சரியான தமிழ்ச் சொல்லான 'தமையன்' என்பதையும் நினைவில் கொள்க!

'சோறு' என்ற அழகிய தமிழ்ச் சொல்லை சாதமாக குழைத்து 'கறி' என்பதை குழம்பாக்கி குழப்பியவர்கள் மத்தியில் நாங்கள் சோற்றை 'சோறு' என்றும் கறியை 'ஆனம்' என்று 'கிக்'காகச் சொல்கிறோம்.(ஆனத்திற்கு மது என்ற அர்த்தமும் உண்டு).

1960 களில் அதிராம்பட்டினம் தொகுதியில் பட்டுக்கோட்டை உள்ளடங்கி இருந்தது. முன்னாள் தமிழக அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம் அவர்கள் அதிராம்பட்டினம் தொகுதியில் வெங்கட்ராமனை எதிர்த்து நின்று வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. (யாரந்த வெங்கட்ராமன் என்பதை கடைசியில் பார்ப்போம்) 'டமிலில்' பேசுவதை 'இண்டீசண்டாக' நினைக்கும் நம் டமிழர்களுக்கு மத்தியில் உலகின் எப்பகுதிக்குச் சென்றாலும் அண்ணனை, நாங்கள் 'காக்கா' என்றே அழகுத் தமிழில் கூறுகிறோம்.

ஒருவருக்குப் பணங்காசு அதிகம் கிடைத்தாலோ அல்லது பதவி பட்டம் கிடைத்தாலோ சிலருக்கு தாய்மொழியையும் மண்ணையும் மறைத்து அல்லது தவிர்த்து அடையாளப் படுத்திக் கொள்வதில் தான் பெருமையாக நினைக்கிறர்கள். பிறந்த ஊர், மண்ணினைக் குறித்து அதிரைக்காரனுக்கு எப்பவுமே பெருமை தான்.

எங்களூருக்கு அருகிலுள்ள 'பட்டுக்கோட்டை' என்றதும் மக்கள் கவிஞர் கல்யாண சுந்தரம்தான் ஞாபகத்தில் வருவார். அவரின் சொந்த ஊர் பட்டுக்கோட்டை அல்ல என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?



எங்களூருக்கு அருகிலுள்ள 'செங்கப்படத்தான் காடு' என்பதே சரி. சங்கம் படைத்தான் காடு என்ற பெயர் மருவி செங்கப்படத்தான் காடாகி விட்டது. எண்ணற்ற விழிப்புணர்வுப் பாடல்களை எழுதிய பட்டுக்கோட்டையார் உயிருடன் வாழ்ந்த காலத்தில் கல்யாண சுந்தரமாகவே அறியப்படிருப்பார். ஆகவே அவரைக் குற்றம் சொல்வது முறையாகாது. பின்னாளில் அவரை அடையாளப்படுத்த பட்டுக்கோட்டையை அவர் பெயருடன் இணைத்திருப்பார்கள் என்றே நினைக்கிறேன்.

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தைவிட எங்களூருக்குப் புகழ் சேர்த்திருக்க வேண்டிய இன்னொருவரும் தன்னை கிராமத்தானாகக் காட்டிக் கொள்ளவில்லை. ஆம்! முன்னாள் ஜனாதிபதி. ஆர். வெங்கட்ராமன் அவர்கள்தான் அந்த புண்ணியவான்!!



அதிராம்பட்டினத்திலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்திலுள்ள சேதுசாலையில் அமைந்திருக்கும் 'ராஜாமடம்' என்ற குக்கிராமத்தில்தான் திரு.வெங்கட்ராமன் அவர்கள் பிறந்தார். (இங்குள்ள பாலத்தில்தான் ஜார்ஜ் புஷ்ஷுடன் நேர்காணல் நடந்தது) தன்னை பட்டுக்கோட்டைக்காரர் என்றே அறியப்படுத்திக் கொண்டார்.

மற்றபடி பட்டுக்கோட்டை பிரபாகர், பட்டுக்கோட்டை அழகிரி என எங்கள் சுற்று வட்டாரத்தில் பிறந்த பிரபலங்கள், தங்கள் உண்மையான பிறந்தகத்தைக் குறிப்பிடத் தயங்கினாலும் 'அதிரைக்காரன்' என்றுமே இதை கேவலமாக நினைத்ததில்லை!

(ங்கொக்கா மக்கா! நீ என்ன அவர்கள் மாதிரி பிரபலமா? என்று சிலர் வயிறு எரிந்தாலும் எனக்கு அதைப்பற்றி கவலை இல்லை...) ஏனென்றால் இன்னும் பல வயிற்றெரிச்சல்கள் அடுத்தடுத்து காத்திருக்கின்றன.
எழுதியவர்: அதிரைக்காரன் @
28 மறுமொழிகள்:
  • At 10/19/2006 1:16 AM, Blogger ஆழியூரான். said…

    ஏ..மக்கா..சாரி..கக்கா.நானும் அந்த பக்கத்துக்காரந்தான்.(ஒரத்தநாடு)ஆனா இந்த கக்கா விவகாரம் இவ்வளவு நாளா எனக்குத் தெரியலையே..

     

  • At 10/19/2006 2:03 AM, Blogger புகழேந்தி said…

    ஐயா அதிரை,

    அப்படின்னா இனிமே நான் உங்களை அதிரைக்கார காக்கான்னு கூப்பிடவா?
    :)))

     

  • At 10/19/2006 2:07 AM, Anonymous Anonymous said…

    Malayalees call us not only "Anna" and also "Pandi". These are irrespective words.

     

  • At 10/19/2006 2:12 AM, Blogger தொண்டன் said…

    Kakkavum Nallathan Irukku.

     

  • At 10/19/2006 2:48 AM, Blogger Nagore Mani said…

    ஓய்ங்... என்னாங்கனி நீம்பரு... நட்சத்திர அந்தஸ்து கொட்திக்கீறாஹ..... நீம்பர் என்னடான்னா... ஈழாவா..... தாளாவா நு ஒரு கை பாருங்கனி....

     

  • At 10/19/2006 2:56 AM, Blogger அதிரைக்காரன் said…

    //ஏ..மக்கா..சாரி..கக்கா.நானும் அந்த பக்கத்துக்காரந்தான்.(ஒரத்தநாடு)ஆனா இந்த கக்கா விவகாரம் இவ்வளவு நாளா எனக்குத் தெரியலையே..//

    ஒரத்தநாட்டண்ணே!

    காக்காவுக்கு காலை ஒடிச்சுட்டீங்களே. அப்படியே பொடி நடையா தெற்காலே வரலாந்தானே. (ஆடு இல்லாமல்).

    தஞ்சாவூருலேர்ந்து அதிராம்பட்டினம் வர்ரதுக்குள்ளே ரெண்டு நாட்டைக் கடந்துதான் வரமுடியும். 1) ஒரத்தநாடு 2) பாப்பாநாடு.

    ஒரத்தநாட்டுலதான் கடலே இல்லையே? எப்படி சார் ஆழியூருன்னு பேரு வந்தது?

     

  • At 10/19/2006 2:58 AM, Anonymous Anonymous said…

    ஆட்டை கழுதையாக்குகிறீங்க.
    அண்ணனை காக்காவாக்குறீங்க.
    அடுத்து ? :-))

    BYW, சிறப்பாவே எழுதிருக்கீங்க.

    அதிரையில் 'பழையது' நீர்ச்சோறாம்.
    பாயசம் 'பாச்சோறாம்'. நண்பன் சொன்னான்.

     

  • At 10/19/2006 3:08 AM, Blogger அதிரைக்காரன் said…

    // ஓய்ங்... என்னாங்கனி நீம்பரு... நட்சத்திர அந்தஸ்து கொட்திக்கீறாஹ..... நீம்பர் என்னடான்னா... ஈழாவா..... தாளாவா நு ஒரு கை பாருங்கனி....

    சிங்கை சிவாஜி,

    சிங்கை சிவாஜி,

    என்னாங்கன்னி சொல்றீரு? ஒன்னுமே பிரியலே? (ஈ.பி. எண் 356 லே பில்லு கட்டலேன்னு சொன்னாங்க! சீக்கிரம் கட்டுங்கப்பூ!) அப்புறம் சிங்கப்பூர்ல நம்மளப் பத்தி என்னா பேசிக்கிறாங்க? (இது டூ மச்:_)))

     

  • At 10/19/2006 3:11 AM, Blogger அதிரைக்காரன் said…

    //Malayalees call us not only "Anna" and also "Pandi". These are irrespective words. //

    அனாணி,

    அவனுங்க செய்யிர மரியாதைக் குறைவான வேலைய விட நாம ஒன்னும் செஞ்சுடலே. அவனுங்க பொழப்புல ம.அ. போட்டுடுவோம்கற பயத்துலதான் இப்படி ஏளனப்படுத்துவது. (அவனுன்ங்கள மலேசியாவுலயோ புருனையிலையே உள்ளேயே விடமாட்டாங்களாமே உண்மையா?)

    சாப்பிடுறத கழிக்கறது என்பானுங்களே. இதவிட கேவலம் உண்டா? :-)

     

  • At 10/19/2006 3:13 AM, Blogger அதிரைக்காரன் said…

    //Kakkavum Nallathan Irukku. //

    சடையப்பா,

    நீங்க சொல்றது எந்த காக்காவைன்னு கொஞ்சம் விளக்கிடுங்க! (எனக்கென்னமோ சந்தேகமா இருக்கும் உங்கள் பாராட்டு!)

     

  • At 10/19/2006 3:45 AM, Blogger aaruran said…

    யோவ் காக்கா..

    உங்க ஊர் ஆட்களை, பிரபலமானவர்களை மற்றும் கல்லுரி பள்ளி, மற்ற சிற்ப்புக்களை எல்லாம்,எழுதுவோய்

    ஆரூரான்

     

  • At 10/19/2006 12:27 PM, Blogger அதிரைக்காரன் said…

    //உங்க ஊர் ஆட்களை, பிரபலமானவர்களை மற்றும் கல்லுரி பள்ளி, மற்ற சிற்ப்புக்களை எல்லாம்,எழுதுவோய்//

    ஆரூரான் அண்ணே,

    அதிரையில் பிரபலமானவர்கள் பற்றி ஆய்வுக் கட்டுரையே எழுதலாம். எதுக்கும் நட்சத்திரவாரத்துக்குள் ட்ரை பண்ணுறேன்.

    இப்போதைக்கு பிரபலமான ஆட்கள்னா எனக்குத் தெரிஞ்சு என்னையும் அழகு அண்ணனையும் தவிர வேறு யாருமில்லை. (அழகு அண்ணன் எப்படி பிரபலமானார் என்பது எனது பதிவை படிக்கும் நடுநிலைவாதிகளுக்குத் தெரியும்:)

     

  • At 10/19/2006 12:30 PM, Blogger அதிரைக்காரன் said…

    //அதிரையில் 'பழையது' நீர்ச்சோறாம்.
    பாயசம் 'பாச்சோறாம்'. நண்பன் சொன்னான். //

    அணானி அண்ணா,

    உங்கள் ''''பழைய''' நண்பர் சரியாத்தான் சொல்லி இருக்கார்.

    இடியப்பச்சோறும் உண்டு. ரெசிப்பி தேவைப்பட்டால் பின்னூட்டுங்கள். (ஹி.ஹி..வேறெ எப்படி பி.க. செய்யறதாம்?)

     

  • At 10/19/2006 12:50 PM, Blogger அதிரைக்காரன் said…

    //அதிரையில் 'பழையது' நீர்ச்சோறாம்.
    பாயசம் 'பாச்சோறாம்'. நண்பன் சொன்னான். //

    அணானி அண்ணா,

    உங்கள் ''''பழைய''' நண்பர் சரியாத்தான் சொல்லி இருக்கார்.

    இடியப்பச்சோறும் உண்டு. ரெசிப்பி தேவைப்பட்டால் பின்னூட்டுங்கள். (ஹி.ஹி..வேறெ எப்படி பி.க. செய்யறதாம்?)

     

  • At 10/20/2006 3:58 AM, Blogger அழகு said…

    மலையாளிகள் காக்கா என்று சொல்வதில்லை. வழக்கம்போல் ஓரெழுத்தை விழுங்கி விட்டு "க்கா" என்றே சொல்வர். மோகன்லால், மம்முட்டியை "மம்முக்கா" என்றே (முகமது குட்டி காக்கா) முழுதாக அழைக்கிறார்.

    அது சரி, 'அரி' என்றால் அரிசி, 'சிரி' என்றால் சிரிப்பு; 'பரி' என்றால் பரிசா?

     

  • At 10/20/2006 4:11 AM, Blogger குமரன் (Kumaran) said…

    அதிரைக்கார காக்கா அண்ணனுக்கு மதுரைக்கார குமரனின் வணக்கங்கள்.

    மதுரைன்னு சொல்றீகளே. மதுரையே தானா? இல்லை மதுரை பக்கமா ஒரு கிராமமா?ன்னு கேக்கிறது காதுல விழுது. மதுரை மதுரை மதுரையே தான். தெற்கு வாசல் பக்கத்தால. எங்கூருக்கு வந்திருக்கீகளா?

     

  • At 10/20/2006 5:05 AM, Blogger அதிரைக்காரன் said…

    //தெற்கு வாசல் பக்கத்தால. எங்கூருக்கு வந்திருக்கீகளா? //

    மதுரைக்கார குமரன் அண்ணா,

    மதுரைக்கு ரெண்டு தடவை வந்திருக்கேன். மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டுல 2-3 மணி நேரம் நின்றுக் இருக்கிறேன்.

    (நான் பார்த்தவரைக்கும் மதுரையில எந்த மாடும் தாவணி போட்டில்லையே?)

     

  • At 10/20/2006 5:09 AM, Blogger அதிரைக்காரன் said…

    //வழக்கம்போல் ஓரெழுத்தை விழுங்கி விட்டு "க்கா" என்றே சொல்வர்//

    அழகண்ணா,

    கழித்து விட்டுன்னு சொல்லுங்க!

     

  • At 10/20/2006 10:25 AM, Blogger செயபால் said…

    அடடா,
    அதீத ஒற்றுமைகள் என் தமிழிலும் காண்கிறேன்.
    இலங்கையில், எனக்குத் தெரிந்தவை பல உங்களோடு ஒத்துள்ளன.

    காக்கா என்று அண்னனைக் கூப்பிடுவது இலங்கையில் சோனகர் மட்டுமே.
    வாப்பா, உம்மாவும் அவர்களதே.

    தமிழர் அண்ணை தான்.
    தாத்தாவை எங்கள் வீட்டில் நாங்கள் "அப்பா" என்று தான் கூப்பிட்டோம்.
    அப்பாவை அப்பு அல்லது ஐயா என்று தான் கூப்பிடுவோம்.

    சோறு, கறி இப்பொழுதும் பழக்கத்தில் உள்ளது தான்.

     

  • At 10/21/2006 9:23 PM, Blogger திருவடியான் said…

    அதிரையைப் பற்றிய ஒரு நகைச்சுவை..

    தஞ்சையிலிருந்து ஒரு தமிழாசிரியர் ஆரம்பப் பாடசாலை ஆசிரியராக அதிரையில் பணிநியமனமேற்றுச் சென்றிருந்தார்.

    அவர் பணியாற்றிய பள்ளியில் ஆச்சரியமாக அத்தனை குழந்தைகளும் உள்ளுர் இஸ்லாமியக் குழந்தைகள். அவர் "அம்மா, அப்பா" என அரிச்சுவடி சொல்லிக் கொடுக்கலானார்.

    ஆசிரியர்: "அ"
    குழந்தைகள்: ""
    ஆசிரியர்: "ம்"
    குழந்தைகள்: "ம்"
    ஆசிரியர்: "மா"
    குழந்தைகள்: "மா"

    ஆசிரியர்: "அம்மா"
    குழந்தைகள்: "உம்மா"

    ஆசிரியர்: "பிள்ளைகளா... உம்மா இல்லை... அம்மா... சொல்லுங்க அம்மா..."
    குழந்தைகள்: " உம்மா... "

    ஆசிரியர்: "இல்லை... மறுபடியும் சொல்லுங்க அம்மா..."
    குழந்தைகள்:" உம்மா.. "

    ஆசிரியர்: "அடி பின்னிருவேன்... ஒழுங்கா சொல்லணும் இப்ப... அம்மா"
    குழந்தைகள்: " உம்மா.."

    பொறுமையிழந்த வாத்தியார் கைக்கு எட்டிய இடத்திலிருந்த நாலு குழந்தைகளை வெளுக்க... மதியமே பிள்ளைகளின் வாப்பாமார் வந்துவிட்டனர்.

    ஆசிரியர் நடந்ததை விளக்கிச் சொல்ல, கோபமான வாப்பாமார்கள்.. "உம்மாவை உம்மான்னு சொல்லாம வேற என்னன்னு சொல்றதாம். தம்பளவூட்டு ஆளுகதான் அப்படி சொல்லுவாக.. ஒழுங்கு மருவாதய உம்மான்னு சொல்லுக்கொடுங்க இல்லன்னா ஜமாத்துல சொல்லி சீட்டைக் கிழிச்சிடுவோம்" என்று சொன்னார்கள்.

    ஆசிரியர் என்ன பண்ணினார் என்று தானே கேட்கிறீர்கள். உம்மா என்றே சொல்ல ஆரம்பித்துவிட்டார். வேறு வழி... பெண்டாட்டி வேலையை விட்டு வந்தால் வீட்டில் சேர்க்க மாட்டாளே..?

     

  • At 10/22/2006 12:41 AM, Blogger அதிரைக்காரன் said…

    திருவடியான்,

    நல்ல நகைச்சுவை! (அதான் பெயரிலேயே 'வடி'(வேலு) இருக்கிறதே!

    சென்னைக்கு புதிதாக வந்த ஒரு அதிரைக்காரர் மாநகர பேருந்தில் பயண செய்தார். வண்டி மெள்ண்ட் ரோட்டில் வந்து கொண்டிருந்தது. கண்டக்டரிடம் ஒருவர் 'தேவி' ஒன்னு கொடுங்க என்றார். இன்னொருவர் 'சாந்தி' ஒன்னு கொடுங்க என்றார். அதிரைக்காரருக்கு ஒன்றும் புரியவில்லை. கண்டக்டர் டிக்கட்..டிக்கட் என்று அவசரப்படுத்தினார். சரி எல்லோரும் அவங்க அவங்க பொண்டாட்டி பெயரைச் சொல்லித்தான் டிக்கட் கேட்கிறார்கள்னு நெனெச்சு சல்மா ஒன்னு கொடுங்க என்றாராம்.

     

  • At 10/22/2006 5:54 AM, Anonymous Anonymous said…

    தட்டு என்பதை தட்டை என்றும் (ஏன் அதை உருண்டை என்று சொல்லவில்லை, இன்னும் சூப்பரா இருக்குமே) மாற்றி உளருபவர்கள் நீங்கள் தான் என்பதும் தெரியும்.

    அண்ணன் என்றால் மூத்த தமையன் என்று அர்த்தம். அண்ணனுக்கு தமையன் சரியான தமிழ்ச் சொல்லாம். வாத்தியாரை (எம்.ஜி.ஆரை அல்ல) கன்சல்ட் பண்ணுங்கப்பு.

     

  • At 4/08/2007 10:49 AM, Blogger Umapathy (உமாபதி) said…

    இலங்கையில் முஸ்லிம்கள் நாணா என்று அண்ணாவை அழைக்கின்றார்கள் தவிர அண்ணா என்பதனையும் பாவிக்கின்றார்கள். இது வட்டாராவழக்கா? அல்லது எல்லா முஸ்லிம்களும் பாவிக்கின்றார்களா என்பதைத் தெரிவிக்கவியலுமா?. நன்றி.

     

  • At 4/10/2007 12:05 AM, Blogger அதிரைக்காரன் said…

    Umapathy (உமாபதி),

    இலங்கைக்குப் புலம்பெயர்ந்த தமிழக முஸ்லிம்களில் சிலர் நாணா என்றும் சொல்லக் கேட்டிருக்கிறேன். பெரும்பாலும் நாகூர்/நாகைப் பகுதியிலிருந்து சென்றவர்கள்.

    மெட்ராஸ் பாசையில் நைனா என்பது மருவி நாணாவாகி இருக்குமோ?

    (இன்னா நைனா நான் ஸொல்றது சர்தானேபா?:-)

     

  • At 5/16/2007 3:25 AM, Anonymous Anonymous said…

    kaakkaa nalamaa?

     

  • At 10/27/2007 7:02 AM, Anonymous Anonymous said…

    அப்புறம்.. அதிரைக்கார முஸ்லிம் ஆண்கள் திருமணத்திற்கு பின் மாமியார் வீட்டோடு போய் விடுவார்கள் என்கிறார்களே.. உண்மையா?

     

  • At 10/27/2007 5:01 PM, Blogger தஞ்சாவூரான் said…

    அதிரைக் காக்கா அண்ணே/தம்பி?. நானும் அந்தப் பக்கம்தான் (மதுக்கூர் பக்கத்துல, பரவாக்கோட்டைனு ஊர்). நல்லா நகைச்சுவை வருது... தொடர்ந்து எழுதுங்க!

    ஆழியூரான், என் பாட்டன் முப்பாட்டன் சொந்த ஊர், ஒரத்தனாடுதான்... எங்கள் குடும்பத்தில், ஒரத்தனாடு பெயரை இன்னும் போட்டுக்கொள்கிறோம்!!

     

  • At 10/28/2007 6:16 PM, Blogger பிறைநதிபுரத்தான் said…

    நாகூர், பரங்கிப்பேட்டை போன்ற ஊர்களிலும் முஸ்லிம்கள் அண்ணனை 'காக்கா'என்று அழைக்கிறார்கள்..

     

Post a Comment
<< முகப்பு
எவன்டா இவன்?

Name: அதிரைக்காரன்
முகப்பு: Adirampattinam, Tamil Nadu, India
About Me: கண்டதையும் படித்துவிட்டு அதிகமாக யோசனை செய்து பேனா கிடைத்தால் "கிறுக்கி"த் தள்ளிக் கொண்டிருந்தவனுக்கு ஓசில Blogger கிடைத்தால் சொல்லவா வேண்டும்?
See my complete profile
இதையும் படிங்க
பெட்டகம்
நட்சத்திரமாம்!!!
வள்ளல்

Free Blogger Templates

BLOGGER

© வெட்டிப் பேச்சு .Template by Isnaini Dot Com