இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்!

Saturday, October 21, 2006

Proud to be an Indian என்ற தலைப்பிட்ட Email நண்பர்களால் அடிக்கடி Forward செய்யப்படுகிறது. அதிலுள்ள விஷயங்கள் அமெரிக்காவில் புகழ் பெற்ற நிறுவனங்களில் இந்தியர்களின் ஆளுமையைப் பறை சாற்றுவதாக இருந்தன. முதலில் அவற்றைப் படித்தபோது நம் இந்தியர்களின் தொழில் நுட்பத் திறமையை எண்ணி வியந்ததோடு நண்பர்களுக்கும் Forward செய்திருக்கிறேன்.இணையத்திலும் Proud to be an Indian என்று தேடினால் பல தளங்களில் கிடைக்கின்றது.



அத்தகைய தகவலடங்கிய மெயிலில் சொல்லப்பட்டிருந்த சிலவிஷயங்கள் நெருடலாக இருந்தன. (நெருடல் என்பதை விட உண்மைக்கு மாறானது என்பதே சரியென நினைக்கிறேன்) உதாரணமாக சமஸ்கிருதம் உலக மொழிகளில் கணினிக்கேற்ற சிறந்த மொழியாக இருக்கத் தகுதியானது என்று மேற்கத்தியர் ஒருவர் சொல்லியுள்ளதாக உள்ளது. இந்திய மொழிகளில் தமிழுக்கு இருக்கும் இலக்கியத் தொன்மை, கருத்துச் செறிவு, இலக்கண ஆளுமை ஆகிய தகுதிகள், சமஸ்கிருதத்திற்கு இருக்கிறதா என்பதை பன்மொழியறிஞர்கள் ஒப்பிட்டுச் சொன்னால் நன்றாக இருக்கும்.

அதேபோல் கடந்த ஆயிரம் ஆண்டுகளில் இந்தியா அந்நிய நாட்டுடன் போர் தொடுத்ததில்லை என்றும் சொல்லப்பட்டுள்ளது. இந்தியா என்ற தேசம் 1947 க்குப் பிறகே உலகத்தவரால் ஒப்புக் கொள்ளப்பட்ட குடியரசு தேசமாகும். அதற்கு முன் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், நேபாளம், பூடான் ஆகிய பகுதிகள் அடங்கியப் நிலப்பிரதேசமே இந்தியத் துணைக்கண்டம் என்று அறியப்பட்டது.

இந்தியாவை மொகலாயர்கள் சுமார் 800 வருடங்கள் ஆண்டார்கள் என்று சொன்னால், இப்பகுதிகளடங்கிய நிலப்பரப்பே என்று புரிந்து கொள்கிறோம். வேண்டுமென்றால் நம்நாடு கடந்த அறுபது வருடங்களில் பிற நாட்டுடன் வலிந்து போரிட்டதில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். எனினும் இதே சிறப்பு வேறுசில நாடுகளுக்கும் இருப்பதால், இதை இந்தியாவின் தனிச்சிறப்பாகச் சொல்ல முடியாது.இவ்விரு விசயங்கள் என் மனதில் தோன்றிவை. மற்றபடி, என் கூற்று தவறாக இருந்தாலும் சந்தோஷமே! இவை தவிர்த்து மற்ற தகவல்கள் பற்றியும் பார்ப்போம்.

அமெரிக்க நிறுவனங்களில் மட்டும் ஆதிக்கம் செலுத்தும் இந்தியர்கள் பற்றிய புள்ளிவிபரங்கள்

1) வெளிநாட்டு மருத்துவர்களில், இந்தியர்களின் சதவீதம் 38%

2) அமெரிக்காவில் பணியாற்றும் இந்திய விஞ்ஞானிகள் 12%

3) அமெரிக்க விண்வெளிக்கழகம் நாஸாவில் பணியாற்றும் இந்திய விஞ்ஞானிகள் 36%

4) மைக்ரோசாஃப்டிலுள்ள இந்திய மென்பொருள் வல்லுனர்கள் 34%

5) IBM நிறுவனத்தின் பணியாளர்களில் இந்தியர்கள் மட்டும்28%

6) INTEL நிறுவனத்திலுள்ள இந்திய வன்பொருள் வல்லுநர்கள் 17%%

6) ஜெராக்ஸ் நிறுவனத்தில் 38%

7) Yahoo, Hotmail போன்ற இணைய நிறுவனங்களின் தலைமை மற்றும் முன்னோடிகள் இந்தியர்கள்.

8) பெண்டியம் வன்பொருள் சில்லின் (Chip) முன்னோடி இந்தியர்.

இப்படியாக பல அசத்தலான புள்ளி விபரங்கள் கொடுக்கப் பட்டிருந்தன. இவையெல்லாம் ஆதாரப்பூர்வமான புள்ளி விபரங்களே. எனினும் இந்தியாவின் வளங்களை ஆரம்பக் கல்விக்கும் உயர்கல்விக்கும் பயன் படுத்தி விட்டு தமது அறிவை வளப்படுத்திக் கொண்டுவிட்டு, மேலை நாடுகளில் பணியாற்றச் செல்லும் நம்மவர்களைப் பற்றிய புள்ளி விபரங்களைப் பகிர்ந்து கொள்வது நமக்குப் பெருமையாகவா இருக்கிறது?

அமெரிக்காவில் மட்டும் பணியாற்றும் நம் வல்லுனர்கள் இந்தியாவிலேயே சிலகாலம் பணியாற்றி இருந்திருந்தால் "2020 இல் வல்லரசு இந்தியா" என்ற இலக்கு இந்நேரம் நிறைவேறி இருக்குமே. இது போன்ற மெயில்களை சிலாகித்து பிறருக்கும் Forward செய்வதால் தாய்நாட்டை விட்டு அயல் நாடுகளில் பணியாற்றுவதே பெருமை என்ற தவறானக் கண்ணோட்டம், இன்றைய மாணவர்களின் மனதில் விதைக்கப்பட நாமும் காரணமாகி விடுவதை நினைவில் கொண்டு, தயவு செய்து இத்தகைய மடல்களை பிறருக்கு அனுப்பும் முன் சிந்திப்போமாக!

அரேபிய வளைகுடா நாடுகளிலும், கீழைத்தேசங்களிலும்தான் நம்மவர்கள் பணி புரிகிறார்களே, அவர்களைப் பற்றிச் சொல்லாமல் அமெரிக்காவில் பணியாற்றுபவர்களை மட்டும் குற்றம் சொல்வது நியாயமா என சிலர் தவறாக நினைக்கலாம். இத்தகைய நாடுகளில் பணியாற்றும் 90% க்கும் மேற்பட்டவர்கள் நம் நாட்டில் பணியாற்றினால் கிடைக்கும் சொற்ப சம்பளத்தைவிட கிட்டத்தட்ட 10 மடங்கு அதிகம் கிடைக்கிறது; அதில் 90% சதவீதத்தை நம் நாட்டுக்கு அந்நியச் செலாவணிக் கையிருப்பை உயர்த்தி, பெட்ரோலியத் தேவையை ஈடுகட்ட உதவுகின்றனர்.

மேலும், வளைகுடா நாடுகளில் பணியாற்ற திறமையும் தகுதியுமற்ற, உள்நாட்டில் பணியாற்றக்கூட இலாயக்கற்றவர்களாகக் கருத்தப் பட்டவர்களாலும் சம்பாதித்து சாதிக்க முடியும். ஆனால் மேலை நாடுகளில் இந்தியாவில் இருக்கும் அறிவுஜீவிகளும், வல்லுனர்களயும் மட்டுமே இறக்குமதி செய்ய விரும்புகின்றனர்.

மேலும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் இருப்பவர்களில் பெரும்பாலோர் தங்கள் குடும்பம் சகிதமாக இருப்பதால் அவர்களின் வருவாயில் பெரும் பகுதி அந்த நாடுகளிலேயே செலவழிக்கப் பட்டுவிடுகிறது. இதன் மூலம் அவர்களின் அறிவை உறிஞ்சியதோடு வருமானத்தையும் தங்கள் நாடுகளிலேயே செலவழிக்க நிர்ப்பந்திக்கப் படுவதைக் கவனித்தால் என் ஆதங்கத்தில் காழ்ப்பு இல்லை என்பது விளங்கும்.

இந்தியாவின் வல்லரசுக் கனவு 2020 இலிருந்து 2010 என்ற நிலைக்கு முன்னெடுத்துச் செல்ல இப்பதிவை உங்கள் நண்பர்களுக்கும் சுட்டுங்கள். இதுவே நட்சத்திரவாரப் பதிவின் மூலம் நான் விடுக்கும் வேண்டுகோள்.

இந்தியர் என்பதில் 'உண்மையில்' பெருமிதம் கொள்வோம்!!!

Read more...

நமக்குள்ளும் ஒரு தீவிரவாதி

Friday, October 20, 2006

இப்பவெல்லாம் தீவிரவாதி...தீவிரவாதின்னு அடிக்கடி பேப்பர்ல படிக்கிறோம். தீவிரவாதின்னா யாருன்னு சொல்றதுக்காக நான் எடுத்த சினிமாப் படம். ஒன்றல்ல இரண்டல்ல! மூன்று பாகம் எடுத்திருக்கிறேன்.

ஜென்மப்பகை (1986) ஈஸ்ட்மென் கலர்
நம் கதையின் ஹீரோ, தன் குடும்பத்தைச் சீரழித்த வில்லன்களை விரட்டி விரட்டிக் கொல்கிறார். நான்கு வில்லன்களில் மூவர் காலி. தலைமை வில்லன் பிடிகொடுக்காமல் வெகுசாதுர்யமாகத் தப்பி விடுகிறான். படம் முழுக்க வில்லனைப் பழிவாங்க துடிக்கும் ஹீரோவிடம் பிடிகொடுக்காமல் இருந்த வில்லன், கடைசிக் கட்டத்தில் கதாநாயகனிடம் வசமாக மாட்டிக் கொண்டுள்ளான்.

படம் முடிய இன்னும் ஐந்து நிமிடங்கள்தான் பாக்கி உள்ளன. க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி விறுவிறுப்பாக நடக்கிறது. வில்லனை, நம் கதாநாயகன் பறந்து பறந்து அடிக்கிறார். வில்லனும் ஈடுகொடுக்கிறான். இருவரும் சேற்றில் கட்டிப் புரண்டு சண்டையிடுகிறார்கள். கடைசியில் ஒருவழியாக ஹீரோ வில்லனை மடக்கிப் பிடித்து மின்கம்பத்தில் கட்டுகிறார். இதோ ... இன்னும் சில நிமிடங்களில் தன் தந்தையைக் கொன்ற அதேபாணியில் வில்லனைக் கொன்று பழிதீர்க்கப் போகிறான் நம் கதாநாயகன்.

""""டுமீல்""""" வழக்கம்போல கடைசியில் போலிஸ் கதாநாயகனின் கையில் இருக்கும் கத்தியை குறி தவறாமல் சுட்டு, வில்லனைக் காப்பாற்றி, மூன்று கொலைகள் செய்ததால் தேடப்பட்டுவரும் கதாநாயகனைக் கைது செய்கிறார்கள். கதாநாயகன் எவ்வளவோ வசனம் பேசுகிறார். ம்ஹூம்! போலீஸ் கமிஷனர் இசைந்து கொடுக்கவில்லை. "சட்டம் தன் கடமையைச் செய்யும்" என்றும் "சட்டத்தைக் கையிலெடுத்து தண்டிக்க யாருக்கும் உரிமை இல்லை" என்றும் எல்லா சினிமாக்களிலும் சொல்லப் படும் வசனத்தைச் சொல்லி இருவரையும் ஜீப்பில் ஏற்றுகிறார்.

சட்டத்தின் முன் வில்லனுக்குத் தண்டனை வாங்கிக் கொடுப்பதாக பின்னனிக் குரலில் இயக்குனர் பேசுகிறார். சுபம்! படம் முடிவடைந்து மக்கள் வெளியேறுகிறார்கள்.

ஜென்மப்பகை- II (2000) சினிமாஸ்கோப்

சென்னை மத்திய சிறைக்கதவு திறக்கிறது. கதவைத் திறந்து கொண்டு வெளியில் வந்த வில்லன் வானத்தை ஒருமுறை பார்த்து விட்டு, தாடையைத் தடவிக் கொள்கிறான். அருகிலிருக்கும் பெட்டிக்கடையில் சென்று வில்ஸ்ஃபில்டர் சிகரெட் வாங்கிப் பற்ற வைத்துக் கொண்டே, பழைய நினைவில் மூழ்குகிறான். தன்னைக் கதாநாயகன் ரோட்டில் போட்டுப் புரட்டி எடுத்து அவமானப்படுத்திச் சிறைக்கு அனுப்பிய நிகழ்வுகள் ஃப்ளாஷ் பேக்கில் தோன்றுகின்றன.

சிகரெட்டைக் காலில் போட்டுக் கசக்கிவிட்டு, நிகழ்வுகளை மனதில் ஏற்றிக் கொண்டு சிவந்த கண்களுடன் வில்லன் ஹீரோவின் வீட்டை நோக்கிச் செல்கிறான். அவனைக் கண்டதும் அந்தத் தெருவிலுள்ள ஜன்னல் கதவுகள் ஒவ்வொன்றாய் மெதுவாக மூடப்படுகின்றன. தெருவிலிருக்கும் டீக்கடையில் பெஞ்சைக் காலால் உதைத்துவிட்டு "டேய் ஸ்ட்றாங்கா ஒரு டீ போடு!" என்று அதட்டுகிறான். (எல்லா வில்லன்களும் ஸ்ட்றாங் டீதான் குடிப்பார்கள்) உடனே டீ கொடுக்கப்படுகிறது. ஒரு மிடறு குடித்து விட்டு, "ப்பூ! டீயாடா இது?" என்று சொல்லி மீதி டீயை டீகொடுத்த கடைக்காரர் மேல் வில்லன் ஊற்றுகிறான். கிளாஸை கைகளால் பிசைந்து நொறுக்கி விட்டு கோபத்துடன் வெளியேறுகிறான்.

நேராக ஹீரோவின் வீட்டருகே வந்து குரல் கொடுக்கிறான். "டேய்...சோமநாதா! நான் மாயாண்டி பழி தீர்க்க வந்திருக்கிறேன்.உண்மையான ஆம்பளையா இருந்தா வெளியே வாடா!" என்று சொல்லியவாறு கதவை உதைகிறான். கயிற்றுக்கட்டிலில் படித்திருந்த ஹீரோ, வில்லனைப் பொருட்படுத்தாமல் அலட்சியமாகப் பார்க்கிறார். ஹீரோவிடமிருந்து பதில் வராததால் கோபமுற்ற வில்லன், வாசலுக்கு வந்த ஹீரோவின் மனைவியின் கையைப் பிடித்து வம்பிழுக்கிறான்.

உடனே கொதிந்தெழுந்த ஹீரோ, வழக்கம் போல் ஓர் உதை விடுகிறார். பயங்கர சண்டை நடக்கிறது. சண்டை முடிந்து இந்த முறையும் வில்லனை மின்கம்பத்தில் கட்டி பாடம் புகட்ட ஹீரோ தயாராகும் போது, பொது அமைதிக்கு பங்கம் விளைத்ததாக ஹீரோவையும் வில்லனையும் போலீஸ் கைது செய்து ஜீப்பில் அழைத்துச் செல்கிறது. சுபம்!

வழக்கம் போல் சட்டத்தின் முன் வில்லன் தண்டிக்கப்படுவான் என்று இயக்குனர் பின்னனிக் குரலில் பேசுகிறார். படம் முடிவடைகிறது.

ஜென்மப்பகை III (2006) (DTS)

தீபாவளிக்குப் படம் ரிலீஸாகிறது. தியேட்டரில் கூட்டம் அலைமோதுகிறது. இடைப்பட்ட காலத்தில் ஹீரோ அரசியலுக்கு வரப் போகிறார் என்று எதிர்பார்க்கப்பட்டதால் அடுத்த ஒரு மாதத்திற்கு டிக்கெட் ஹவுஸ்ஃபுல்!

வழக்கம் போல் ஆரவாரத்திற்கிடையே ஹீரோ திரையில் தோன்றுகிறார். வில்லனும் ஹீரோவும் நேருக்கு நேர் சந்திக்கிறார்கள். வில்லன் ஹீரோவை ஏளனப்பார்வை பார்க்கிறான். தள்ளு வண்டியில் பழம் விற்றுக் கொண்டிருப்பவனின் கழுத்துத் துண்டை இழுத்து, ஓர் உதைவிட்டு, வண்டியைக் கவிழ்த்த வில்லன், தான் இன்னும் பலசாலியாக இருப்பதை ஹீரோவுக்கு உணர்த்துகிறான்.

ஹீரோ புன்முறுவலுடன் திரையில் மக்களைப்பார்த்து உபதேசம் செய்கிறார். " உயிரினும் மேலான தமிழ் நெஞ்சங்களே! என்னை வாழவைக்கும் ரசிகப் பெருமக்களே! நாம் எந்த உயிரையும் துன்புறுத்தக் கூடாது! இன்னொரு உயிரைத் துன்புறுத்துபவன் மனிதப் பிறவியே அல்ல. பாருங்கள்! மாயண்டியின் அராஜகத்தை! இரண்டு முறை சிறை சென்றும் அவன் இன்னும் திருந்தவில்லை. என் மேல் உள்ள ஜென்மப்பகையினால் நேராக என்னுடன் மோதாமல் அப்பாவி பழவியாபாரியைத் துன்புறுத்துகிறான். அரசன் அன்றே கொல்வான். ஆனால் தெய்வம் நின்று கொல்லும்" என்று சாதுவாக வசனம் பேசி விட்டு அங்கிருந்து நகர்கிறார். வில்லன் ஒவ்வொருமுறையும் அராஜகம் செய்யும் போது ஹீரோ மக்களைப் பார்த்து வசனம் பேசுகிறார்.

இந்தப் படம் கிராபிக்ஸ் காட்சிகள் நிறைந்ததோடு உலகின் பல இடங்களிலும் சென்று படம் பிடிக்கப்பட்டுள்ளது. DTS இசையமைப்பில் AR ரஹ்மானின் பாடல்கள். ஹீரோயின் கனவுக் காட்சிகளில் சுவிஸர்லாந்தில் ஹீரோவுடன் ஆடிப்பாடுகிறார். வில்லன் மட்டும் தொடர்ந்து அராஜகம் செய்து வருகிறான். படம் முடிகிறது.

ரசிகர்களுக்கிடையில் முணுமுணுப்பு. இந்த முறையும் வில்லனை ஒன்றும் செய்யாமல் ஹீரோ உலகமெல்லாம் சுற்றி டூயட் பாடுவதும், அடிக்கடி உபதேசம் செய்வதாலும் ரசிகர்கள் வெறுப்புடன் படம் முடிந்து வெளியேறுகிறார்கள்.

சன் டிவி. குழுவினர் வரும் வார திரைவிமர்சனத்திற்காக கேமரா,மைக் சகிதம் தியேட்டர் வாசலில் ரசிகர்களின் கருத்துக்களைக் கேட்கிறார்கள்.

கல்லூரிமாணவர்: "கிராஃபிக்ஸ் கலக்கல்!"

கல்லூரி மாணவி: "இசையில் AR ரஹ்மான் பூந்து வெளையாடிட்டார்!"

ரிக்ஷாக்காரர்
: "படமா இது! ஹீரோ வெட்டியா வசனம் பேசி அறுக்கிறார்!"

குடும்பஸ்தர் : " என்னா சார் இது அநியாயம்! மூன்று பாகம் படம் எடுத்தும் வில்லனை ஒன்றும் செய்யாமல் விடுகிறார்கள்!"

சிறுவன்: "சண்டையே இல்லே. படம் நல்லாவே இல்லே!"

பள்ளி மாணவி: "ஹீரோ வேஸ்ட்!"

இந்த விமர்சனங்களும் முணுமுணுப்பும் கற்பனைதான். ஆனால் உண்மையில் பெரும்பாலான மக்களின் எண்ண ஓட்டங்களைப் பிரதிபலிப்பதாகும். பொதுவாக, வில்லனாகச் சித்தரிக்கப்படுபவன் கொடுமையானவனாகவும் கதாநாயகன் அந்தக் கொடூரங்களைத் தட்டிக் கேட்பவனாகவும் இருப்பார்கள். அதற்குப் பின்னணியாக கதாநாயகன் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டிருப்பதாக சம்பவங்கள் சித்தரிக்கப் பட்டிருக்கும்.

மேற்கண்ட உதாரணத்தின் மூலம் "அநியாயம் செய்தவன் தண்டிக்கப்பட வேண்டும்" என்ற நீதியை மனித மனம் எதிர்பார்ப்பதையும், தன்னால் முடியாத போழ்து இன்னொருவன் அதைச் செய்வதனால் அவனை ஹீரோவாக ஏற்றுக் கைதட்டி,பாராட்டி மகிழ்ந்து ரசிப்பதையும் காலங்காலமாக கண்டு வருகிறோம்.

மூன்று பாகங்களிலும் அநியாயம் செய்யும் வில்லனை போலீஸ் காப்பாற்றி விடும்போது கடைசியில் ரசிகர்களுக்கு ஏன் வெறுப்பு வருகிறது?. நான்காவது பாகமும் எடுத்து இதே போல் கதையை முடித்தால் படம் ஓடுமா? எரிச்சல் படும் ரசிகர்கள் ஹீரோவுக்கு கொடும்பாவி எரித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆக, பழிக்குப்பழியும் அநியாயக்காரன் தண்டிக்கப்படுவதும் மக்களால் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருப்பதுடன் தீவிர எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.

இன்னொரு கோணத்தில், இக்கதையின் ஹீரோவை வில்லன், தீவிரவாதி என்றும் தன்னைக் கொலை செய்ய துடிக்கும் கொலைகாரன் என்றும் சொன்னால் ஏற்றுக் கொள்வோமா? மாட்டோமல்லவா!!! ஏன்?

இந்த வித்தியாசத்தைப் புரிந்து கொண்டால் ஒருவகையில் நானும் நீங்களும்கூட தீவிரவாதிதான்!

Read more...

NRI-க்களுக்கு கடைசி(யில்) எச்சரிக்கை

Thursday, October 19, 2006

வெளிநாட்டுக்கு வரும் இந்தியர்களில் தமிழர்களை அடையாளம் காண்பது ரொம்ப சுலபம்! அதற்கான வழிமுறைகள் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். நான் முதன்முதலில் வெளிநாடு வந்தபோது கண்டவற்றை சொல்றேன். சிலருக்கு எப்படிடா நம்மை இவன் கவனித்தான் என்று அதிர்ச்சியாக இருக்கலாம். இருந்தாலும் சொல்றேன்.

அ) விமான நிலையத்தில்:

  1. Check In பண்ணும் முன், வழியனுப்ப வந்திருப்பவர்களில் ஓரிருவராவது தேம்பித் தேம்பி அழுது கொண்டே Departure Gate நோக்கிச் செல்வார்.
  2. லக்கேஜ் வெயிட் போடும் இடத்திலிருந்து கொஞ்சம் தூரம் தள்ளி ஒரு பெரிய சூட்கேசையும் பிளாஸ்டிக் பையையும் பக்கதிலுள்ள தூணுக்கு பின்னாடி மறைத்து வைத்து விட்டு மற்றவற்றை லக்கேஜில் போடுவார்.
  3. Allowed Baggage ஐ விட அதிகமாக இருக்கும் போது, ஏர்லைன்ஸ் முகவரிடம் கருணை காட்டச் சொல்லி கெஞ்சுவார்.
  4. Boarding Pass கொடுக்கும் போது ஜன்னல் பக்கம் இருக்கை கேட்டுப் பார்ப்பார்.
  5. இலவச தொலைபேசியில், தேவையில்லாமல் கண்ட கண்டவருக்கும் போன் போட்டு 'எந்தப்பிரச்சியையும் இல்லாமல் Boarding Pass வாங்கி விட்டதாகவும், ப்ளைட்டுக்கு காத்திருப்பதாகவும், இன்னும் சிறிது நேரத்தில் கிளம்பி விடுவதாகவும் கத்துவார்.
  6. விமானத்தில் நுழைவாயிலில் வரவேற்கும் அழகான விமானப் பணிப்பெண்ணிடம் கை குலுக்கி விட்டு உள்ளே நுழைவார்.
  7. Hand Luggage ஐ தலைக்கு மேலுள்ள பகுதியில் வைத்ததுடன் கையில் கொண்டு சென்ற (லுங்கி, செருப்பு, ப்ரஸ்,பேஸ்ட், பழைய வார இதழ்கள் அடங்கிய) பிளாஸ்டிக் பையை தனது காலுக்கருகில் வைத்துக் கொள்வார்.
  8. டாய்லெட்டில் சென்று, (கதவை மூடாமல் அல்லது மூடத் தெரியாமல்) வாஷ்பேசினில் வைக்கப்பட்ட (பேஸ்ட், சேவிங் கிட், சானிட்டரி நாப்கின் உள்ளிட்ட) ஒப்பனை சாதனங்களை பாண்ட் பாக்கெட்டில் எடுத்துப் போட்டுக் கொள்வார்.
  9. விமானத்தில் சீட் பெல்ட் போடச் சொல்லி அறிவிப்பு வந்த பின்னரும், பக்கத்தில் இருப்பவருடன் அரட்டையடித்துக் கொண்டிருப்பார். விமானப் பணிப்பெண் அருகில் வந்து பெல்டைப் போடச் சொல்லி விட்டுச் செல்வார்.
  10. விமானம் பறக்க ஆரம்பித்த சில நேரங்களில் கொடுக்கப்படும் Complimentary chocolate ஐ கொத்தாக அள்ளுவார்.
  11. பரிமாறப்படும் (Inflight Catering) உணவுடன் வழங்கப் படும் அனைத்தையும் தேவைப்படா விட்டாலும் இலவசமாகக் கிடைத்தது என்பதற்காக பயன்படுத்துவார். உதாரணமாக ஆரஞ்ச் ஜூசையும் பால்கலந்த தேனீரையும் அடுத்தடுத்து அருந்துவார்.
  12. குடிகாரப் பயணிகள் வழக்கமாக வழங்கப்படுவதை விட மேற்கொண்டு கேட்டு அசடு வழிவார்கள். கொறிக்க வழங்கப்படுவதையும் தாராளமாக அள்ளிக் கொள்வார்கள்.
  13. நல்ல ஆரோக்கியமாக இருந்தாலும், ப்ளாங்கெட் வாங்கி போர்த்திக் கொள்வார்கள். மறக்காமல் அதை சுருட்டி கொண்டு சென்ற ப்ளாஸ்டிக் பையின் அடியில் மடித்து வைப்பார்கள்.
  14. விமானம் நிலையத்தை அடைந்ததும் கடைசியில் இருப்பவர்கள் முந்திக் கொண்டு வாசலுக்கு வருவார்கள். ஹேண்ட் லக்கேஜை எடுக்கும் போது கீழே உட்கார்ந்திருப்பவரின் தலையில் இடித்து விட்டு பண்பாடு கருதி "சாரி" சொல்வார்கள்.
  15. சுங்கப் பரிசோதனையில் முழு பெட்டியையும் தலை கீழாகக் கவிழ்த்து சோதிக்கப்பட்டு அவமானப் படுத்தப்படுவார்கள்.
  16. ஏர்போர்ட்டில் வரவேற்க காத்திருப்பவர்களிடம், ஊர்ல எல்லோரும் நல்லா இருக்காங்கன்னு சொல்லி பீலா விடுவார். மறுநாள் ஒவ்வொருத்தவரைப் பற்றியும் எடுத்து விட ஆரம்பிப்பார்.

கடை வீதியில் அல்லது சூப்பர் மார்க்கெட்டில்:

  1. முதலில் பொருளின் விலையைத் தேடுவார்.
  2. Buy One Get One செக்சனையே சுத்தி சுத்தி வருவார்.
  3. Perfume களை ஒவ்வொன்றாக அடித்துப் பார்ப்பார். எல்லாவற்றையும் அடித்துப்பார்த்து ஒரு புதுவாசனையுடன் வலம் வருவார்.
  4. உணவுப் பொருட்களின் சாம்பிளை மறக்காமல் எடுத்துச் சாப்பிட்டு விட்டு வாங்காமல் இடத்தைக் காலி பண்ணுவார்.

பணியிடத்தில்:

  1. பெரும்பாலும் ஒவ்வொருநாளும் அரக்கப் பறக்க பணிக்கு வருவார்.
  2. வேலை முடிந்து செல்லும் போது நியூஸ் பேப்பரை மறக்காமல் சுருட்டி எடுத்துச் செல்வார்.
  3. ஹிந்தி தெரியுமா என்று யாராச்சும் கேட்டால், தெரியாவிட்டாலும் கொஞ்சம் கொஞ்சம் தெரியும் என்பார்.
  4. மாங்கு மாங்கென்று உழைத்தாலும் கடைசியில் கெட்ட பெயர்தான் கிடைக்கும்.
  5. எந்த நாட்டுக்காரனாவது வில்லனாக இருப்பார்கள்.

இவையெல்லாம் நம்மவர்களை இழிவு படுத்துவதற்காக சொல்லவில்லை. மேற்சொன்னவற்றில் சில எனக்கும் பொருந்தி இருக்கலாம். உலகம் முழுவது பணி செய்யும் இந்தியர்களில் தமிழர்களின் நிலை இதுவாகவே இருக்கிறது. மனசாட்சிக்கு பயந்து நேர்மையாக உழைத்தாலும் பெரும்பாலான தமிழர்கள் நிம்மதியின்றியே இருக்கின்றனர் என்பது என் கனிப்பு.

NRI தமிழர்களை அவமதிப்பதாக என் மீது கோபத்திலிருப்பவர்கள் கீழுள்ள ஒரு NRI யின் கடிதத்தைப் படிக்கவும்.சொற்ப சம்பளத்தில் குடும்பம் நடத்தும் NRI கணவன் தன் இயலாமையை வெளிக்காட்டாமல் சாதுர்யமாக மனைவிக்கு எழுதிய கடிதத்தையும் அதற்கான அவளின் பதில் கடிதமும் (பிறரின் கடித்தையோ டைரியையோ படிப்பதுதான் அநாகரிகம்; சுயசரிதம் என்று காசுக்கு எழுதி விற்றால் படிக்கலாமாம்.)


--------------------------------------------------------------------------


அன்பே,

இந்த மாதம் உனக்குச் செலவுக்கு பணம் அனுப்ப முடியவில்லை. அதனால் என்ன இருக்கவே இருக்கிறது என் அன்பான முத்தங்கள். ம்..மா..இந்தா புடி.

நூறு முத்தங்களுடன்....

கணவன்.

----------------------------------------------------------------------------
கடிதத்தை பெற்றுக் கொண்ட மனைவி எழுதிய பதில்.



அன்பே ஆருயிரே...!

இந்த மாத செலவாக அனுப்பி வைத்த நூறு முத்தங்களுக்கு நன்றிகள். அதை எப்படி செலவு செய்தேன் என்ற விபரத்தை அறிவீராக.

1) பால்காரர் இரண்டு முத்தங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் பால் தர ஒப்புக் கொண்டுள்ளார்.

2) மின்கட்டணம் வசூலிப்பவர் குறைந்த பட்சம ஏழு முத்தங்களுக்குப் பிறகே மின்கட்டனத்தை தள்ளுபடி செய்ய முடியும் என்று கறாராக சொல்லி விட்டார்.

3) வீட்டு வாடகை கேட்டு வந்த வீட்டு உரிமையாளர் ஒவ்வொரு நாளும் 2-3 முத்தங்களே போதும்; வாடகை வேண்டாம் என்று சொல்லி விட்டார்.

4) மளிகைக் கடைக்காரர் முத்தங்கள் மட்டும் போதாது என்றதால் வேறு சிலவும் கொடுத்து சமாளித்து விட்டேன்.

5) மற்ற செலவுகளுக்கும் ஒன்றிரண்டு முத்தங்களாக நாற்பது முத்தங்கள் காலி.

என்னைப் பற்றி கவலை பட வேண்டாம். நான் சந்தோசமாகவே இருக்கிறேன். கைவசம் முப்பதைந்து முத்தங்கள் உள்ளன. இதை வைத்து இந்த மாதமும் சமாளித்து விடலாம் என்று நம்புகிறேன். இதே முறையை அடுத்தடுத்த மாதத்துக்கும் செய்ய உள்ளேன். சரி வருமா? பதில் போடுங்கள். மற்றபடி உங்கள் உடம்பை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள். பாவம், அங்கு நீங்கள் தனியாக இருக்கிறீர்கள்.

அன்புடனும் காதலுடனும்,

மனைவி

Read more...

அதிராம்பட்டினம் காக்காவும் பட்டுக்கோட்டை அண்ணன்களும்

Wednesday, October 18, 2006

காக்க! காக்க! என்பது போல் இது இன்னொரு சினிமாப் பெயர் இல்லை. எங்களூரில் அண்ணனை இப்படித்தான் அழைப்போம். இலங்கை-கேரளா போன்ற இடங்களிலும், கீழக்கரை, காயல்பட்டினம் போன்ற முஸ்லிம்கள் அதிகமாக உள்ள ஊர்களிலும் அண்ணனை, காக்கா என்றுதான் அழைக்கிறார்கள்.

இந்நகரங்களுடன் வர்த்தகத் தொடர்பு கொண்டிருந்ததால் அண்ணனை காக்காவாக ம/பதம்மாற்றி இருப்பார்கள் என்று நினைக்கிறேன். மற்றபடி தம்பி, தங்கை, மாமா, மாமி ஆகிய உறவு முறைகளில் மாற்றம் இல்லை. அப்பாவை 'வாப்பா' என்று மரியாதையாக அழைப்போம்! அம்மாவுக்கு 'உம்மா' கொடுப்போம்!! தாத்தாவை 'அப்பா' என்றும் பாட்டியை 'பெரியம்மா' என்றும் சொல்லி இளமையாக்குவோம். எப்படி? எப்போது இந்த உறவு முறைகள் பதம் மாறின என்று தெரியவில்லை. இதைப் படிக்கும் 'காக்கா' க்கள் எவராவது விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

இவ்வுறவுமுறைகளைப் பயன்படுத்துபவன் என்ற முறையில் மற்ற ஊர்களில் சொல்லப்படும் உறவு முறைகளை விட சற்று உரிமையாக அழைப்பது போல் உணருகிறேன். உதாரணமாக மூத்த(வர்களை அல்லது) சகோதரனை 'காக்கா' என்றழைப்பதில் இருக்கும் நெருக்கம் 'அண்ணா' என்றழைப்பதில் இல்லை. துபையில் தமிழர்களை மலையாளிகள் 'அண்ணா' என்றே அழைக்கிறார்கள். இது மரியாதையாகவா அல்லது ஏளனமாகவா என்று தெரியவில்லை.

ஆகவே, அண்ணனை காக்கா என்று வகைப் படுத்துவதும் ஒருவகையில் நன்றே என்று நினைக்கிறேன். அண்ணன் என்பதே சரியான தமிழ்! ஆகவே காக்கா என்பது சரியல்ல என்று நினைக்கும் தமிழ் அண்ணன்மார்கள், அண்ணனுக்கு மிகச்சரியான தமிழ்ச் சொல்லான 'தமையன்' என்பதையும் நினைவில் கொள்க!

'சோறு' என்ற அழகிய தமிழ்ச் சொல்லை சாதமாக குழைத்து 'கறி' என்பதை குழம்பாக்கி குழப்பியவர்கள் மத்தியில் நாங்கள் சோற்றை 'சோறு' என்றும் கறியை 'ஆனம்' என்று 'கிக்'காகச் சொல்கிறோம்.(ஆனத்திற்கு மது என்ற அர்த்தமும் உண்டு).

1960 களில் அதிராம்பட்டினம் தொகுதியில் பட்டுக்கோட்டை உள்ளடங்கி இருந்தது. முன்னாள் தமிழக அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம் அவர்கள் அதிராம்பட்டினம் தொகுதியில் வெங்கட்ராமனை எதிர்த்து நின்று வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. (யாரந்த வெங்கட்ராமன் என்பதை கடைசியில் பார்ப்போம்) 'டமிலில்' பேசுவதை 'இண்டீசண்டாக' நினைக்கும் நம் டமிழர்களுக்கு மத்தியில் உலகின் எப்பகுதிக்குச் சென்றாலும் அண்ணனை, நாங்கள் 'காக்கா' என்றே அழகுத் தமிழில் கூறுகிறோம்.

ஒருவருக்குப் பணங்காசு அதிகம் கிடைத்தாலோ அல்லது பதவி பட்டம் கிடைத்தாலோ சிலருக்கு தாய்மொழியையும் மண்ணையும் மறைத்து அல்லது தவிர்த்து அடையாளப் படுத்திக் கொள்வதில் தான் பெருமையாக நினைக்கிறர்கள். பிறந்த ஊர், மண்ணினைக் குறித்து அதிரைக்காரனுக்கு எப்பவுமே பெருமை தான்.

எங்களூருக்கு அருகிலுள்ள 'பட்டுக்கோட்டை' என்றதும் மக்கள் கவிஞர் கல்யாண சுந்தரம்தான் ஞாபகத்தில் வருவார். அவரின் சொந்த ஊர் பட்டுக்கோட்டை அல்ல என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?



எங்களூருக்கு அருகிலுள்ள 'செங்கப்படத்தான் காடு' என்பதே சரி. சங்கம் படைத்தான் காடு என்ற பெயர் மருவி செங்கப்படத்தான் காடாகி விட்டது. எண்ணற்ற விழிப்புணர்வுப் பாடல்களை எழுதிய பட்டுக்கோட்டையார் உயிருடன் வாழ்ந்த காலத்தில் கல்யாண சுந்தரமாகவே அறியப்படிருப்பார். ஆகவே அவரைக் குற்றம் சொல்வது முறையாகாது. பின்னாளில் அவரை அடையாளப்படுத்த பட்டுக்கோட்டையை அவர் பெயருடன் இணைத்திருப்பார்கள் என்றே நினைக்கிறேன்.

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தைவிட எங்களூருக்குப் புகழ் சேர்த்திருக்க வேண்டிய இன்னொருவரும் தன்னை கிராமத்தானாகக் காட்டிக் கொள்ளவில்லை. ஆம்! முன்னாள் ஜனாதிபதி. ஆர். வெங்கட்ராமன் அவர்கள்தான் அந்த புண்ணியவான்!!



அதிராம்பட்டினத்திலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்திலுள்ள சேதுசாலையில் அமைந்திருக்கும் 'ராஜாமடம்' என்ற குக்கிராமத்தில்தான் திரு.வெங்கட்ராமன் அவர்கள் பிறந்தார். (இங்குள்ள பாலத்தில்தான் ஜார்ஜ் புஷ்ஷுடன் நேர்காணல் நடந்தது) தன்னை பட்டுக்கோட்டைக்காரர் என்றே அறியப்படுத்திக் கொண்டார்.

மற்றபடி பட்டுக்கோட்டை பிரபாகர், பட்டுக்கோட்டை அழகிரி என எங்கள் சுற்று வட்டாரத்தில் பிறந்த பிரபலங்கள், தங்கள் உண்மையான பிறந்தகத்தைக் குறிப்பிடத் தயங்கினாலும் 'அதிரைக்காரன்' என்றுமே இதை கேவலமாக நினைத்ததில்லை!

(ங்கொக்கா மக்கா! நீ என்ன அவர்கள் மாதிரி பிரபலமா? என்று சிலர் வயிறு எரிந்தாலும் எனக்கு அதைப்பற்றி கவலை இல்லை...) ஏனென்றால் இன்னும் பல வயிற்றெரிச்சல்கள் அடுத்தடுத்து காத்திருக்கின்றன.

Read more...

ஆட்டைக் கழுதையாக்கிய அமெரிக்கா!

Tuesday, October 17, 2006

தலவரலாற்றை மாற்றிச் சொல்றேன்னு அதிர்ச்சியடையாதீங்க! எங்களூருக்கு "ஆட்டைக் கழுதையாக்கிய அதிராம்பட்டினம்" என்ற பெயர்க்காரணம் சொல்லிடுறேன். எப்ப நடந்தது என்று யாருக்கும் தெரியாது. (குத்து மதிப்பா ஒரு நூறு வருடங்கள்னு வச்சுக்குவோம். அப்பதான் வரலாறாகக் கருதப்படும்!)



ஒரு கிராமத்து மாரிமுத்து அதிரை வழியாக ஆட்டை ஓட்டிக் கொண்டு வந்து கொண்டிருந்தார் . அந்த ஆட்டை அடி(ஆ)மாட்டு? விலைக்கு வாங்கிடனும்னு திட்டம் போட்ட நான்கு நண்பர்கள், அக்கிராமத்தானிடம் (அக்கிரமத்தான் அல்ல) விலை பேசினார்கள். ஆட்டுக்காரர் ஒத்துவரவில்லை . மேலும் இவர்களிடம் விற்பதை விட வேறு யாரிடமாவது விற்றால் நல்லது என்ற முடிவில் 'உங்களிடம் ஆட்டை விற்க முடியாது ' என்று கறாராகச் சொல்லி விட்டார்.

இதனால் கோபமடைந்த அந்நால்வரும் எப்படியும் அந்த ஆட்டை அபகரித்துவிடத் திட்டமிட்டனர். மறுநாள் ஊரின் வெவ்வேறு பகுதியில் ஆட்டுக்காரரின் வருகைக்காக காத்திருந்தனர். வழக்கம் போல நம் ஆட்டுக்காரர் ஆட்டுடன் வந்து கொண்டிருந்தார். ஆட்டுக்காரரைப் பார்த்ததும், "என்ன... வழக்கமா ஆடுதானே விற்பீங்க ! இப்ப கழுதையும் விற்கிறீங்களா?" என்றார். ஆட்டுக்கார மாரிமுத்து குழப்பத்துடன் பதில் சொல்லாமல் அவரைக் கடந்து சென்றார். இன்னொரு இடத்திலிருந்து ஆட்டுக்காரரைக் கண்ட இரண்டாமவர் , "இந்தாப்பா மாரிமுத்து! கழுதை விக்கிறதா?" என்றார். ஆட்டுக்காரருக்கு கொஞ்சம் சந்தேகம் தலை தூக்கியது. பேச்சுக் கொடுக்காமல் ஆட்டுடன் நகர்ந்தார்.

சிறிது தூரத்தில் நின்று கொண்டிருந்த மூன்றாமவர், "நேற்று ஆட்டைத்தான் விற்க மட்டேன்னுட்டீங்க! கழுதையையாச்சும் விலைக்குத் தரக் கூடாதா?" என்றார். ஆட்டுக்காரருக்கு எரிச்சலுடன் குழப்பமும் வந்தது . "என்னடா இது மூன்றுபேருமே, இந்த ஆட்டைக் கழுதைங்கிறானுங்க !? கிண்டலுக்காக இப்படிச் சொல்றாங்களா? அல்லது நாம்தான் மறந்துட்டு கழுதையை ஓட்டிக்கிட்டு வந்துட்டோமா ?" என்ற மனதுக்குள் நினைத்துக் கொண்டு வேகமாக நடந்தார்.

கடைசியாக வந்த நான்காமவர் ஆட்டுக்காரரைப் பார்த்து, "என்ன மாரிமுத்து! கழுதைய இழுத்துக் கொண்டு வெயிலில் நடக்கிறாயே . அதுமேலே ஏறி உட்கார்ந்து போகலாம்தானே" என்றார். ஆட்டுக்காரருக்கு சந்தேகம் உறுதியாகி விட்டது. இதுக்கு மேலே இதை இழுத்துக் கொண்டு சென்றால் பார்க்கிற எல்லோரும் கேலி செய்வாங்க என்று நினைத்தபடி ஆட்டை (கழுதையை?) அவிழ்த்து விட்டு விட்டு ''போங்கடா! நான் ஆடும் விற்கலே கழுதையும் விற்கலே " என்றவாறு தன் கிராமத்துக்கு வெரும் கையுடன் திரும்பினார். பிறகென்ன அந்த நான்கு பேரும் ஓசியில் கிடைத்த ஆட்டை அறுத்து பிரியானி போட்டு சாப்பிட்டாங்களாம் !

இதில் பெருமையாகச் சொல்லி கொள்ளும்படி ஒரு விசயமும் இல்லை. ஆனால் அதிரைக்காரர்களைப் பார்த்து மற்றவர்கள், " போங்க! உங்களைத் தெரியாதா! ஆட்டைக் கழுதையாக்கினவங்கதானே ?" என்பார்கள். சரி, ஆட்டை கழுதை என்று சொல்லி ஏமாற்றியதற்கும் அமெரிக்காவுக்கும் என்ன சம்பந்தம்னு கேட்டீங்கன்னா உண்மையில் நீங்க உலக நடப்பு தெரியாத அப்பாவிதான்.



அதிரைக்காரர்களுக்கு ஆடு என்றால் அமெரிக்காவுக்கு ஆப்கானிஸ்தான், ஈராக் ஆகியவற்றைச் சொல்லலாம். நாலுபேரு சேர்ந்து சொன்னா ஆடும் கூட கழுதையாக்கப் பட்டுவிடும். நாங்களாவது ஆட்டைத்தான் அபகரித்தோம். ஆனால் அமெரிக்கா?

Read more...

மழை ஏன் 'சோ' ன்னு பெய்யிது?

Monday, October 16, 2006

இந்தியாவின் தேசிய ஆங்கில நாளிதழ் The Hindu வில் எங்களூரைப் பற்றிய செய்தி ஒவ்வொரு நாளும் வருகிறது. இதை எத்தனை பேர் கவனித்தீர்கள் என்று தெரியவில்லை. அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஊர் எங்கள் 'அதிராம்பட்டினம்'!!!

அதெல்லாம் சரி, நானும் டெய்லி ஹிந்து பேப்பரை விடாமல் படிக்கிறேன். அப்படி ஒன்னும் பெரிசா அதிராம்பட்டினத்தைப் பற்றி செய்தியைக் கண்டதாக ஞாபகம் இல்லையேன்னு 'அதிராம்பட்டினம் சொக்கு' மாதிரி முழிப்பவர்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புவது என்னவென்றால் தயவு செய்து மீண்டும் ஒருமுறை பார்த்துவிட்டு முழிங்க என்பதே!

அப்புறம் 'அதிராம்பட்டினம் சொக்கு' அண்ணனைப் பத்தி சொல்றதுக்கு ஒன்னுமில்லே . ஏன்னா அப்படி ஒரு நபர் இல்லை என்பது இயக்குனர் திலகம் பாலச்சந்தருக்கே தெரியும். இதுக்கு முன்னால கே .ஏ.தங்கவேலு ஒரு படத்துல '' ஏய் எங்கிட்ட வச்சுக்காதே ! நான் அதிராம்பட்டினத்துக்காரன்" ன்னு வசனம் பேசியதாக சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன் .

திருநெல்வேலி அல்வா கேள்விப்பட்டிருப்பீங்க! அதிராம்பட்டினம் நூர்லாட்ஜ் அல்வா பற்றியும் அல்வா கொடுப்பவர்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய செய்தி . கின்னஸ் சாதனையில் இடம்பிடித்த வளர்ப்பு மகன் திருமணத்தில் பரிமாறப்பட்ட இனிப்பு வகைகளில் அதிராம்பட்டினம் நூர் லாட்ஜ் அல்வாவும் ஒன்று என்று நக்கீரன் நாளிதழ் குறிப்பிட்டது .

நடிகர் டெல்லி கணேஷ் திருநெல்வேலியில் அவுட்டோர் சூட்டிங்கின் போது ஆசைப்பட்டு வாங்கிய அல்வாவை மறுநாள் வீட்டில் ஆசையுடன் சாப்பிடத் திறந்தபோது ஏமாற்றம் அடைந்தாராம்! ஏனென்றால் திருநெல்வேலி அல்வா நடிகர் திலகம் சிவாஜி மாதிரி இருந்ததாம்!!! ஆமாம் பாத்திரத்துடன் ஒன்றி போய் !!!

அதிராம்பட்டினம் நூர்லாட்ஜ் அல்வாவுக்கு என்ன ஸ்பெஷல் என்றால் இதன் பாரம்பர்யம் சுமார் 50 வருடங்களுக்கும் மேல். ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்களால் தயாரிக்கப்படும் இந்த அல்வாவைப்போல் இன்னும் யாரும் தயாரிக்கவில்லை என்பதும், அயல்நாடுகளில் இருக்கும் அதிரைக்காரர்களின் பேவரைட் ஸ்வீட் இந்த அல்வா என்பதும் தனிச்சிறப்பு . இரண்டு நாட்கள் முன்பே ஆர்டர் கொடுத்தால்தான் ப்ரெஷ்ஷாக கிடைக்கும்?! என்பதும் மரபு !

என்னடா இது! நட்சத்திர வாரத்துப் பதிவு அல்வா பற்றியே இருக்கிறது என்று கோபித்துக் கொள்பவர்கள் மன்னிக்க! ' அல்வாகட்டி செய்யது' பற்றியும் சொல்லாவிட்டால் 'துக்ளக் சோ' கோபித்துக் கொள்வார் . 'துக்ளக் சோ'வுக்கும் அதிராம்பட்டினம் செய்யது புகாரிக்கும் இருக்கும் பாரம்பர்ய தொடர்பு பெரும்பாலான துக்ளக் வாசகர்கள் அறிந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன் .

துக்ளக் கேள்வி-பதில் பகுதியில் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து கேள்வி கேட்டு வரும் ' அதிரை புகாரி' என்ற செய்யது புகாரி தமிழகத்தின் பிரபல வார இதழ்களில் நகைச்சுவைத் துணுக்கு எழுத்தாளர் . ஒருமுறை துக்ளக் சோ அவர்களிடம் மழை ஏன் 'சோ' எனப் பெய்கிறது என்று கேட்டதற்கு சோ "பின்னே 'செய்' என்றா பெய்யும் என்று சமாளித்தாராம் .

ஒரு வாரப்பத்திரிக்கையில் எழுதிய ஒரு நகைச்சுவை துணுக்கினால் மாதர் அமைப்பினர் கொதிந்து எழுந்த சம்பவமும் உண்டாம். துணுக்கு எழுதினால் ஏன் மாதர் சங்கங்கள் இவரை எதிர்க்க வேண்டும் என்று 'சோ' முழி முழிப்பவர்கள் பின்வரும் அவரின் ஜோக்கை படித்து முடிவுக்கு வரவும் .

கமலா : ஏண்டி சரசு! கொழந்தை வேணுமின்னு நாம ரெண்டு பேரும் ஒண்ணாதானே கோயில் அரசமரத்தை சுத்தினோம் . ஒனக்கு மட்டும் எப்படிடீ கொழந்த உண்டாச்சு?

சரசு: அது ஒண்ணுமில்லேடி கமலா, நீ கோவில் மரத்தைச் சுத்தினே . நான் கோவில் பூசாரியச் சுத்தினேன்!

Read more...

நான்கு முறை நட்சத்திரமானேன்!

Sunday, October 15, 2006

நானும் தமிழ்மணம் திரட்டியின் நட்சத்திரவார வலைப்பதிவராக தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதாக ஒரு பின்னூட்டம் வந்திருந்தது. யாரோ அனானிதான், தமிழ்மணம் நிர்வாகி பெயரில் போலியாக பின்னூட்டமிட்டிருப்பார் என்ற சந்தேகத்துடன் மதி கந்தசாமி அவர்களிடம் மடலிட்டு உறுதி செய்து கொண்டேன்.

செப்டம்பர்-11 என்ற வாரம் ஒதுக்கப்பட்டிருப்பதாகச் சொன்னார். பின்னர் இன்னொரு வாரம் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், அதன் பின்னர் அந்த வாரத்தில் இன்னொருவர் ஒப்புக் கொண்டுள்ளதால் பிறிதொரு வாரம் என்று கடைசியாக இந்தவார நட்சத்திரம் ஆகியுள்ளேன்.

முதலில் கொடுத்த செப்டம்பர்-11 வாரம், பரபரப்பான வாரமாச்சே; நாமளும் கொஞ்சம் வெளையாடிடலாம் என்று இருந்தேன். இனி செப்டம்பர்-11 என்றால் நடிகர் சூர்யா-ஜோதிகா திருமண நாள்தான் நினைவுக்கு வரும் என்பது அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷுக்கு ஆத்திரத்தை வரவழைக்கும் செய்தி. (இதனால் கோபமுற்று நடிகை ஜோதிகாவுக்கும் அல்காயிதாவுக்கும் தொடர்பு உண்டு என்று சொன்னாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை!)

குதிரைக்காரன்னா பெரும்பாலோருக்குத் தெரிந்திருக்கலாம். யாரய்யா இந்த அதிரைக்காரன்? என்று குழம்பிக் கொண்டிருந்தீர்களேயானால், நீங்கள் ஹிந்து ஆங்கில நாளிதழைக் கவனமாகப் படிப்பதில்லை என்று அர்த்தம். நட்சத்திர வாரத்தில் எழுதப்படும் பதிவுகளில் அங்கங்கு சில 'செக்' வைத்து எழுதுவதும் திட்டமாக இருப்பதால்,ஹிண்டுவுக்கும் அதிரைக்கும் என்ன சம்பந்தம் என்பதைக் கண்டு பிடித்து பின்னூட்டத்தில் சொல்லலாம். (யாரும் சொல்லாத பட்சத்தில் அதிஷ்டசாலி பின்னூட்டதாரர்? தன்னிச்சையாகத் தேர்ந்து எடுக்கப்பட்டு(!?) கடைசிப் பதிவில் கெளரவிக்க/கவ்ரவிக்க/கவுரவிக்கப் படுவார்.)

தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு சம்பிரதாயப்படி என்னைப் பற்றிய அறிமுகம் கொடுக்கச் சொல்லி இருந்தார்கள். அமெரிக்காவில் ஒரு மென்பொருள் நிபுணராக இருக்கிறேன் என்று 'பீலா' விட்டிருக்கலாம்தான். நமக்குத்தான் வெள்ளை மனசாச்சே அதனால் அரபு நாட்டில் குப்பை அள்ளவில்லை என்பதோடு நிறுத்திக் கொள்கிறேன்.(இப்போதெல்லாம் அமெரிக்காவுல இருப்பதாகச் சொல்வது Out of fashion ஆகி விட்டதாக, அமெரிக்காவிலிருந்து பிடிபட்டு மீண்டும் துபைக்கு வந்த நண்பன் சொன்னான்.)

வலைப்பூக்களில் என்ன எழுதுவது என்று குழம்பிக் கொண்டிருந்தேன். தமிழ் திரைப்படங்களில் வரும் "ஏ ஷப்பா ஏ ஷப்பா" பாட்டுப்பாடி சிலுக்கு சுமிதாவுடன் நடனம் ஆடும் அரேபிய ஷேக்குகள் முதல் துபை ஷாப்பிங் பெஸ்டிவலுக்கு விசிட் விசாவில் வந்து பிக்பாக்கெட் அடிக்கும் நம்மவர்கள் (மும்பைகார்) பற்றிய அனுபவங்களைத் தொடராக (மனதுக்குள் மட்டும்) எழுதிய அனுபவம் உண்டு.

அரேபிய நாடுகளில் பத்து வருடங்கள் அனுபவம் இருந்தாலும் அரேபிய அனுபவங்கள் 10.4 (FM சேனல் நம்பரா?) எழுதிப் பிரபலமாகும் அளவுக்கு 'நெறைய தெறமெ' இல்லாததால், வந்த ஈமெயில்களில் என்னைக் கவர்ந்தவற்றை வலைப்பூவில் பதிவதுடன் அவ்வப்போது சொந்தமாகவும் எழுதி வருகிறேன். இதெல்லாம்போக நேரம் கிடைத்தால் அலுவலகப் பணியையும் செய்து வருகிறேன். :-) இனியும் செய்யத் திட்டம். (எதற்கும் எழுத வந்த நோக்கத்தை என் அறிமுகத்தில் மீண்டும் ஒருமுறை பார்த்துக் கொள்ளுங்கள்)

"நான் ஏன் மடம் மாறினேன்" என்றோ அல்லது அரைகுறை அறிவோடு அடுத்தவர் மதநம்பிக்கைளில் புகுந்து அரைக்கிணறு தாண்டும் அபாய சாகசங்களை விடுத்து "சந்தோஷத்தில் மிகப்பெரிய சந்தோஷம் அடுத்தவரை மகிழ்வித்துப் பார்ப்பதில் கிடைக்கும் சந்தோஷமே" என 'முருங்கைக்காய்' புகழ், முந்தானை முடிச்சு பாக்யராஜ் பாலிஸியைக் கடைப்பிடித்து எழுதி வருகிறேன்.

+1 படித்த போது பள்ளி ஆண்டு விழாவில் அரங்கேறிய நாடகத்தை எழுதி இயக்கி, நடித்ததோடு, கவிதைப் போட்டியிலும் கலந்து மூன்றாம் பரிசும் பெற்றது போக, கல்லூரி சஞ்சிகையில் இரண்டு கதைகளும் எழுதியுள்ளேன். 'சரிகமபதநீ' படத்தில் கல்லூரிக் காட்சியில் நண்பர்களுடன் கலந்து கொண்டு நடித்த அனுபவமும் உண்டு. (அனேகமாக வலைப்பூ எழுதிக் கொண்டிருக்கும் ஒரே தமிழ் சினிமா நட்சத்திரம் நானாகத்தான் இருப்பேன் :-)

துபையில் அவ்வப்போது கல்ஃப் நியூஸ் (GULF என்று படிக்கவும்; Kalf ன்னா நாய்!) பத்திரிக்கையில் லட்டர் டு எடிட்டருக்கும் எழுதுவதுண்டு. சென்ற வருடம் சிங்கில் டீயின் விலையை கடைக்காரர்கள் (மலையாளிகள்) சுயமாக 25 பில்ஸ் (துபை பைசா) ஏற்றியதைக் கண்டித்து சிங்கிள்டீ ரசிகர்களின் வயிற்றில் பால் வார்த்தேன். கல்ஃப் நியூசில் லட்டர் டூ எடிட்டருக்கு எழுதிய கடிதத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்ததுடன் துபை முனிசிபாலிசி தலையிட்டு இவ்விலையேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதற்கு என் கடிதமும் காரணமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

தற்போது பிளாஸ்டிக் கப்புக்குத் தடை விதித்து, ஃபோம் கப் என்று கப்பின் தரத்தை உயர்த்தி, 25 பில்ஸ் விலை ஏற்றத்திற்கு துபை முனிசிபாலிட்டி அனுமதித்துள்ளது - இதெல்லாம் நம்ம போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றியைப் பெரிசா பாதித்து விடாது.

ஈராக் போர் வேண்டாமென்று அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷுக்கும் ஈமெயில் போட்டு AUTOREPLY கிடைக்கப் பெற்றிருக்கிறேன். (ஆட்டோ ரிப்ளை என்றால் ஆட்டோவில் ஆள் அனுப்புவதல்ல; தானாகவே அனுப்பப் படும் பதில் என்பது நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை) ஆனால் அந்த மனுசன்(?) அதைக் கண்டு கொள்ளாமல், தன்னிச்சையாக ஈராக் மீது போர் தொடுத்தார். அதனால் ஏற்பட்ட கோபத்தைத் தனிக்க, புஷ்ஷுடன் அவ்வப்போது விளையாடுவதுண்டு.

ஃபலஸ்தீன் பிரச்சினை குறித்து ஜார்ஜ் புஷ்ஷிடம் ராஜாமடம் பாலத்தில் வைத்து நேர்காணல் கண்டு நான் எழுதியது உலக வாசகர்களின் கவனத்தைக் கவர்ந்தது (உங்களைக் கவரவில்லை என்றால் அது என் குற்றமல்ல.) நேர்காணலின்போது 'அணு பெரிதா? கல் பெரிதா?' என்ற புஷ்ஷுடனான விவாதத்தில், கல்தான் பெரிது என்ற அவருடைய விளக்கத்தை நான் ஏற்றுக் கொண்ட வகையில் எனக்கு அவர் நெருக்கமாகி விட்டார். என்வே, நாங்கள் பேசி திட்டமிட்டபடிதான் இதுவரை புஷ் நடந்து கொள்கிறார். என்ன பேசி கொண்டோம் என்பதைச் சொல்வது புஷ்ஷுக்கு நல்லதல்ல என்பதால் இத்தோடு விட்டு விடுகிறேன்.

இவ்வாறாக, என்னைப் பாதித்த அல்லது நான் ரசித்தவற்றை பிரதிபலிப்பதாகவே என் வலைப்பூ இருந்து வருகிறது என்பதை கோடிக்கணக்கான (சும்மா) என் வலைப்பூவாசகர்கள் அறிவர். நட்சத்திர வாரத்தின் பதிவுகளில் எல்லோரையும் போல் சூடாக எழுதாமல் அதிரைக்காரனின் சுய/தல புராணமாக முயற்சி செய்துள்ளேன்.

வழக்கம் போல வெட்டிப்பேச்சாக எழுதுவதா அல்லது பின்னூட்ட கயமைத் தனம் செய்யும் விதமாக பரபரப்பாக எழுதுவதா என்பதை நீங்களும் பின்னூட்டக் கயமைத் தனம் செய்யும்படி (ஆட்டக் கடிச்சு மாட்டக் கடிச்சு :-) கேட்டுக் கொ'ல்'கிறேன்.

Read more...

வாயைக் கிளறாதீங்க ஆமா!

Saturday, October 07, 2006

படத்திலுள்ளவர் வாயசைத்து சொல்வதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அது என்னனவாக இருக்குமென்று உங்களுக்குப் புரிந்திருந்தால் பின்னூட்டமாகச் சொல்லலாம்.

Image and video hosting by TinyPic

Read more...

மைக்ரோசாஃப்டின் பெருந்தன்மை!!!

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஒரு மில்லியன் டாலர் அன்பளிப்பாக கொடுக்கிறதாம்.
Image and video hosting by TinyPic

எனக்கு கிடைத்த செக்கு ரெண்டு வருடம் முந்தையது.

பாக்கட் மணி தேவைப்பட்டால் நீங்களும் முயற்சி செய்யலாம். உங்க பேருலயும் செக்கு கொடுக்கிறாங்களாம். வாங்கிட்டு நன்றிக்கடனா ஒரு பின்னூட்டம் போடுங்க!

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP