தப்புக் கணக்கு

Sunday, December 10, 2006

இந்த அல்ஜீப்ரா கணக்கில் ஏதும் தப்பு உள்ளதா?

Image and video hosting by TinyPic

பிறகு ஏன் வாத்தியார் X போட்டுள்ளார்?

Read more...

:-) இந்தப் புன்னகை என்ன விலை? (-:

Monday, November 27, 2006

உலகின் துன்பங்களுக்கெல்லாம் ஆசையே காரணம் என்பதால் ஆசையை ஒழிக்க புத்தர் ஆசைப்பட்டார்! கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் காசே கடவுளடா என்கிறார்கள்!

நேற்றைய குளிரில் என் ஞானோதயத்தில் உலகின் துன்பங்களுக்கு காரணம் பணம் என்று கண்டுபிடித்தேன்!பரிவர்த்தனைக் கருவியாகப் பயன்படுத்தப்படும் காகிதப் பணத்திற்குப் பதிலாக காகிதமின்றி பரிவர்த்தனை செய்து கொண்டால் எப்படி இருக்கும் என்ற கற்பனை! (உலகம் போற போக்கில் பொருளியல் வல்லுனர்கள் என் கண்டுபிடிப்பை ஏற்றுக் கொண்டு, பொருளியலுக்கான நோபல் பரிசுக்கு அதிரைக்காரனை பரிந்துரைத்தால் கூட ஆச்சிரியமில்லை :) மேலும் இந்தக் கண்டுபிடிப்பை உலகம் ஏற்றுக் கொண்டால் இலஞ்சம், ஊழல், திருட்டு, கொள்ளை, வழிப்பறி, மோசடி எல்லாம் ஒழிந்து விடும்!

பின்வரும் உரையாடல்களில் பணம் பயன்படுத்தப் படாமல் 'புன்னகை' என்ற நாணயம் பயன்படுத்தப் படுகிறது. ஆகவே, கவனமாகப் படித்து புரிந்து கொள்ளவும்.

மளிகைக்கடையில்

நுகர்வோர்: கடைக்காரரே, நான் வாங்கிய பொருட்களுக்கு எவ்வளவு ஆச்சு?

கடைக்காரர்: மூவாயிரத்து ஐம்பது!

நுகர்வோர்: கொஞ்சம் குறைக்கக் கூடாதா?

கடைக்காரர்: சரி, ரவுண்டா மூவாயிரம் கொடுங்க.

நுகர்வோர்: ஓக்கே! என்று சொல்லி கடைக்காரரைப் பார்த்து புன்னகைத்து விட்டு பொருட்களுடன் நகர்கிறார்!

:)))))))))))))))))))((((((((((((((((((((((:

அலுவலகத்தில்.


மேனேஜர்: டியர் ப்ரெண்ட்ஸ்!இந்த மாதம் உங்களனைவருக்கும் போனஸ் ஐயாயிரம் கொடுக்கச் சொல்லி நிர்வாகத்திலிருந்து உத்தரவு வந்திருக்கு! என்றவாறு ஒவ்வொருவரையும் பார்த்து புன்னகைக்கிறார். ஊழியர்களும் மரியாதையாக புன்னகைக்காமல் பெற்றுக் கொள்கிறார்கள்!

வீட்டில்:

மனைவி: என்னங்க, இந்த மாதச் சிலவுக்குப்போக மீதி மூவாயிரம் இருக்கு!

கணவன்: சமர்த்துக்காரி! சரி.சரி..அதில் ஒரு சிறிய தோடு (காதணி) வாங்கிக்கோ!

ட்ராஃபிக் சிக்னலில்:


போக்குவரத்துக் காவலர்: ஹலோ! ஒன்வேயில் வருகிறீர்கள். அபராதம் முன்னூறு கட்டுங்க.

வாகன ஓட்டி: ஹெல்மெட்டைக் கழட்டி, போக்குவரத்துக் காவலரைப் பார்த்து புன்னகைக்கிறார்.

தெருவில்:

பிச்சைக்காரன்: ஐயா! சாப்பிட்டு ரெண்டுநாளாச்சு! யாராவது தர்மம் பண்ணுங்கய்யா!

ஞானோதயம் பெற்ற அதிரைக்காரர் ஒருவர் பிச்சைக்காரரின் அருகில் சென்று புன்னகைத்து விட்டுச் செல்கிறார்.

:)))))))))))))))))))((((((((((((((((((((((:

என்ன வாசகர்களே! படித்து விட்டு சும்மா புன்னகைத்து விட்டுச் செல்லாமல் இந்தமுறையை வேறு எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று உங்களுக்கும் ஞானோதயம் ஏற்பட்டிருந்தால் பின்னூட்டமாகச் சொல்லலாமே!

பின்குறிப்பு # 2: சிலர் புன்னகைக்குப் பதிலாக :-) என்றோ :-)) என்றோ கஞ்சத்தனம் செய்கிறார்கள். ஆகவே, சிறந்த பின்னூட்டத்திற்கு வழக்கம் போல் கணிசமான பரிசு வழங்கப்படும்.

Read more...

சுத்தமாக பின்னூட்டமிடுவது எப்படி?

Thursday, November 23, 2006

நாலஞ்சு நாளா தமிழ்மணத்துல "எப்படி" "எப்படி"னு தலைப்புல நெறைய பேரு எழுதுறாங்க. நமக்கு எழுத நேரமில்லை. அதனால வீடியோவாகவே பதிவு போட்டுட்டேன்.



அனானியாக பின்னூட்டமிட்டு நாறடிப்பவர்கள் இனியாவது ஒழுங்க பின்னூட்டமிட கற்றுக் கொள்ளவும்.

Read more...

காணவில்லை!!!

Wednesday, November 08, 2006

அமெரிக்காவில் ஒரு பெண்மணி மெய்மறந்து மெகா சீரியல் பார்த்துக் கொண்டிருந்த போது படத்திலிருக்கும் செல்ல நாய்க்குட்டி காணமல் போய்விட்டதாம். நேற்று இரவு முதல் தேடி அலுத்துப்போய், கடைசியக 'காணவில்லை' என்று போஸ்டரடித்து ஒவ்வொரு சுவராக ஒட்டி வருகிறார். யாராவது நாய்க்குட்டையைக் கண்டுபிடித்தால் தயவு செய்து 'பின்னூட்டம்' இடுங்கள்.

கவனிக்கவும்! பின்னூட்டம்! புரிஞ்சுதா?


Image and video hosting by TinyPic


புரியாதவர்கள் இங்கு போய் பார்த்து விட்டு மறக்காமல் பின்னூட்டவும்!

அனானியாக இருந்தாலும் பரவாயில்லை! :-)))

Read more...

இராக்கின் புதிய பிரதமர் யார்?

Monday, November 06, 2006

சதாம் ஹுசைனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தற்போதைய தலைப்புச் செய்தியாக இராக்கும் சத்தாம் உசேனும் இருக்கும் போது, அவர்களைப் பற்றிய செய்திகளில் சிலருக்கு குழப்பம் இருக்கலாம்.

Image and video hosting by TinyPic

மாலைநாளிதழ் மாலை மலர் மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன?

Read more...

வெற்றிக்குப் பின்னால் இருக்கும் பெண்!

Thursday, November 02, 2006

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாளாம்! அது உண்மையா பொய்யா என்று தெரிந்து கொள்ள இந்தப் படத்திலிருக்கும் இராணுவ வீரனின் (வெற்றிக்குப்?)பின்னால் இருக்கும் பெண்ணை உங்களின் மவுஸக் கொண்டு கண்டுபிடிக்கலாம்.

Image and video hosting by TinyPic

பின்குறிப்பு (1): வியட்நாமில் அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றி 'வெற்றிகரமாக' உயிருடன் திரும்பி வந்த முன்னாள் அமெரிக்க ராணுவ வீரரின் மகனாம் இவர். தற்போது இராக்கில் இருக்கிறாராம்.

பின்குறிப்பு (2): இராக்கில் பணியாற்றிக் கொண்டிருப்பதால் எதுக்கும் மீண்டும் ஒருமுறை முதல் பத்தியைப் படித்துக் கொள்ளவும்.

Read more...

இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்!

Saturday, October 21, 2006

Proud to be an Indian என்ற தலைப்பிட்ட Email நண்பர்களால் அடிக்கடி Forward செய்யப்படுகிறது. அதிலுள்ள விஷயங்கள் அமெரிக்காவில் புகழ் பெற்ற நிறுவனங்களில் இந்தியர்களின் ஆளுமையைப் பறை சாற்றுவதாக இருந்தன. முதலில் அவற்றைப் படித்தபோது நம் இந்தியர்களின் தொழில் நுட்பத் திறமையை எண்ணி வியந்ததோடு நண்பர்களுக்கும் Forward செய்திருக்கிறேன்.இணையத்திலும் Proud to be an Indian என்று தேடினால் பல தளங்களில் கிடைக்கின்றது.



அத்தகைய தகவலடங்கிய மெயிலில் சொல்லப்பட்டிருந்த சிலவிஷயங்கள் நெருடலாக இருந்தன. (நெருடல் என்பதை விட உண்மைக்கு மாறானது என்பதே சரியென நினைக்கிறேன்) உதாரணமாக சமஸ்கிருதம் உலக மொழிகளில் கணினிக்கேற்ற சிறந்த மொழியாக இருக்கத் தகுதியானது என்று மேற்கத்தியர் ஒருவர் சொல்லியுள்ளதாக உள்ளது. இந்திய மொழிகளில் தமிழுக்கு இருக்கும் இலக்கியத் தொன்மை, கருத்துச் செறிவு, இலக்கண ஆளுமை ஆகிய தகுதிகள், சமஸ்கிருதத்திற்கு இருக்கிறதா என்பதை பன்மொழியறிஞர்கள் ஒப்பிட்டுச் சொன்னால் நன்றாக இருக்கும்.

அதேபோல் கடந்த ஆயிரம் ஆண்டுகளில் இந்தியா அந்நிய நாட்டுடன் போர் தொடுத்ததில்லை என்றும் சொல்லப்பட்டுள்ளது. இந்தியா என்ற தேசம் 1947 க்குப் பிறகே உலகத்தவரால் ஒப்புக் கொள்ளப்பட்ட குடியரசு தேசமாகும். அதற்கு முன் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், நேபாளம், பூடான் ஆகிய பகுதிகள் அடங்கியப் நிலப்பிரதேசமே இந்தியத் துணைக்கண்டம் என்று அறியப்பட்டது.

இந்தியாவை மொகலாயர்கள் சுமார் 800 வருடங்கள் ஆண்டார்கள் என்று சொன்னால், இப்பகுதிகளடங்கிய நிலப்பரப்பே என்று புரிந்து கொள்கிறோம். வேண்டுமென்றால் நம்நாடு கடந்த அறுபது வருடங்களில் பிற நாட்டுடன் வலிந்து போரிட்டதில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். எனினும் இதே சிறப்பு வேறுசில நாடுகளுக்கும் இருப்பதால், இதை இந்தியாவின் தனிச்சிறப்பாகச் சொல்ல முடியாது.இவ்விரு விசயங்கள் என் மனதில் தோன்றிவை. மற்றபடி, என் கூற்று தவறாக இருந்தாலும் சந்தோஷமே! இவை தவிர்த்து மற்ற தகவல்கள் பற்றியும் பார்ப்போம்.

அமெரிக்க நிறுவனங்களில் மட்டும் ஆதிக்கம் செலுத்தும் இந்தியர்கள் பற்றிய புள்ளிவிபரங்கள்

1) வெளிநாட்டு மருத்துவர்களில், இந்தியர்களின் சதவீதம் 38%

2) அமெரிக்காவில் பணியாற்றும் இந்திய விஞ்ஞானிகள் 12%

3) அமெரிக்க விண்வெளிக்கழகம் நாஸாவில் பணியாற்றும் இந்திய விஞ்ஞானிகள் 36%

4) மைக்ரோசாஃப்டிலுள்ள இந்திய மென்பொருள் வல்லுனர்கள் 34%

5) IBM நிறுவனத்தின் பணியாளர்களில் இந்தியர்கள் மட்டும்28%

6) INTEL நிறுவனத்திலுள்ள இந்திய வன்பொருள் வல்லுநர்கள் 17%%

6) ஜெராக்ஸ் நிறுவனத்தில் 38%

7) Yahoo, Hotmail போன்ற இணைய நிறுவனங்களின் தலைமை மற்றும் முன்னோடிகள் இந்தியர்கள்.

8) பெண்டியம் வன்பொருள் சில்லின் (Chip) முன்னோடி இந்தியர்.

இப்படியாக பல அசத்தலான புள்ளி விபரங்கள் கொடுக்கப் பட்டிருந்தன. இவையெல்லாம் ஆதாரப்பூர்வமான புள்ளி விபரங்களே. எனினும் இந்தியாவின் வளங்களை ஆரம்பக் கல்விக்கும் உயர்கல்விக்கும் பயன் படுத்தி விட்டு தமது அறிவை வளப்படுத்திக் கொண்டுவிட்டு, மேலை நாடுகளில் பணியாற்றச் செல்லும் நம்மவர்களைப் பற்றிய புள்ளி விபரங்களைப் பகிர்ந்து கொள்வது நமக்குப் பெருமையாகவா இருக்கிறது?

அமெரிக்காவில் மட்டும் பணியாற்றும் நம் வல்லுனர்கள் இந்தியாவிலேயே சிலகாலம் பணியாற்றி இருந்திருந்தால் "2020 இல் வல்லரசு இந்தியா" என்ற இலக்கு இந்நேரம் நிறைவேறி இருக்குமே. இது போன்ற மெயில்களை சிலாகித்து பிறருக்கும் Forward செய்வதால் தாய்நாட்டை விட்டு அயல் நாடுகளில் பணியாற்றுவதே பெருமை என்ற தவறானக் கண்ணோட்டம், இன்றைய மாணவர்களின் மனதில் விதைக்கப்பட நாமும் காரணமாகி விடுவதை நினைவில் கொண்டு, தயவு செய்து இத்தகைய மடல்களை பிறருக்கு அனுப்பும் முன் சிந்திப்போமாக!

அரேபிய வளைகுடா நாடுகளிலும், கீழைத்தேசங்களிலும்தான் நம்மவர்கள் பணி புரிகிறார்களே, அவர்களைப் பற்றிச் சொல்லாமல் அமெரிக்காவில் பணியாற்றுபவர்களை மட்டும் குற்றம் சொல்வது நியாயமா என சிலர் தவறாக நினைக்கலாம். இத்தகைய நாடுகளில் பணியாற்றும் 90% க்கும் மேற்பட்டவர்கள் நம் நாட்டில் பணியாற்றினால் கிடைக்கும் சொற்ப சம்பளத்தைவிட கிட்டத்தட்ட 10 மடங்கு அதிகம் கிடைக்கிறது; அதில் 90% சதவீதத்தை நம் நாட்டுக்கு அந்நியச் செலாவணிக் கையிருப்பை உயர்த்தி, பெட்ரோலியத் தேவையை ஈடுகட்ட உதவுகின்றனர்.

மேலும், வளைகுடா நாடுகளில் பணியாற்ற திறமையும் தகுதியுமற்ற, உள்நாட்டில் பணியாற்றக்கூட இலாயக்கற்றவர்களாகக் கருத்தப் பட்டவர்களாலும் சம்பாதித்து சாதிக்க முடியும். ஆனால் மேலை நாடுகளில் இந்தியாவில் இருக்கும் அறிவுஜீவிகளும், வல்லுனர்களயும் மட்டுமே இறக்குமதி செய்ய விரும்புகின்றனர்.

மேலும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் இருப்பவர்களில் பெரும்பாலோர் தங்கள் குடும்பம் சகிதமாக இருப்பதால் அவர்களின் வருவாயில் பெரும் பகுதி அந்த நாடுகளிலேயே செலவழிக்கப் பட்டுவிடுகிறது. இதன் மூலம் அவர்களின் அறிவை உறிஞ்சியதோடு வருமானத்தையும் தங்கள் நாடுகளிலேயே செலவழிக்க நிர்ப்பந்திக்கப் படுவதைக் கவனித்தால் என் ஆதங்கத்தில் காழ்ப்பு இல்லை என்பது விளங்கும்.

இந்தியாவின் வல்லரசுக் கனவு 2020 இலிருந்து 2010 என்ற நிலைக்கு முன்னெடுத்துச் செல்ல இப்பதிவை உங்கள் நண்பர்களுக்கும் சுட்டுங்கள். இதுவே நட்சத்திரவாரப் பதிவின் மூலம் நான் விடுக்கும் வேண்டுகோள்.

இந்தியர் என்பதில் 'உண்மையில்' பெருமிதம் கொள்வோம்!!!

Read more...

நமக்குள்ளும் ஒரு தீவிரவாதி

Friday, October 20, 2006

இப்பவெல்லாம் தீவிரவாதி...தீவிரவாதின்னு அடிக்கடி பேப்பர்ல படிக்கிறோம். தீவிரவாதின்னா யாருன்னு சொல்றதுக்காக நான் எடுத்த சினிமாப் படம். ஒன்றல்ல இரண்டல்ல! மூன்று பாகம் எடுத்திருக்கிறேன்.

ஜென்மப்பகை (1986) ஈஸ்ட்மென் கலர்
நம் கதையின் ஹீரோ, தன் குடும்பத்தைச் சீரழித்த வில்லன்களை விரட்டி விரட்டிக் கொல்கிறார். நான்கு வில்லன்களில் மூவர் காலி. தலைமை வில்லன் பிடிகொடுக்காமல் வெகுசாதுர்யமாகத் தப்பி விடுகிறான். படம் முழுக்க வில்லனைப் பழிவாங்க துடிக்கும் ஹீரோவிடம் பிடிகொடுக்காமல் இருந்த வில்லன், கடைசிக் கட்டத்தில் கதாநாயகனிடம் வசமாக மாட்டிக் கொண்டுள்ளான்.

படம் முடிய இன்னும் ஐந்து நிமிடங்கள்தான் பாக்கி உள்ளன. க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி விறுவிறுப்பாக நடக்கிறது. வில்லனை, நம் கதாநாயகன் பறந்து பறந்து அடிக்கிறார். வில்லனும் ஈடுகொடுக்கிறான். இருவரும் சேற்றில் கட்டிப் புரண்டு சண்டையிடுகிறார்கள். கடைசியில் ஒருவழியாக ஹீரோ வில்லனை மடக்கிப் பிடித்து மின்கம்பத்தில் கட்டுகிறார். இதோ ... இன்னும் சில நிமிடங்களில் தன் தந்தையைக் கொன்ற அதேபாணியில் வில்லனைக் கொன்று பழிதீர்க்கப் போகிறான் நம் கதாநாயகன்.

""""டுமீல்""""" வழக்கம்போல கடைசியில் போலிஸ் கதாநாயகனின் கையில் இருக்கும் கத்தியை குறி தவறாமல் சுட்டு, வில்லனைக் காப்பாற்றி, மூன்று கொலைகள் செய்ததால் தேடப்பட்டுவரும் கதாநாயகனைக் கைது செய்கிறார்கள். கதாநாயகன் எவ்வளவோ வசனம் பேசுகிறார். ம்ஹூம்! போலீஸ் கமிஷனர் இசைந்து கொடுக்கவில்லை. "சட்டம் தன் கடமையைச் செய்யும்" என்றும் "சட்டத்தைக் கையிலெடுத்து தண்டிக்க யாருக்கும் உரிமை இல்லை" என்றும் எல்லா சினிமாக்களிலும் சொல்லப் படும் வசனத்தைச் சொல்லி இருவரையும் ஜீப்பில் ஏற்றுகிறார்.

சட்டத்தின் முன் வில்லனுக்குத் தண்டனை வாங்கிக் கொடுப்பதாக பின்னனிக் குரலில் இயக்குனர் பேசுகிறார். சுபம்! படம் முடிவடைந்து மக்கள் வெளியேறுகிறார்கள்.

ஜென்மப்பகை- II (2000) சினிமாஸ்கோப்

சென்னை மத்திய சிறைக்கதவு திறக்கிறது. கதவைத் திறந்து கொண்டு வெளியில் வந்த வில்லன் வானத்தை ஒருமுறை பார்த்து விட்டு, தாடையைத் தடவிக் கொள்கிறான். அருகிலிருக்கும் பெட்டிக்கடையில் சென்று வில்ஸ்ஃபில்டர் சிகரெட் வாங்கிப் பற்ற வைத்துக் கொண்டே, பழைய நினைவில் மூழ்குகிறான். தன்னைக் கதாநாயகன் ரோட்டில் போட்டுப் புரட்டி எடுத்து அவமானப்படுத்திச் சிறைக்கு அனுப்பிய நிகழ்வுகள் ஃப்ளாஷ் பேக்கில் தோன்றுகின்றன.

சிகரெட்டைக் காலில் போட்டுக் கசக்கிவிட்டு, நிகழ்வுகளை மனதில் ஏற்றிக் கொண்டு சிவந்த கண்களுடன் வில்லன் ஹீரோவின் வீட்டை நோக்கிச் செல்கிறான். அவனைக் கண்டதும் அந்தத் தெருவிலுள்ள ஜன்னல் கதவுகள் ஒவ்வொன்றாய் மெதுவாக மூடப்படுகின்றன. தெருவிலிருக்கும் டீக்கடையில் பெஞ்சைக் காலால் உதைத்துவிட்டு "டேய் ஸ்ட்றாங்கா ஒரு டீ போடு!" என்று அதட்டுகிறான். (எல்லா வில்லன்களும் ஸ்ட்றாங் டீதான் குடிப்பார்கள்) உடனே டீ கொடுக்கப்படுகிறது. ஒரு மிடறு குடித்து விட்டு, "ப்பூ! டீயாடா இது?" என்று சொல்லி மீதி டீயை டீகொடுத்த கடைக்காரர் மேல் வில்லன் ஊற்றுகிறான். கிளாஸை கைகளால் பிசைந்து நொறுக்கி விட்டு கோபத்துடன் வெளியேறுகிறான்.

நேராக ஹீரோவின் வீட்டருகே வந்து குரல் கொடுக்கிறான். "டேய்...சோமநாதா! நான் மாயாண்டி பழி தீர்க்க வந்திருக்கிறேன்.உண்மையான ஆம்பளையா இருந்தா வெளியே வாடா!" என்று சொல்லியவாறு கதவை உதைகிறான். கயிற்றுக்கட்டிலில் படித்திருந்த ஹீரோ, வில்லனைப் பொருட்படுத்தாமல் அலட்சியமாகப் பார்க்கிறார். ஹீரோவிடமிருந்து பதில் வராததால் கோபமுற்ற வில்லன், வாசலுக்கு வந்த ஹீரோவின் மனைவியின் கையைப் பிடித்து வம்பிழுக்கிறான்.

உடனே கொதிந்தெழுந்த ஹீரோ, வழக்கம் போல் ஓர் உதை விடுகிறார். பயங்கர சண்டை நடக்கிறது. சண்டை முடிந்து இந்த முறையும் வில்லனை மின்கம்பத்தில் கட்டி பாடம் புகட்ட ஹீரோ தயாராகும் போது, பொது அமைதிக்கு பங்கம் விளைத்ததாக ஹீரோவையும் வில்லனையும் போலீஸ் கைது செய்து ஜீப்பில் அழைத்துச் செல்கிறது. சுபம்!

வழக்கம் போல் சட்டத்தின் முன் வில்லன் தண்டிக்கப்படுவான் என்று இயக்குனர் பின்னனிக் குரலில் பேசுகிறார். படம் முடிவடைகிறது.

ஜென்மப்பகை III (2006) (DTS)

தீபாவளிக்குப் படம் ரிலீஸாகிறது. தியேட்டரில் கூட்டம் அலைமோதுகிறது. இடைப்பட்ட காலத்தில் ஹீரோ அரசியலுக்கு வரப் போகிறார் என்று எதிர்பார்க்கப்பட்டதால் அடுத்த ஒரு மாதத்திற்கு டிக்கெட் ஹவுஸ்ஃபுல்!

வழக்கம் போல் ஆரவாரத்திற்கிடையே ஹீரோ திரையில் தோன்றுகிறார். வில்லனும் ஹீரோவும் நேருக்கு நேர் சந்திக்கிறார்கள். வில்லன் ஹீரோவை ஏளனப்பார்வை பார்க்கிறான். தள்ளு வண்டியில் பழம் விற்றுக் கொண்டிருப்பவனின் கழுத்துத் துண்டை இழுத்து, ஓர் உதைவிட்டு, வண்டியைக் கவிழ்த்த வில்லன், தான் இன்னும் பலசாலியாக இருப்பதை ஹீரோவுக்கு உணர்த்துகிறான்.

ஹீரோ புன்முறுவலுடன் திரையில் மக்களைப்பார்த்து உபதேசம் செய்கிறார். " உயிரினும் மேலான தமிழ் நெஞ்சங்களே! என்னை வாழவைக்கும் ரசிகப் பெருமக்களே! நாம் எந்த உயிரையும் துன்புறுத்தக் கூடாது! இன்னொரு உயிரைத் துன்புறுத்துபவன் மனிதப் பிறவியே அல்ல. பாருங்கள்! மாயண்டியின் அராஜகத்தை! இரண்டு முறை சிறை சென்றும் அவன் இன்னும் திருந்தவில்லை. என் மேல் உள்ள ஜென்மப்பகையினால் நேராக என்னுடன் மோதாமல் அப்பாவி பழவியாபாரியைத் துன்புறுத்துகிறான். அரசன் அன்றே கொல்வான். ஆனால் தெய்வம் நின்று கொல்லும்" என்று சாதுவாக வசனம் பேசி விட்டு அங்கிருந்து நகர்கிறார். வில்லன் ஒவ்வொருமுறையும் அராஜகம் செய்யும் போது ஹீரோ மக்களைப் பார்த்து வசனம் பேசுகிறார்.

இந்தப் படம் கிராபிக்ஸ் காட்சிகள் நிறைந்ததோடு உலகின் பல இடங்களிலும் சென்று படம் பிடிக்கப்பட்டுள்ளது. DTS இசையமைப்பில் AR ரஹ்மானின் பாடல்கள். ஹீரோயின் கனவுக் காட்சிகளில் சுவிஸர்லாந்தில் ஹீரோவுடன் ஆடிப்பாடுகிறார். வில்லன் மட்டும் தொடர்ந்து அராஜகம் செய்து வருகிறான். படம் முடிகிறது.

ரசிகர்களுக்கிடையில் முணுமுணுப்பு. இந்த முறையும் வில்லனை ஒன்றும் செய்யாமல் ஹீரோ உலகமெல்லாம் சுற்றி டூயட் பாடுவதும், அடிக்கடி உபதேசம் செய்வதாலும் ரசிகர்கள் வெறுப்புடன் படம் முடிந்து வெளியேறுகிறார்கள்.

சன் டிவி. குழுவினர் வரும் வார திரைவிமர்சனத்திற்காக கேமரா,மைக் சகிதம் தியேட்டர் வாசலில் ரசிகர்களின் கருத்துக்களைக் கேட்கிறார்கள்.

கல்லூரிமாணவர்: "கிராஃபிக்ஸ் கலக்கல்!"

கல்லூரி மாணவி: "இசையில் AR ரஹ்மான் பூந்து வெளையாடிட்டார்!"

ரிக்ஷாக்காரர்
: "படமா இது! ஹீரோ வெட்டியா வசனம் பேசி அறுக்கிறார்!"

குடும்பஸ்தர் : " என்னா சார் இது அநியாயம்! மூன்று பாகம் படம் எடுத்தும் வில்லனை ஒன்றும் செய்யாமல் விடுகிறார்கள்!"

சிறுவன்: "சண்டையே இல்லே. படம் நல்லாவே இல்லே!"

பள்ளி மாணவி: "ஹீரோ வேஸ்ட்!"

இந்த விமர்சனங்களும் முணுமுணுப்பும் கற்பனைதான். ஆனால் உண்மையில் பெரும்பாலான மக்களின் எண்ண ஓட்டங்களைப் பிரதிபலிப்பதாகும். பொதுவாக, வில்லனாகச் சித்தரிக்கப்படுபவன் கொடுமையானவனாகவும் கதாநாயகன் அந்தக் கொடூரங்களைத் தட்டிக் கேட்பவனாகவும் இருப்பார்கள். அதற்குப் பின்னணியாக கதாநாயகன் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டிருப்பதாக சம்பவங்கள் சித்தரிக்கப் பட்டிருக்கும்.

மேற்கண்ட உதாரணத்தின் மூலம் "அநியாயம் செய்தவன் தண்டிக்கப்பட வேண்டும்" என்ற நீதியை மனித மனம் எதிர்பார்ப்பதையும், தன்னால் முடியாத போழ்து இன்னொருவன் அதைச் செய்வதனால் அவனை ஹீரோவாக ஏற்றுக் கைதட்டி,பாராட்டி மகிழ்ந்து ரசிப்பதையும் காலங்காலமாக கண்டு வருகிறோம்.

மூன்று பாகங்களிலும் அநியாயம் செய்யும் வில்லனை போலீஸ் காப்பாற்றி விடும்போது கடைசியில் ரசிகர்களுக்கு ஏன் வெறுப்பு வருகிறது?. நான்காவது பாகமும் எடுத்து இதே போல் கதையை முடித்தால் படம் ஓடுமா? எரிச்சல் படும் ரசிகர்கள் ஹீரோவுக்கு கொடும்பாவி எரித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆக, பழிக்குப்பழியும் அநியாயக்காரன் தண்டிக்கப்படுவதும் மக்களால் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருப்பதுடன் தீவிர எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.

இன்னொரு கோணத்தில், இக்கதையின் ஹீரோவை வில்லன், தீவிரவாதி என்றும் தன்னைக் கொலை செய்ய துடிக்கும் கொலைகாரன் என்றும் சொன்னால் ஏற்றுக் கொள்வோமா? மாட்டோமல்லவா!!! ஏன்?

இந்த வித்தியாசத்தைப் புரிந்து கொண்டால் ஒருவகையில் நானும் நீங்களும்கூட தீவிரவாதிதான்!

Read more...

NRI-க்களுக்கு கடைசி(யில்) எச்சரிக்கை

Thursday, October 19, 2006

வெளிநாட்டுக்கு வரும் இந்தியர்களில் தமிழர்களை அடையாளம் காண்பது ரொம்ப சுலபம்! அதற்கான வழிமுறைகள் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். நான் முதன்முதலில் வெளிநாடு வந்தபோது கண்டவற்றை சொல்றேன். சிலருக்கு எப்படிடா நம்மை இவன் கவனித்தான் என்று அதிர்ச்சியாக இருக்கலாம். இருந்தாலும் சொல்றேன்.

அ) விமான நிலையத்தில்:

  1. Check In பண்ணும் முன், வழியனுப்ப வந்திருப்பவர்களில் ஓரிருவராவது தேம்பித் தேம்பி அழுது கொண்டே Departure Gate நோக்கிச் செல்வார்.
  2. லக்கேஜ் வெயிட் போடும் இடத்திலிருந்து கொஞ்சம் தூரம் தள்ளி ஒரு பெரிய சூட்கேசையும் பிளாஸ்டிக் பையையும் பக்கதிலுள்ள தூணுக்கு பின்னாடி மறைத்து வைத்து விட்டு மற்றவற்றை லக்கேஜில் போடுவார்.
  3. Allowed Baggage ஐ விட அதிகமாக இருக்கும் போது, ஏர்லைன்ஸ் முகவரிடம் கருணை காட்டச் சொல்லி கெஞ்சுவார்.
  4. Boarding Pass கொடுக்கும் போது ஜன்னல் பக்கம் இருக்கை கேட்டுப் பார்ப்பார்.
  5. இலவச தொலைபேசியில், தேவையில்லாமல் கண்ட கண்டவருக்கும் போன் போட்டு 'எந்தப்பிரச்சியையும் இல்லாமல் Boarding Pass வாங்கி விட்டதாகவும், ப்ளைட்டுக்கு காத்திருப்பதாகவும், இன்னும் சிறிது நேரத்தில் கிளம்பி விடுவதாகவும் கத்துவார்.
  6. விமானத்தில் நுழைவாயிலில் வரவேற்கும் அழகான விமானப் பணிப்பெண்ணிடம் கை குலுக்கி விட்டு உள்ளே நுழைவார்.
  7. Hand Luggage ஐ தலைக்கு மேலுள்ள பகுதியில் வைத்ததுடன் கையில் கொண்டு சென்ற (லுங்கி, செருப்பு, ப்ரஸ்,பேஸ்ட், பழைய வார இதழ்கள் அடங்கிய) பிளாஸ்டிக் பையை தனது காலுக்கருகில் வைத்துக் கொள்வார்.
  8. டாய்லெட்டில் சென்று, (கதவை மூடாமல் அல்லது மூடத் தெரியாமல்) வாஷ்பேசினில் வைக்கப்பட்ட (பேஸ்ட், சேவிங் கிட், சானிட்டரி நாப்கின் உள்ளிட்ட) ஒப்பனை சாதனங்களை பாண்ட் பாக்கெட்டில் எடுத்துப் போட்டுக் கொள்வார்.
  9. விமானத்தில் சீட் பெல்ட் போடச் சொல்லி அறிவிப்பு வந்த பின்னரும், பக்கத்தில் இருப்பவருடன் அரட்டையடித்துக் கொண்டிருப்பார். விமானப் பணிப்பெண் அருகில் வந்து பெல்டைப் போடச் சொல்லி விட்டுச் செல்வார்.
  10. விமானம் பறக்க ஆரம்பித்த சில நேரங்களில் கொடுக்கப்படும் Complimentary chocolate ஐ கொத்தாக அள்ளுவார்.
  11. பரிமாறப்படும் (Inflight Catering) உணவுடன் வழங்கப் படும் அனைத்தையும் தேவைப்படா விட்டாலும் இலவசமாகக் கிடைத்தது என்பதற்காக பயன்படுத்துவார். உதாரணமாக ஆரஞ்ச் ஜூசையும் பால்கலந்த தேனீரையும் அடுத்தடுத்து அருந்துவார்.
  12. குடிகாரப் பயணிகள் வழக்கமாக வழங்கப்படுவதை விட மேற்கொண்டு கேட்டு அசடு வழிவார்கள். கொறிக்க வழங்கப்படுவதையும் தாராளமாக அள்ளிக் கொள்வார்கள்.
  13. நல்ல ஆரோக்கியமாக இருந்தாலும், ப்ளாங்கெட் வாங்கி போர்த்திக் கொள்வார்கள். மறக்காமல் அதை சுருட்டி கொண்டு சென்ற ப்ளாஸ்டிக் பையின் அடியில் மடித்து வைப்பார்கள்.
  14. விமானம் நிலையத்தை அடைந்ததும் கடைசியில் இருப்பவர்கள் முந்திக் கொண்டு வாசலுக்கு வருவார்கள். ஹேண்ட் லக்கேஜை எடுக்கும் போது கீழே உட்கார்ந்திருப்பவரின் தலையில் இடித்து விட்டு பண்பாடு கருதி "சாரி" சொல்வார்கள்.
  15. சுங்கப் பரிசோதனையில் முழு பெட்டியையும் தலை கீழாகக் கவிழ்த்து சோதிக்கப்பட்டு அவமானப் படுத்தப்படுவார்கள்.
  16. ஏர்போர்ட்டில் வரவேற்க காத்திருப்பவர்களிடம், ஊர்ல எல்லோரும் நல்லா இருக்காங்கன்னு சொல்லி பீலா விடுவார். மறுநாள் ஒவ்வொருத்தவரைப் பற்றியும் எடுத்து விட ஆரம்பிப்பார்.

கடை வீதியில் அல்லது சூப்பர் மார்க்கெட்டில்:

  1. முதலில் பொருளின் விலையைத் தேடுவார்.
  2. Buy One Get One செக்சனையே சுத்தி சுத்தி வருவார்.
  3. Perfume களை ஒவ்வொன்றாக அடித்துப் பார்ப்பார். எல்லாவற்றையும் அடித்துப்பார்த்து ஒரு புதுவாசனையுடன் வலம் வருவார்.
  4. உணவுப் பொருட்களின் சாம்பிளை மறக்காமல் எடுத்துச் சாப்பிட்டு விட்டு வாங்காமல் இடத்தைக் காலி பண்ணுவார்.

பணியிடத்தில்:

  1. பெரும்பாலும் ஒவ்வொருநாளும் அரக்கப் பறக்க பணிக்கு வருவார்.
  2. வேலை முடிந்து செல்லும் போது நியூஸ் பேப்பரை மறக்காமல் சுருட்டி எடுத்துச் செல்வார்.
  3. ஹிந்தி தெரியுமா என்று யாராச்சும் கேட்டால், தெரியாவிட்டாலும் கொஞ்சம் கொஞ்சம் தெரியும் என்பார்.
  4. மாங்கு மாங்கென்று உழைத்தாலும் கடைசியில் கெட்ட பெயர்தான் கிடைக்கும்.
  5. எந்த நாட்டுக்காரனாவது வில்லனாக இருப்பார்கள்.

இவையெல்லாம் நம்மவர்களை இழிவு படுத்துவதற்காக சொல்லவில்லை. மேற்சொன்னவற்றில் சில எனக்கும் பொருந்தி இருக்கலாம். உலகம் முழுவது பணி செய்யும் இந்தியர்களில் தமிழர்களின் நிலை இதுவாகவே இருக்கிறது. மனசாட்சிக்கு பயந்து நேர்மையாக உழைத்தாலும் பெரும்பாலான தமிழர்கள் நிம்மதியின்றியே இருக்கின்றனர் என்பது என் கனிப்பு.

NRI தமிழர்களை அவமதிப்பதாக என் மீது கோபத்திலிருப்பவர்கள் கீழுள்ள ஒரு NRI யின் கடிதத்தைப் படிக்கவும்.சொற்ப சம்பளத்தில் குடும்பம் நடத்தும் NRI கணவன் தன் இயலாமையை வெளிக்காட்டாமல் சாதுர்யமாக மனைவிக்கு எழுதிய கடிதத்தையும் அதற்கான அவளின் பதில் கடிதமும் (பிறரின் கடித்தையோ டைரியையோ படிப்பதுதான் அநாகரிகம்; சுயசரிதம் என்று காசுக்கு எழுதி விற்றால் படிக்கலாமாம்.)


--------------------------------------------------------------------------


அன்பே,

இந்த மாதம் உனக்குச் செலவுக்கு பணம் அனுப்ப முடியவில்லை. அதனால் என்ன இருக்கவே இருக்கிறது என் அன்பான முத்தங்கள். ம்..மா..இந்தா புடி.

நூறு முத்தங்களுடன்....

கணவன்.

----------------------------------------------------------------------------
கடிதத்தை பெற்றுக் கொண்ட மனைவி எழுதிய பதில்.



அன்பே ஆருயிரே...!

இந்த மாத செலவாக அனுப்பி வைத்த நூறு முத்தங்களுக்கு நன்றிகள். அதை எப்படி செலவு செய்தேன் என்ற விபரத்தை அறிவீராக.

1) பால்காரர் இரண்டு முத்தங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் பால் தர ஒப்புக் கொண்டுள்ளார்.

2) மின்கட்டணம் வசூலிப்பவர் குறைந்த பட்சம ஏழு முத்தங்களுக்குப் பிறகே மின்கட்டனத்தை தள்ளுபடி செய்ய முடியும் என்று கறாராக சொல்லி விட்டார்.

3) வீட்டு வாடகை கேட்டு வந்த வீட்டு உரிமையாளர் ஒவ்வொரு நாளும் 2-3 முத்தங்களே போதும்; வாடகை வேண்டாம் என்று சொல்லி விட்டார்.

4) மளிகைக் கடைக்காரர் முத்தங்கள் மட்டும் போதாது என்றதால் வேறு சிலவும் கொடுத்து சமாளித்து விட்டேன்.

5) மற்ற செலவுகளுக்கும் ஒன்றிரண்டு முத்தங்களாக நாற்பது முத்தங்கள் காலி.

என்னைப் பற்றி கவலை பட வேண்டாம். நான் சந்தோசமாகவே இருக்கிறேன். கைவசம் முப்பதைந்து முத்தங்கள் உள்ளன. இதை வைத்து இந்த மாதமும் சமாளித்து விடலாம் என்று நம்புகிறேன். இதே முறையை அடுத்தடுத்த மாதத்துக்கும் செய்ய உள்ளேன். சரி வருமா? பதில் போடுங்கள். மற்றபடி உங்கள் உடம்பை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள். பாவம், அங்கு நீங்கள் தனியாக இருக்கிறீர்கள்.

அன்புடனும் காதலுடனும்,

மனைவி

Read more...

அதிராம்பட்டினம் காக்காவும் பட்டுக்கோட்டை அண்ணன்களும்

Wednesday, October 18, 2006

காக்க! காக்க! என்பது போல் இது இன்னொரு சினிமாப் பெயர் இல்லை. எங்களூரில் அண்ணனை இப்படித்தான் அழைப்போம். இலங்கை-கேரளா போன்ற இடங்களிலும், கீழக்கரை, காயல்பட்டினம் போன்ற முஸ்லிம்கள் அதிகமாக உள்ள ஊர்களிலும் அண்ணனை, காக்கா என்றுதான் அழைக்கிறார்கள்.

இந்நகரங்களுடன் வர்த்தகத் தொடர்பு கொண்டிருந்ததால் அண்ணனை காக்காவாக ம/பதம்மாற்றி இருப்பார்கள் என்று நினைக்கிறேன். மற்றபடி தம்பி, தங்கை, மாமா, மாமி ஆகிய உறவு முறைகளில் மாற்றம் இல்லை. அப்பாவை 'வாப்பா' என்று மரியாதையாக அழைப்போம்! அம்மாவுக்கு 'உம்மா' கொடுப்போம்!! தாத்தாவை 'அப்பா' என்றும் பாட்டியை 'பெரியம்மா' என்றும் சொல்லி இளமையாக்குவோம். எப்படி? எப்போது இந்த உறவு முறைகள் பதம் மாறின என்று தெரியவில்லை. இதைப் படிக்கும் 'காக்கா' க்கள் எவராவது விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

இவ்வுறவுமுறைகளைப் பயன்படுத்துபவன் என்ற முறையில் மற்ற ஊர்களில் சொல்லப்படும் உறவு முறைகளை விட சற்று உரிமையாக அழைப்பது போல் உணருகிறேன். உதாரணமாக மூத்த(வர்களை அல்லது) சகோதரனை 'காக்கா' என்றழைப்பதில் இருக்கும் நெருக்கம் 'அண்ணா' என்றழைப்பதில் இல்லை. துபையில் தமிழர்களை மலையாளிகள் 'அண்ணா' என்றே அழைக்கிறார்கள். இது மரியாதையாகவா அல்லது ஏளனமாகவா என்று தெரியவில்லை.

ஆகவே, அண்ணனை காக்கா என்று வகைப் படுத்துவதும் ஒருவகையில் நன்றே என்று நினைக்கிறேன். அண்ணன் என்பதே சரியான தமிழ்! ஆகவே காக்கா என்பது சரியல்ல என்று நினைக்கும் தமிழ் அண்ணன்மார்கள், அண்ணனுக்கு மிகச்சரியான தமிழ்ச் சொல்லான 'தமையன்' என்பதையும் நினைவில் கொள்க!

'சோறு' என்ற அழகிய தமிழ்ச் சொல்லை சாதமாக குழைத்து 'கறி' என்பதை குழம்பாக்கி குழப்பியவர்கள் மத்தியில் நாங்கள் சோற்றை 'சோறு' என்றும் கறியை 'ஆனம்' என்று 'கிக்'காகச் சொல்கிறோம்.(ஆனத்திற்கு மது என்ற அர்த்தமும் உண்டு).

1960 களில் அதிராம்பட்டினம் தொகுதியில் பட்டுக்கோட்டை உள்ளடங்கி இருந்தது. முன்னாள் தமிழக அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம் அவர்கள் அதிராம்பட்டினம் தொகுதியில் வெங்கட்ராமனை எதிர்த்து நின்று வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. (யாரந்த வெங்கட்ராமன் என்பதை கடைசியில் பார்ப்போம்) 'டமிலில்' பேசுவதை 'இண்டீசண்டாக' நினைக்கும் நம் டமிழர்களுக்கு மத்தியில் உலகின் எப்பகுதிக்குச் சென்றாலும் அண்ணனை, நாங்கள் 'காக்கா' என்றே அழகுத் தமிழில் கூறுகிறோம்.

ஒருவருக்குப் பணங்காசு அதிகம் கிடைத்தாலோ அல்லது பதவி பட்டம் கிடைத்தாலோ சிலருக்கு தாய்மொழியையும் மண்ணையும் மறைத்து அல்லது தவிர்த்து அடையாளப் படுத்திக் கொள்வதில் தான் பெருமையாக நினைக்கிறர்கள். பிறந்த ஊர், மண்ணினைக் குறித்து அதிரைக்காரனுக்கு எப்பவுமே பெருமை தான்.

எங்களூருக்கு அருகிலுள்ள 'பட்டுக்கோட்டை' என்றதும் மக்கள் கவிஞர் கல்யாண சுந்தரம்தான் ஞாபகத்தில் வருவார். அவரின் சொந்த ஊர் பட்டுக்கோட்டை அல்ல என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?



எங்களூருக்கு அருகிலுள்ள 'செங்கப்படத்தான் காடு' என்பதே சரி. சங்கம் படைத்தான் காடு என்ற பெயர் மருவி செங்கப்படத்தான் காடாகி விட்டது. எண்ணற்ற விழிப்புணர்வுப் பாடல்களை எழுதிய பட்டுக்கோட்டையார் உயிருடன் வாழ்ந்த காலத்தில் கல்யாண சுந்தரமாகவே அறியப்படிருப்பார். ஆகவே அவரைக் குற்றம் சொல்வது முறையாகாது. பின்னாளில் அவரை அடையாளப்படுத்த பட்டுக்கோட்டையை அவர் பெயருடன் இணைத்திருப்பார்கள் என்றே நினைக்கிறேன்.

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தைவிட எங்களூருக்குப் புகழ் சேர்த்திருக்க வேண்டிய இன்னொருவரும் தன்னை கிராமத்தானாகக் காட்டிக் கொள்ளவில்லை. ஆம்! முன்னாள் ஜனாதிபதி. ஆர். வெங்கட்ராமன் அவர்கள்தான் அந்த புண்ணியவான்!!



அதிராம்பட்டினத்திலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்திலுள்ள சேதுசாலையில் அமைந்திருக்கும் 'ராஜாமடம்' என்ற குக்கிராமத்தில்தான் திரு.வெங்கட்ராமன் அவர்கள் பிறந்தார். (இங்குள்ள பாலத்தில்தான் ஜார்ஜ் புஷ்ஷுடன் நேர்காணல் நடந்தது) தன்னை பட்டுக்கோட்டைக்காரர் என்றே அறியப்படுத்திக் கொண்டார்.

மற்றபடி பட்டுக்கோட்டை பிரபாகர், பட்டுக்கோட்டை அழகிரி என எங்கள் சுற்று வட்டாரத்தில் பிறந்த பிரபலங்கள், தங்கள் உண்மையான பிறந்தகத்தைக் குறிப்பிடத் தயங்கினாலும் 'அதிரைக்காரன்' என்றுமே இதை கேவலமாக நினைத்ததில்லை!

(ங்கொக்கா மக்கா! நீ என்ன அவர்கள் மாதிரி பிரபலமா? என்று சிலர் வயிறு எரிந்தாலும் எனக்கு அதைப்பற்றி கவலை இல்லை...) ஏனென்றால் இன்னும் பல வயிற்றெரிச்சல்கள் அடுத்தடுத்து காத்திருக்கின்றன.

Read more...

ஆட்டைக் கழுதையாக்கிய அமெரிக்கா!

Tuesday, October 17, 2006

தலவரலாற்றை மாற்றிச் சொல்றேன்னு அதிர்ச்சியடையாதீங்க! எங்களூருக்கு "ஆட்டைக் கழுதையாக்கிய அதிராம்பட்டினம்" என்ற பெயர்க்காரணம் சொல்லிடுறேன். எப்ப நடந்தது என்று யாருக்கும் தெரியாது. (குத்து மதிப்பா ஒரு நூறு வருடங்கள்னு வச்சுக்குவோம். அப்பதான் வரலாறாகக் கருதப்படும்!)



ஒரு கிராமத்து மாரிமுத்து அதிரை வழியாக ஆட்டை ஓட்டிக் கொண்டு வந்து கொண்டிருந்தார் . அந்த ஆட்டை அடி(ஆ)மாட்டு? விலைக்கு வாங்கிடனும்னு திட்டம் போட்ட நான்கு நண்பர்கள், அக்கிராமத்தானிடம் (அக்கிரமத்தான் அல்ல) விலை பேசினார்கள். ஆட்டுக்காரர் ஒத்துவரவில்லை . மேலும் இவர்களிடம் விற்பதை விட வேறு யாரிடமாவது விற்றால் நல்லது என்ற முடிவில் 'உங்களிடம் ஆட்டை விற்க முடியாது ' என்று கறாராகச் சொல்லி விட்டார்.

இதனால் கோபமடைந்த அந்நால்வரும் எப்படியும் அந்த ஆட்டை அபகரித்துவிடத் திட்டமிட்டனர். மறுநாள் ஊரின் வெவ்வேறு பகுதியில் ஆட்டுக்காரரின் வருகைக்காக காத்திருந்தனர். வழக்கம் போல நம் ஆட்டுக்காரர் ஆட்டுடன் வந்து கொண்டிருந்தார். ஆட்டுக்காரரைப் பார்த்ததும், "என்ன... வழக்கமா ஆடுதானே விற்பீங்க ! இப்ப கழுதையும் விற்கிறீங்களா?" என்றார். ஆட்டுக்கார மாரிமுத்து குழப்பத்துடன் பதில் சொல்லாமல் அவரைக் கடந்து சென்றார். இன்னொரு இடத்திலிருந்து ஆட்டுக்காரரைக் கண்ட இரண்டாமவர் , "இந்தாப்பா மாரிமுத்து! கழுதை விக்கிறதா?" என்றார். ஆட்டுக்காரருக்கு கொஞ்சம் சந்தேகம் தலை தூக்கியது. பேச்சுக் கொடுக்காமல் ஆட்டுடன் நகர்ந்தார்.

சிறிது தூரத்தில் நின்று கொண்டிருந்த மூன்றாமவர், "நேற்று ஆட்டைத்தான் விற்க மட்டேன்னுட்டீங்க! கழுதையையாச்சும் விலைக்குத் தரக் கூடாதா?" என்றார். ஆட்டுக்காரருக்கு எரிச்சலுடன் குழப்பமும் வந்தது . "என்னடா இது மூன்றுபேருமே, இந்த ஆட்டைக் கழுதைங்கிறானுங்க !? கிண்டலுக்காக இப்படிச் சொல்றாங்களா? அல்லது நாம்தான் மறந்துட்டு கழுதையை ஓட்டிக்கிட்டு வந்துட்டோமா ?" என்ற மனதுக்குள் நினைத்துக் கொண்டு வேகமாக நடந்தார்.

கடைசியாக வந்த நான்காமவர் ஆட்டுக்காரரைப் பார்த்து, "என்ன மாரிமுத்து! கழுதைய இழுத்துக் கொண்டு வெயிலில் நடக்கிறாயே . அதுமேலே ஏறி உட்கார்ந்து போகலாம்தானே" என்றார். ஆட்டுக்காரருக்கு சந்தேகம் உறுதியாகி விட்டது. இதுக்கு மேலே இதை இழுத்துக் கொண்டு சென்றால் பார்க்கிற எல்லோரும் கேலி செய்வாங்க என்று நினைத்தபடி ஆட்டை (கழுதையை?) அவிழ்த்து விட்டு விட்டு ''போங்கடா! நான் ஆடும் விற்கலே கழுதையும் விற்கலே " என்றவாறு தன் கிராமத்துக்கு வெரும் கையுடன் திரும்பினார். பிறகென்ன அந்த நான்கு பேரும் ஓசியில் கிடைத்த ஆட்டை அறுத்து பிரியானி போட்டு சாப்பிட்டாங்களாம் !

இதில் பெருமையாகச் சொல்லி கொள்ளும்படி ஒரு விசயமும் இல்லை. ஆனால் அதிரைக்காரர்களைப் பார்த்து மற்றவர்கள், " போங்க! உங்களைத் தெரியாதா! ஆட்டைக் கழுதையாக்கினவங்கதானே ?" என்பார்கள். சரி, ஆட்டை கழுதை என்று சொல்லி ஏமாற்றியதற்கும் அமெரிக்காவுக்கும் என்ன சம்பந்தம்னு கேட்டீங்கன்னா உண்மையில் நீங்க உலக நடப்பு தெரியாத அப்பாவிதான்.



அதிரைக்காரர்களுக்கு ஆடு என்றால் அமெரிக்காவுக்கு ஆப்கானிஸ்தான், ஈராக் ஆகியவற்றைச் சொல்லலாம். நாலுபேரு சேர்ந்து சொன்னா ஆடும் கூட கழுதையாக்கப் பட்டுவிடும். நாங்களாவது ஆட்டைத்தான் அபகரித்தோம். ஆனால் அமெரிக்கா?

Read more...

மழை ஏன் 'சோ' ன்னு பெய்யிது?

Monday, October 16, 2006

இந்தியாவின் தேசிய ஆங்கில நாளிதழ் The Hindu வில் எங்களூரைப் பற்றிய செய்தி ஒவ்வொரு நாளும் வருகிறது. இதை எத்தனை பேர் கவனித்தீர்கள் என்று தெரியவில்லை. அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஊர் எங்கள் 'அதிராம்பட்டினம்'!!!

அதெல்லாம் சரி, நானும் டெய்லி ஹிந்து பேப்பரை விடாமல் படிக்கிறேன். அப்படி ஒன்னும் பெரிசா அதிராம்பட்டினத்தைப் பற்றி செய்தியைக் கண்டதாக ஞாபகம் இல்லையேன்னு 'அதிராம்பட்டினம் சொக்கு' மாதிரி முழிப்பவர்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புவது என்னவென்றால் தயவு செய்து மீண்டும் ஒருமுறை பார்த்துவிட்டு முழிங்க என்பதே!

அப்புறம் 'அதிராம்பட்டினம் சொக்கு' அண்ணனைப் பத்தி சொல்றதுக்கு ஒன்னுமில்லே . ஏன்னா அப்படி ஒரு நபர் இல்லை என்பது இயக்குனர் திலகம் பாலச்சந்தருக்கே தெரியும். இதுக்கு முன்னால கே .ஏ.தங்கவேலு ஒரு படத்துல '' ஏய் எங்கிட்ட வச்சுக்காதே ! நான் அதிராம்பட்டினத்துக்காரன்" ன்னு வசனம் பேசியதாக சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன் .

திருநெல்வேலி அல்வா கேள்விப்பட்டிருப்பீங்க! அதிராம்பட்டினம் நூர்லாட்ஜ் அல்வா பற்றியும் அல்வா கொடுப்பவர்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய செய்தி . கின்னஸ் சாதனையில் இடம்பிடித்த வளர்ப்பு மகன் திருமணத்தில் பரிமாறப்பட்ட இனிப்பு வகைகளில் அதிராம்பட்டினம் நூர் லாட்ஜ் அல்வாவும் ஒன்று என்று நக்கீரன் நாளிதழ் குறிப்பிட்டது .

நடிகர் டெல்லி கணேஷ் திருநெல்வேலியில் அவுட்டோர் சூட்டிங்கின் போது ஆசைப்பட்டு வாங்கிய அல்வாவை மறுநாள் வீட்டில் ஆசையுடன் சாப்பிடத் திறந்தபோது ஏமாற்றம் அடைந்தாராம்! ஏனென்றால் திருநெல்வேலி அல்வா நடிகர் திலகம் சிவாஜி மாதிரி இருந்ததாம்!!! ஆமாம் பாத்திரத்துடன் ஒன்றி போய் !!!

அதிராம்பட்டினம் நூர்லாட்ஜ் அல்வாவுக்கு என்ன ஸ்பெஷல் என்றால் இதன் பாரம்பர்யம் சுமார் 50 வருடங்களுக்கும் மேல். ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்களால் தயாரிக்கப்படும் இந்த அல்வாவைப்போல் இன்னும் யாரும் தயாரிக்கவில்லை என்பதும், அயல்நாடுகளில் இருக்கும் அதிரைக்காரர்களின் பேவரைட் ஸ்வீட் இந்த அல்வா என்பதும் தனிச்சிறப்பு . இரண்டு நாட்கள் முன்பே ஆர்டர் கொடுத்தால்தான் ப்ரெஷ்ஷாக கிடைக்கும்?! என்பதும் மரபு !

என்னடா இது! நட்சத்திர வாரத்துப் பதிவு அல்வா பற்றியே இருக்கிறது என்று கோபித்துக் கொள்பவர்கள் மன்னிக்க! ' அல்வாகட்டி செய்யது' பற்றியும் சொல்லாவிட்டால் 'துக்ளக் சோ' கோபித்துக் கொள்வார் . 'துக்ளக் சோ'வுக்கும் அதிராம்பட்டினம் செய்யது புகாரிக்கும் இருக்கும் பாரம்பர்ய தொடர்பு பெரும்பாலான துக்ளக் வாசகர்கள் அறிந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன் .

துக்ளக் கேள்வி-பதில் பகுதியில் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து கேள்வி கேட்டு வரும் ' அதிரை புகாரி' என்ற செய்யது புகாரி தமிழகத்தின் பிரபல வார இதழ்களில் நகைச்சுவைத் துணுக்கு எழுத்தாளர் . ஒருமுறை துக்ளக் சோ அவர்களிடம் மழை ஏன் 'சோ' எனப் பெய்கிறது என்று கேட்டதற்கு சோ "பின்னே 'செய்' என்றா பெய்யும் என்று சமாளித்தாராம் .

ஒரு வாரப்பத்திரிக்கையில் எழுதிய ஒரு நகைச்சுவை துணுக்கினால் மாதர் அமைப்பினர் கொதிந்து எழுந்த சம்பவமும் உண்டாம். துணுக்கு எழுதினால் ஏன் மாதர் சங்கங்கள் இவரை எதிர்க்க வேண்டும் என்று 'சோ' முழி முழிப்பவர்கள் பின்வரும் அவரின் ஜோக்கை படித்து முடிவுக்கு வரவும் .

கமலா : ஏண்டி சரசு! கொழந்தை வேணுமின்னு நாம ரெண்டு பேரும் ஒண்ணாதானே கோயில் அரசமரத்தை சுத்தினோம் . ஒனக்கு மட்டும் எப்படிடீ கொழந்த உண்டாச்சு?

சரசு: அது ஒண்ணுமில்லேடி கமலா, நீ கோவில் மரத்தைச் சுத்தினே . நான் கோவில் பூசாரியச் சுத்தினேன்!

Read more...

நான்கு முறை நட்சத்திரமானேன்!

Sunday, October 15, 2006

நானும் தமிழ்மணம் திரட்டியின் நட்சத்திரவார வலைப்பதிவராக தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதாக ஒரு பின்னூட்டம் வந்திருந்தது. யாரோ அனானிதான், தமிழ்மணம் நிர்வாகி பெயரில் போலியாக பின்னூட்டமிட்டிருப்பார் என்ற சந்தேகத்துடன் மதி கந்தசாமி அவர்களிடம் மடலிட்டு உறுதி செய்து கொண்டேன்.

செப்டம்பர்-11 என்ற வாரம் ஒதுக்கப்பட்டிருப்பதாகச் சொன்னார். பின்னர் இன்னொரு வாரம் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், அதன் பின்னர் அந்த வாரத்தில் இன்னொருவர் ஒப்புக் கொண்டுள்ளதால் பிறிதொரு வாரம் என்று கடைசியாக இந்தவார நட்சத்திரம் ஆகியுள்ளேன்.

முதலில் கொடுத்த செப்டம்பர்-11 வாரம், பரபரப்பான வாரமாச்சே; நாமளும் கொஞ்சம் வெளையாடிடலாம் என்று இருந்தேன். இனி செப்டம்பர்-11 என்றால் நடிகர் சூர்யா-ஜோதிகா திருமண நாள்தான் நினைவுக்கு வரும் என்பது அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷுக்கு ஆத்திரத்தை வரவழைக்கும் செய்தி. (இதனால் கோபமுற்று நடிகை ஜோதிகாவுக்கும் அல்காயிதாவுக்கும் தொடர்பு உண்டு என்று சொன்னாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை!)

குதிரைக்காரன்னா பெரும்பாலோருக்குத் தெரிந்திருக்கலாம். யாரய்யா இந்த அதிரைக்காரன்? என்று குழம்பிக் கொண்டிருந்தீர்களேயானால், நீங்கள் ஹிந்து ஆங்கில நாளிதழைக் கவனமாகப் படிப்பதில்லை என்று அர்த்தம். நட்சத்திர வாரத்தில் எழுதப்படும் பதிவுகளில் அங்கங்கு சில 'செக்' வைத்து எழுதுவதும் திட்டமாக இருப்பதால்,ஹிண்டுவுக்கும் அதிரைக்கும் என்ன சம்பந்தம் என்பதைக் கண்டு பிடித்து பின்னூட்டத்தில் சொல்லலாம். (யாரும் சொல்லாத பட்சத்தில் அதிஷ்டசாலி பின்னூட்டதாரர்? தன்னிச்சையாகத் தேர்ந்து எடுக்கப்பட்டு(!?) கடைசிப் பதிவில் கெளரவிக்க/கவ்ரவிக்க/கவுரவிக்கப் படுவார்.)

தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு சம்பிரதாயப்படி என்னைப் பற்றிய அறிமுகம் கொடுக்கச் சொல்லி இருந்தார்கள். அமெரிக்காவில் ஒரு மென்பொருள் நிபுணராக இருக்கிறேன் என்று 'பீலா' விட்டிருக்கலாம்தான். நமக்குத்தான் வெள்ளை மனசாச்சே அதனால் அரபு நாட்டில் குப்பை அள்ளவில்லை என்பதோடு நிறுத்திக் கொள்கிறேன்.(இப்போதெல்லாம் அமெரிக்காவுல இருப்பதாகச் சொல்வது Out of fashion ஆகி விட்டதாக, அமெரிக்காவிலிருந்து பிடிபட்டு மீண்டும் துபைக்கு வந்த நண்பன் சொன்னான்.)

வலைப்பூக்களில் என்ன எழுதுவது என்று குழம்பிக் கொண்டிருந்தேன். தமிழ் திரைப்படங்களில் வரும் "ஏ ஷப்பா ஏ ஷப்பா" பாட்டுப்பாடி சிலுக்கு சுமிதாவுடன் நடனம் ஆடும் அரேபிய ஷேக்குகள் முதல் துபை ஷாப்பிங் பெஸ்டிவலுக்கு விசிட் விசாவில் வந்து பிக்பாக்கெட் அடிக்கும் நம்மவர்கள் (மும்பைகார்) பற்றிய அனுபவங்களைத் தொடராக (மனதுக்குள் மட்டும்) எழுதிய அனுபவம் உண்டு.

அரேபிய நாடுகளில் பத்து வருடங்கள் அனுபவம் இருந்தாலும் அரேபிய அனுபவங்கள் 10.4 (FM சேனல் நம்பரா?) எழுதிப் பிரபலமாகும் அளவுக்கு 'நெறைய தெறமெ' இல்லாததால், வந்த ஈமெயில்களில் என்னைக் கவர்ந்தவற்றை வலைப்பூவில் பதிவதுடன் அவ்வப்போது சொந்தமாகவும் எழுதி வருகிறேன். இதெல்லாம்போக நேரம் கிடைத்தால் அலுவலகப் பணியையும் செய்து வருகிறேன். :-) இனியும் செய்யத் திட்டம். (எதற்கும் எழுத வந்த நோக்கத்தை என் அறிமுகத்தில் மீண்டும் ஒருமுறை பார்த்துக் கொள்ளுங்கள்)

"நான் ஏன் மடம் மாறினேன்" என்றோ அல்லது அரைகுறை அறிவோடு அடுத்தவர் மதநம்பிக்கைளில் புகுந்து அரைக்கிணறு தாண்டும் அபாய சாகசங்களை விடுத்து "சந்தோஷத்தில் மிகப்பெரிய சந்தோஷம் அடுத்தவரை மகிழ்வித்துப் பார்ப்பதில் கிடைக்கும் சந்தோஷமே" என 'முருங்கைக்காய்' புகழ், முந்தானை முடிச்சு பாக்யராஜ் பாலிஸியைக் கடைப்பிடித்து எழுதி வருகிறேன்.

+1 படித்த போது பள்ளி ஆண்டு விழாவில் அரங்கேறிய நாடகத்தை எழுதி இயக்கி, நடித்ததோடு, கவிதைப் போட்டியிலும் கலந்து மூன்றாம் பரிசும் பெற்றது போக, கல்லூரி சஞ்சிகையில் இரண்டு கதைகளும் எழுதியுள்ளேன். 'சரிகமபதநீ' படத்தில் கல்லூரிக் காட்சியில் நண்பர்களுடன் கலந்து கொண்டு நடித்த அனுபவமும் உண்டு. (அனேகமாக வலைப்பூ எழுதிக் கொண்டிருக்கும் ஒரே தமிழ் சினிமா நட்சத்திரம் நானாகத்தான் இருப்பேன் :-)

துபையில் அவ்வப்போது கல்ஃப் நியூஸ் (GULF என்று படிக்கவும்; Kalf ன்னா நாய்!) பத்திரிக்கையில் லட்டர் டு எடிட்டருக்கும் எழுதுவதுண்டு. சென்ற வருடம் சிங்கில் டீயின் விலையை கடைக்காரர்கள் (மலையாளிகள்) சுயமாக 25 பில்ஸ் (துபை பைசா) ஏற்றியதைக் கண்டித்து சிங்கிள்டீ ரசிகர்களின் வயிற்றில் பால் வார்த்தேன். கல்ஃப் நியூசில் லட்டர் டூ எடிட்டருக்கு எழுதிய கடிதத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்ததுடன் துபை முனிசிபாலிசி தலையிட்டு இவ்விலையேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதற்கு என் கடிதமும் காரணமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

தற்போது பிளாஸ்டிக் கப்புக்குத் தடை விதித்து, ஃபோம் கப் என்று கப்பின் தரத்தை உயர்த்தி, 25 பில்ஸ் விலை ஏற்றத்திற்கு துபை முனிசிபாலிட்டி அனுமதித்துள்ளது - இதெல்லாம் நம்ம போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றியைப் பெரிசா பாதித்து விடாது.

ஈராக் போர் வேண்டாமென்று அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷுக்கும் ஈமெயில் போட்டு AUTOREPLY கிடைக்கப் பெற்றிருக்கிறேன். (ஆட்டோ ரிப்ளை என்றால் ஆட்டோவில் ஆள் அனுப்புவதல்ல; தானாகவே அனுப்பப் படும் பதில் என்பது நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை) ஆனால் அந்த மனுசன்(?) அதைக் கண்டு கொள்ளாமல், தன்னிச்சையாக ஈராக் மீது போர் தொடுத்தார். அதனால் ஏற்பட்ட கோபத்தைத் தனிக்க, புஷ்ஷுடன் அவ்வப்போது விளையாடுவதுண்டு.

ஃபலஸ்தீன் பிரச்சினை குறித்து ஜார்ஜ் புஷ்ஷிடம் ராஜாமடம் பாலத்தில் வைத்து நேர்காணல் கண்டு நான் எழுதியது உலக வாசகர்களின் கவனத்தைக் கவர்ந்தது (உங்களைக் கவரவில்லை என்றால் அது என் குற்றமல்ல.) நேர்காணலின்போது 'அணு பெரிதா? கல் பெரிதா?' என்ற புஷ்ஷுடனான விவாதத்தில், கல்தான் பெரிது என்ற அவருடைய விளக்கத்தை நான் ஏற்றுக் கொண்ட வகையில் எனக்கு அவர் நெருக்கமாகி விட்டார். என்வே, நாங்கள் பேசி திட்டமிட்டபடிதான் இதுவரை புஷ் நடந்து கொள்கிறார். என்ன பேசி கொண்டோம் என்பதைச் சொல்வது புஷ்ஷுக்கு நல்லதல்ல என்பதால் இத்தோடு விட்டு விடுகிறேன்.

இவ்வாறாக, என்னைப் பாதித்த அல்லது நான் ரசித்தவற்றை பிரதிபலிப்பதாகவே என் வலைப்பூ இருந்து வருகிறது என்பதை கோடிக்கணக்கான (சும்மா) என் வலைப்பூவாசகர்கள் அறிவர். நட்சத்திர வாரத்தின் பதிவுகளில் எல்லோரையும் போல் சூடாக எழுதாமல் அதிரைக்காரனின் சுய/தல புராணமாக முயற்சி செய்துள்ளேன்.

வழக்கம் போல வெட்டிப்பேச்சாக எழுதுவதா அல்லது பின்னூட்ட கயமைத் தனம் செய்யும் விதமாக பரபரப்பாக எழுதுவதா என்பதை நீங்களும் பின்னூட்டக் கயமைத் தனம் செய்யும்படி (ஆட்டக் கடிச்சு மாட்டக் கடிச்சு :-) கேட்டுக் கொ'ல்'கிறேன்.

Read more...

வாயைக் கிளறாதீங்க ஆமா!

Saturday, October 07, 2006

படத்திலுள்ளவர் வாயசைத்து சொல்வதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அது என்னனவாக இருக்குமென்று உங்களுக்குப் புரிந்திருந்தால் பின்னூட்டமாகச் சொல்லலாம்.

Image and video hosting by TinyPic

Read more...

மைக்ரோசாஃப்டின் பெருந்தன்மை!!!

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஒரு மில்லியன் டாலர் அன்பளிப்பாக கொடுக்கிறதாம்.
Image and video hosting by TinyPic

எனக்கு கிடைத்த செக்கு ரெண்டு வருடம் முந்தையது.

பாக்கட் மணி தேவைப்பட்டால் நீங்களும் முயற்சி செய்யலாம். உங்க பேருலயும் செக்கு கொடுக்கிறாங்களாம். வாங்கிட்டு நன்றிக்கடனா ஒரு பின்னூட்டம் போடுங்க!

Read more...

எலிய முறையில் சிக்கன் 65 செய்வது எப்படி (படங்களுடன்)

Sunday, September 24, 2006

கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கம் அசைவப் பிரியர்களுக்கு அதிர்ச்சியை தந்தால் நான் பொருப்பல்ல. (நம்மால் முடிந்தது செயல் விளக்கம் மட்டுமே; இதை செய்து பார்த்து சுவைத்தவர்கள் தாராளமாகப் பின்னூட்டம் இடலாம். (வாந்தி எடுக்கக் கூடாது ஆமா! :-)))


1) வ்வ்ர்ரே...வ்வா...ஹ் நல்ல Cripsy...!


2) சுத்தமான நெய்யினால் செய்யப்பட்டது.




3) மிளகாய், வினிகர், மசாலா போட்டு கொஞ்சம் ஊற வைக்கவும்.





4) சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

என்ன..? ரொம்ப ஈசியா இருக்கா?.

.

.

.

.

.

ம்...ம்....தொடர்ந்து கீழே பாருங்கள்....!

5) உவ்வே...#1



6) உவ்வே # 2



7) உவ்வே # 3


என்னய்யா இது அநியாயம். சிக்கன் 65 என்று சொல்லி விட்டு எலி வருவலைக் காட்டுகிறேன் என்கிறீர்களா? தலைப்பை நல்ல ஒருதடவை பாருங்கள். 'எலிய முறையில்" என்று சொல்லப்பட்டிருக்கிறது.

ஆமாம் அசைவப் பிரியர்களே! சில சைனீஸ் ரெஸ்டாரண்டுகளில் எலியை இதுபோல் பதப்படுத்தி, கோழி மாதிரி துண்டுகளாக்கி சிக்கன் 65 என்று விற்கிறார்களாம். எதுக்கும் சிக்கன் ஆர்டர் பண்ணும் முன் கிச்சனையும் கொஞ்சம் நோட்டம் விட்டுக் கொள்ளுங்கள்.

Read more...

அரைக்குதிரை

Saturday, August 26, 2006

ஆட்டைக் கழுதையாக்கிய கதை கேள்வி பட்டிருக்கிறோம். கழுதை தேய்ந்து கட்டெறும்பானதைக் கேள்வி பட்டிருக்கிறோம். ஆனால் இந்தக் குதிரை தேய்ந்ததற்கு யார் காரணம்?
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
.
.

.
.
.
.
.
.

Image and video hosting by TinyPic

Read more...

தமிழ் விக்கிபீடியாவில் 'யுனிகோட்' உமர்தம்பி

Thursday, July 20, 2006



தமிழ் விக்கிபீடியாவில் 'யுனிகோட்' உமர்தம்பி அவர்களின் வாழ்க்கைக் குறிப்பும் புகைப்படமும் இடம் பெற்றுள்ளது.உமர் அவர்களின் தன்னலமற்ற தமிழ் கணிமைச் சேவையையும் அவர்தம் ஆக்கங்களின் பயன் பாடுகளையும் பகிர்ந்து கொண்ட சகவலைப்பதிவு நண்பர்களுக்கும் இணையதள பிரமுகர்களுக்கும், அன்னாரின் மறைவால் வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொன்ன தமிழ் நெஞ்சங்களுக்கும் அதிரை மக்களின் சார்பில் 'அதிரைக்காரன்' நன்றி தெரிவித்துக் கொள்கிறான்.

வாழ்க்கைக் குறிப்பு

தோற்றம்:15.06.1953
மறைவு : 12.07.2006
பிறப்பிடம் - தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டிணம்
பெற்றோர் - அ..அப்துல் அமீது - ரொக்கையா

உமர் தம்பி அவர்கள் தமிழ் கணிமைக்கு சிறந்த பங்களிப்புக்களை வழங்கிய ஆளுமைகளுள் ஒருவராவார்.இவர் கணினியிலும் இணையத்திலும் தமிழை பயன்படுத்துவதற்கு உதவக்கூடிய பல செயலிகளையும் கருவிகளையும், எழுத்துருக்களையும் ஆக்கியளித்துள்ளார்.

தனது துவக்கக் கல்வி மற்றும் மேல்நிலைக் கல்வியையும் அதிராம்பட்டிணத்திலும், தனது Bsc (விலங்கியல்) பட்ட படிப்பினை அதிராம்பட்டிணத்தில் உள்ள காதர் மொஹைதீன் கல்லூரியில் படித்தார்கள். அதன் பின் இலத்திரனியலில் டிப்ளோமா படிப்பினையும் முடித்த உமர் தனது ஊரிலேயே 1983 ஆம் ஆண்டு வானொலி, தொலைக்காட்சி பழுது நீக்கும் பணிமனை அமைத்து நிர்வகித்து வந்துள்ளார்.

மாணவப் பருவத்திலிருந்தே வானொலிப் பெட்டி, ஒலிபரப்பு இவற்றில் ஆர்வம் மிக்கவராக இருந்திருக்கிறார். அந்த ஆர்வத்தால், மாணவப் பருவக் குறும்பாக, ஒருமுறை தான் பயின்ற காதர் முகைதீன் உயர்நிலைப்பள்ளியிலிருந்து அலைவரிசையொன்றை உருவாக்கி அதிராம்பட்டினத்திலிருப்போர்கள் கேட்கும்படியாக உரையாடல்களை ஒலிபரப்பியிருக்கிறார்.

இப்படியான ஆர்வத்தால் அவரது தொழிலும் தொலைக்காட்சிப் பெட்டிகளைப் பழுதுபார்க்கும் பணியாகவே அமைந்து, 1984 ஆம் ஆண்டு துபாயில் உள்ள Alfuttaim Group of Companies ல் இலத்திரனியல் உபகரணங்களுக்கான National Panasonic பழுது நீக்கும் பொறியாளராக பணியில் சேர்ந்தார்.

கல்வி பயிலும் காலகட்டத்திலேயே 1977 ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திருமணம் நடைபெற்றது அவரது மனைவியின் பெயர் பெளஷியா (Fouzia). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.

முறையாக எந்த கல்லூரியிலும் கணினி தொழில் நுட்பத்தை பயிலாத உமர் அவர்கள், துபாயில் பணிபுரிந்த காலங்களில் தனக்கு கிடைத்த ஓய்வு நேரங்களைப் பயன்படுத்தி தானாகவே தனக்கிருந்த ஆர்வத்தினாலும், முயற்சியாலுமே கணினி தொழில்நுட்பங்களை கற்றுவந்துள்ளார்.

துபாயில் தான் பணிபுரிந்துவந்த நிறுவனத்தில் சில நாட்களிலேயே கணினி நுட்பவல்லுனரானார். Network administrator, SAP implementation team Head, Kiosk programmer எனக் கணினித் துறையில் திறம்பட பணியாற்றியிருக்கிறார்.

ஒரு குழுவை முன்னின்று நடத்துவது வரையில் அவரது பதவி உயர்வு நிகழ்ந்திருக்கிறது. பதினேழு ஆண்டுகளாக துபாயில் இந்தப் பணியைச் செய்த அவர், அவர் 2001 மாவது ஆண்டு செப்டம்பர் மாதம் தனது பணியிலிருந்து விருப்ப ஓய்வுபெற்று தாயகம் திரும்பினார்.

தாயகம் திரும்பிய அவர் தனது ஊரிலிருந்து கொண்டே தனது மூத்த மகன் மொய்னுதீனுடன் (ஈமெயில்: moinudeen@rediffmail.com ) இணைந்து சென்னை போன்ற பெருநகரங்களில் இயங்கிவரும் மோட்டார் வாகனங்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் விற்கும் (மாருதி கார்) நிறுவனங்களுக்கு, பொருள் இருப்பு மற்றும் விற்பனைக்கான மென்பொருட்களை வடிவமைத்து கொடுத்து பராமரித்து வந்துள்ளார்கள்.

தமிழ் கணிமைக்கு செய்த பங்களிப்புகள்:

தேனீ இயங்கு எழுத்துரு : மைக்ரோசொஃப்ட் நிறுவனத்தயாரிப்பு உலாவிகளில் மட்டும் தொழிற்படக்கூடிய தொழிநுட்பத்தை பயன்படுத்தி, தமிழ் எழுத்துரு கணினியில் நிறுவப்படாத நிலையிலும் கூட தமிழ் ஒருங்குறி எழுத்துக்களாலமைந்த இணையத்தளங்களை மைக்ரோசொஃப்ட் உலாவிகளில் படிக்கும் வசதியை இவ்வெழுத்துரு வழங்குகிறது. தேனீ எனப்படும் இவரது தயாரிப்பான எழுத்துருவை இவ்வாறு இயங்கு எழுத்துருவாக மாற்றி வெளியிட்டார். இன்று தமிழ் வலைப்பதிவு உலகில் பெரும்பாலானவர்கள் இந்த வசதியை தமது வலைப்பதிவுகளில் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் இணைய அகராதி : கணினி, அறிவியல், பொருளாதாரம், கல்வி, வணிகம் போன்ற துறைகளில், இன்று வழக்கத்தில் உள்ள ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ் சொற்களை மிக எளிமையான முறையில் தொகுத்து வழங்க முடிவெடுத்த சகோதரர் உமர் அவர்கள் தமிழ் இணைய அகராதியைக் கொண்டுவந்தார். இந்த அகராதியை தமிழ் உலக உறுப்பினரும் www.talktamil.4t.com என்ற இணையத் தள நிர்வாகியான மஞ்சு அவர்களும் இணைந்துஉருவாக்கினார்கள்

பங்குபற்றிய இணையத்தளங்கள்/சேவைகள்:
தமிழ் மணம்
தமிழ் உலகம் குழுமம்
ஈ உதவி குழுமம்
ஒருங்குறி குழுமம்

சமூக சேவை:
சமூக சிந்தனையும், சமூக அக்கறையும் கொண்ட சகோதரர் உமர் அவர்கள் அதிரை பைத்துல்மால் (Adirai Baithulmal) எனும் சமுதாய சேவை செய்யும் அறக்கட்டளையில முக்கிய நிர்வாகியாக இருந்து சேவை செய்து வந்துள்ளார்கள்.

வெளி இணைப்புக்கள்

உமர் தம்பி அவர்களுடன் தொடர்புடைய வலைத்தளங்கள்

தமிழ் இணைய அகராதி
உமர் தம்பியின் ஆக்கங்கள்
எழுதப்பழகுவோம் எச்.ரி.எம்.எல்
யுனிகோடும் இயங்கு எழுத்துருவும்
யுனிகோடும் தமிழ் இணையமும்
யுனிகோடின் பன்முகங்கள்
RSS ஓடை-ஒரு அறிமுகம்

உமர் தம்பி பற்றிய பிறரது எழுத்துக்கள்


உமர்தம்பி பற்றிய வலைப்பதிவு
யுனிகோடு உமர் அவர்களின் மறைவு - அதிரைக்காரன்
வாசனின் வலைப்பதிவு
யுனிகோடு உமர் அவர்களின் மறைவு -முஃப்தி
உமர் தம்பி - தமிழ்க் கணிமைக் கொடையாளர் -காசி
தேனி உமருக்கு அஞ்சலி -மதிகந்தசாமி
உமர் தம்பி -வாசன்
'THEENE.eot' உமர் மறைவு -தேசிகன்
திரு. உமர் மரணம் -க்ருபா
யுனிகோட் உமர் தம்பி மரணம் -அபூ முஹை
நண்பர் உமர் மறைவு -வெங்கட்
அஞ்சலி தேனி உமர் -பரி
அஞ்சலி தேனி உமர் -டுபுக்கு
உமர் தம்பி மறைவு -முகுந்த்
Deep Condolences -பிரகாஷ்
'தேனீ' உமர் மறைவு - கேட்டவற்றைப் பகிர்ந்துகொள்கிறேன்.-ஆசாத்
உமர் -சுரேஷ்
e-வீதியில்: யுனிகோடு உமர் அவர்களின் மறைவு -மா.சிவகுமார்
உமருக்கு அஞ்சலி -மணியன்
தமிழ் வலையுலகின் இழப்பு 'தேனீ உமர் தம்பி' -இறை நேசன்
Tiru. Umarthambi - sad news -ஒருங்குறி வலைக்குழுமம்
Tiru. Umarthambi - sad news -தமிழ்மணம் வலைக்குழுமம்
'யூனிகோட்' உமர்தம்பி மரணமடைந்தார்கள் -அதிரை இணையம்
தமிழ்விக்கிபீடியா: "http://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF" இலிருந்து மீள்விக்கப்பட்டது.

Read more...

ஆண்களின் வெற்றிக்குப் பின்னால் இருப்பது யார்?

Tuesday, July 18, 2006

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள்!

Image and video hosting by TinyPic

இந்த இராணுவ வீரனின் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் பெண்ணைக் கண்டுபிடிக்க மவுஸால் (Mouse) முயற்சி செய்யுங்கள்!

Read more...

யுனிகோடு உமர் அவர்களின் மறைவு

Thursday, July 13, 2006

தமிழ் இணைய தளங்களிலும் வலைப்பூக்கள் மற்றும் தமிழர் மின்மடல் குழுமங்களிலும் பரவலாக அறியப்பட்ட எங்களூரைச் சார்ந்த 'யூனிகோட்' உமர் அவர்கள் நேற்று (12-07-2006) மாலை 5:30 மணியளவில் மரணமடைந்தார்கள். அன்னாரின் நல்லடக்கம் இன்று (13-07-2006) காலை 9:00 மணியளவில் அதிராம்பட்டினத்தில் நடைபெற்றது.

'உமர்' என்கிற உமர்தம்பி அவர்கள், தமிழ் இணையங்களின் பிரபலத்திற்கு முன்னரே எங்களூர் மின்மடற்குழுமங்களிலும் பல பொதுச்சேவை அமைப்புகளிலும் பரவலாக அறியப்பட்டவர். ஆங்கிலத்திலும் தமிழிலும் மிகுந்த புலமை பெற்றிருந்ததோடு தமிழ்வழி இணையப் பயன்பாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்கள். உலகமெங்கும் பரவியுள்ள தமிழர்களின் பல மின்மடல் குழுக்களில் இணையவழி தமிழ் பயன்பாடு பற்றிய கட்டுரைகளை பாமரரும் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிய தமிழில் வழங்கியவர்.

தனது தமிழார்வத்தால் தமிழிணைய மென்பொருளாக்கத்திலும் பயன்பட்டிலும் மிகுந்த ஈடுபாட்டுடன் பல முயற்சிகளைச் செய்துவந்ததை நான் அறிவேன். உமர் அவர்கள் முதன் முதலாக இணைய தமிழ் அகராதி, தானியிங்கி யூனிகோட் எழுத்துரு மாற்றி, தேனிவகை எழுத்துருக்கள் ஆகிவற்றோடு யூனிகோட் தமிழில் மின்மடல் அனுப்பும் இணைய கருவிகளை உருவாக்கியிருந்தார்.

தமிழ் இணைய நாளிதழ்களை நகலெடுத்து மறுபதிப்பு (COPY & PASTE) செய்வதிலுள்ள சிரமத்தைக் குறைத்து, வலைப்பூக்களிலும் இணைய தளங்களிலும் சுலபமாக தமிழில் உள்ளீடு செய்யவும் பின்னூட்டமிடவும் யூனிகோட் உருமாற்றியை உருவாக்கினார். யூனிகோட் பற்றிய இவரின் கட்டுரைகள் நேரில் பேசிக் கொண்டிருப்பது போல் பாமரரும் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிய தமிழில் இருக்கும். எங்களூர் தளத்தில் உமர் தம்பி அவர்களின் கட்டுரைகளில் ;தகர்ந்து வரும் டார்வின் கோட்பாடு, குழப்பத்தில் குமுகாயங்கள் என சமூகக் கண்ண்டோட்டத்தில் எழுதிவந்தார்.

உமர் தம்பி அவர்களுடன் எனக்கு மின்மடல்கள் மூலமே தொடர்பு இருந்து வந்தது. எங்களூர் இணைய தளத்தை தமிழில் கொண்டு வருவதற்கு மேலான ஆலோசனைகளை வழங்கியதோடு, இணைய வடிவமைப்பாளர்களை ஊக்குவிக்கவும் தவறவில்லை. 'வெட்டிப் பேச்சு' என்ற எனது தமிழ்வலைப்பூ பற்றிய அவர்களின் கருத்தைக் கேட்ட போது, பிறர் மனதைப் புண்படுத்தாமல் எழுதும் பதிவுகள் வெட்டிப்பேச்சல்ல; வெற்றிப்பேச்சே! என்று பாராட்டி தொடர்ந்து எழுத ஊக்குவித்ததை இந்நேரத்தில் நன்றியுடன் நினைவு கூறக் கடமைப் பட்டிருக்கிறேன்.

நல்லடியார் அவர்கள், தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட்ட முஸ்லிம் தமிழர்களைப் பற்றிய பதிவிற்கு உமர் அவர்களைப் பற்றிய விபரங்களைக் பெற்றுத் தர முடியுமா என்று மடலில் கேட்டிருந்தார். இது விசயமாக கடந்தவாரம் உமர் தம்பி அவர்களுக்கு மெயிலிட்டிருந்தேன். புகழ்சியையோ அல்லது தன்னை முன்னிலைப் படுத்துவதையோ விரும்பாத பண்பாளர் உமர் தம்பி அவர்களிடமிருந்து பதில் கடிதம் வர தாமதமாகிய போதே சற்று சந்தேகம் வந்தது. கடைசிவரை எனது மின்மடலுக்கு அவர்களிடமிருந்து பதில் வரவே இல்லை.

இதற்கிடையில் அதிரை மின்மடல் குழுமத்திலிருந்து உமர் தம்பி அவர்கள் மஞ்சல் காமாலையால் அவதிப்படுவதாகவும் அவருக்காக பிரார்த்திக்கும் படியும் ஒரு ஈமெயில் வந்தது. உடனே அதிரையிலிருக்கும் உமர்தம்பி அவர்களின் மகனுக்கு தொலை பேசினேன். மாலை மூன்று மணிவரை சுயநினைவின்றி இருப்பதாக கவலையுடன் சொன்னார்.

உமர்தம்பி அவர்கள் சில வருடங்களுக்கு முன்பு கேன்சர் பாதிப்பு இருந்ததாகவும் அதற்கான சிகிச்சை பெற்று வந்ததாகவும், கடந்த மாதம் மஞ்சல் காமாலையால் பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை செய்து ஊர்வந்ததாகச் சொன்னான். ஒரே ஊர்க்காரராக இருந்தாலும் இதுவரையிலும் உமர் தம்பி அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அடுத்த சில மணி நேரங்களில் அன்னாரது இன்னுயிர் பிரிந்ததையும் அறிந்து சொல்லொன்னா துயருற்றேன்.

அதிரை போன்ற பிற்படுத்தப்பட்ட கிராமப் பகுதியிலிருந்து அயல்நாடுகளில் பணி செய்யும் வாய்ப்புகளை உதறி விட்டு எஞ்சிய காலத்தில் தமிழுக்கும் தான் சார்ந்த சமுதாயத்திற்கும் சேவை செய்ய தாயகம் புறப்பட்ட எங்கள் ஆரூயிர் கணினி குருநாதர் அன்பிற்குறிய உமர் தம்பி அவர்கள் போன்ற பண்பாளரை இழந்தது அதிரைக்கு மட்டுமல்ல தமிழர்களுக்கும் இழப்பே.

உமர்தம்பி அவர்களின் தமிழ்ச் சேவைகளையும் சாதனைகளையும் நினைவு கூர்ந்த, வலைப்பதிவிட்ட தமிழ் வலைப்பூ நண்பர்களுக்கும், பின்னூட்டங்கள் மூலம் துக்கத்தை பகிர்ந்து கொண்ட பிற வலைப்பூ நண்பர்களுக்கும் உமர்தம்பி அவர்களின் குடும்பதினர் சார்பிலும் அதிராம்பட்டினம் மக்களின் சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

Read more...

என் அரேபிய அனுபவங்கள்

Saturday, July 08, 2006

வளைகுடா நாடுகளில் விடுமுறைகளுக்குப் பஞ்சமில்லை. நார்மலான விடுமுறைகள் போக மெடிக்கல் வீவு, எமர்ஜென்சி லீவு, லொட்டு-லொசுக்கு, அது-இதுன்னு நிறைய லீவு எடுக்கலாம்.சில சுவையான கடித அனுபவங்கள்.

1) சொந்தக் கிராமத்தில் இருக்கும் நிலத்தை விற்க மனைவியுடன் ஊர் செல்ல வேண்டி:

Since I have to go to my village in India to sell my land along with my wife, please sanction me one-week emergency leave.

2) பத்து வயது மகனுக்கு மொட்டையடிக்கும் நிகழ்சியில் கலந்து கொள்ள:

From an employee who was performing the "mundan" ceremony of his 10 year old son: "As I want to shave my son's head, please leave me for two days.."
3) மகளின் கல்யாணத்தை நடத்தி வைக்கச் செல்ல வேண்டி:

Leave-letter from an employee who was performing his daughter's wedding: "As I am marrying my daughter, please grant a week's leave.."

4) மாமியாரின் ஈமக்கிரியையில் கலந்து கொள்ள வேண்டி:

"As my mother-in-law has expired and I am only one responsible for it, please grant me 10 days leave."

5) சவ அடக்கத்தில் கலந்து கொள்ள வேண்டி:

"Since I've to go to the cremation ground at 10 o-clock and I may not return, please grant me half day casual leave"

6) காய்ச்சலால் அவதிப்படும் போது:

"I am suffering from fever, please declare one day holiday."
7) பள்ளி தலைமை ஆசிரியருக்கு:

"As I am studying in this school I am suffering from headache. I request you to leave me today"
8) இன்னொரு தலைமையாசிரியருக்கு:

"As my headache is paining, please grant me leave for the day."9)

9)கவரிங் லட்டர்:

Covering note: "I am enclosed herewith..."

10) வேலைக்கு அப்ளை செய்யும்போது:

"This has reference to your advertisement calling for a 'Typist and an Accountant - Male or Female'...As I am both (!!) for the past several years and I can handle both with good experience, I am applying for the post.
11) மனைவிக்கு உடல்நிலை சரியில்லாத போது:

"My wife is suffering from sickness and as I am her only husband at home I may be granted leave".
12) ஊருக்குச் சென்றிருக்கும் சகபணியாளருக்கு எழுதும்போது:

"I am in well here and hope you are also in the same well."

13) கஸ்டமருக்கு பதில் எழுதும் போது:

"Dear Sir: with reference to the above, please refer to my below..."
14) போலீஸ் ஸ்டேசனுக்கு எழுதிய கடிதம்:

To

Police Station Manager,

SUB: DYING OR KILLING OR SELF KILLING

Dear Sir,

Mr.XXXXXXXXXX B.Sc.,D.C.A., not come to duty today morning. While our inventory controller inspecting the body of so and so, found that the owner of the body is already dead. We are not sure that so and so dead staff is died because of death or killing or self killing. Please advise!

15) வேலைக்கு அப்ளிகேசனைப் பூர்த்தி செய்யும் போது, SEX என்ற இடத்தில் என்ன எழுதுவது என்று தெரியாமல் சந்தேகத்துடன், "WEEKLY 2-4 TIMES" என்று எழுதினார். அப்ளிகேசனைப் பரிசோதித்தவர் கடுப்புடன். "ஹலோ! MALE ஆ FEMALE ஆ என்று குறிப்பிடுங்கள்" என்றார். அவசரமாக அப்ளிகேசனை திரும்ப வாங்கி "IF MALE 2-4 TIMES, IF FEMALE MORE" என்று எழுதிக் கொடுத்தார்.

Read more...

மொபைல் போனில் முட்டை அவிக்கலாம்!

Wednesday, June 21, 2006

விளாதிமிர் லகோஸ்கி மற்றும் மோய்சென்கோ என்ற இரு ரஷ்ய பத்திரிக்கையாளர்கள் மொபைல் போன்களால் ஏற்படும் இடர்பாடுகளைப்பற்றி ஆராய்வதென்று முடிவு செய்தார்கள். அதன்படியே இரண்டு மொபைல் போன்களை எதிரெதிரே வைத்துக் கொண்டு படத்தில் காட்டியபடி நடுவிலுள்ள பாத்திரத்தில் சிறிது தண்ணீரில் முட்டையை வைத்து ஒரு போனிலிருந்து மற்றொரு போனை அழைத்தார்களாம்.



15 நிமிடங்கள் கழித்து முட்டை மிதமாக சூடடைந்தது.
25 நிமிடங்களில் முட்டை இருந்த பாத்திரம் கொதிக்க ஆரம்பித்தது.
40 நிமிடங்களில் முட்டை சூடாகி விட்டது.
65 நிமிடங்களில் முட்டை முழுவது அவிக்கப் பட்டுவிட்டது.

இதற்குக் காரணம் செல்போன்கள் வெளியிடும் அதிர்வலைகள் என்கிறார்கள். உண்மையா?



பின் குறிப்பு:
1) ஒரு முட்டையை அவிக்க (BOIL) கிட்டத்தட்ட ஐந்து அமெரிக்க டாலர் செல்வானதாம். இந்தியாவில் இதைவிட குறைந்த செலவில் முட்டை அவிக்க சாத்தியமுள்ளது. (நன்றி: தயாநிதி மாறன் அவர்கள்).

2) இரண்டு செல்போன்களை இரண்டு காதிலும் வைத்துக் கொண்டு இப்பரிசோதனையைச் செய்தால் உங்களின் மூளைக்கும் முட்டை கதியே!

3) தயவு செய்து யாரும் செல்போன்களை பேண்ட் பாக்கெட்டில் போடாதீர்கள்!



படங்கள்: Anatoly Zhdanov.

ஆங்கில மொழிபெயர்ப்பு: Victoria Boutenko.
தமிழில் : ஹி....ஹி....

மூலம்: Komsomolskaya Pravda, April 23, 2006
தளம்: http://www.kp.ru/daily/23694.4/52233/print

Read more...

ரேட்டு கம்மிங்கறத்துக்காக இப்படியா?

Sunday, June 18, 2006

குறைந்தவிலை விமானக் கட்டணம்! பட்ஜெட் ஏர்லைன்ஸ்!! இப்படி பல பேருல விமான சேவைகள் பற்றிய விளம்பரங்களைப் பார்த்திருப்பீர்கள். ஆனா உள்ளே எப்படி இருக்கும்னு யாரும் சொல்றதில்லே.



இந்த விமானம் துபாய்-கேரளா மட்டும்தான் போகுமாக்கும்!

சந்திரனில் சாதனைப் படைத்த சந்திரன் நாயர் தெரியும்தானே?

Read more...

உங்கள் கண்களுக்கு ஓர் சவால்!

நம் கண்களுக்குச் சவால் விடும் இப்படங்களும் வாசகங்களும் உங்களின் மேதாவித்தனத்திற்குச் சான்று!" என்ற தலைப்பில் வந்த ஈமெயில் இது! முயற்சித்துப் பாருங்கள் உங்கள் பார்வைத் திறனையும் அறிவையும்!!




More than likely you said, "A bird in the bush," and........
if this IS what YOU said, then you failed to see
that the word THE is repeated twice!
Sorry, look again.




In black you can read the word GOOD, in white the word EVIL (inside each black letter is a white letter). It's all very physiological too, because it visualize the concept that good can't exist without evil (or the absence of good is evil ).

You may not see it at first, but the white spaces read the word optical, the blue landscape reads the word illusion. Look again! Can you see why this painting is called an optical illusion?

The word TEACH reflects as LEARN.



You probably read the word ME in brown, but....... when you look through ME you will see YOU!

ALZHEIMERS' EYE TEST

Count every " F" in the following text:

FINISHED FILES ARE THE RE

SULT OF YEARS OF SCIENTI

FIC STUDY COMBINED WITH

THE EXPERIENCE OF YEARS.

(SEE BELOW) HOW MANY ?

WRONG, THERE ARE 6 -- no joke. READ IT AGAIN ! Really, go Back and Try to find the 6 F's before you scroll down.

The reasoning behind is further down. The brain cannot process "OF".

Incredible or what? Go back and look again!! Anyone who counts all 6 "F's" on the first go is a genius.

பின்குறிப்பு: முயற்சித்துப் பார்த்ததில் முதல்தடவையில் நான் மேதாவி இல்லை என்பது உறுதியாகிவிட்டது! நானே மேதாவி இல்லை என்றாகி விட்டப்பின் நீங்கள் எம்மாத்திரம்?

:-0

Read more...

கட்டணமில்லாக் ‘கழிப்பிடம்’ வேண்டும்!

Sunday, June 11, 2006

ஒருமுறை ஜப்பான் பிரதமர் இந்தியா வந்திருந்த போது சென்னை மின்சார இரயிலில் பயணம் செய்ய விரும்பினாராம். அதன்படியே அதிகாரிகளும் பயண ஏற்பாட்டைச் செய்து விட்டு அருகில் இந்தியப் பிரதமரும் உட்கார்ந்து கொண்டாராம்.

ஜன்னலோரம் அமர்ந்திருந்த ஜப்பான் பிரதமர், செல்லும் வழியெங்கும் சிறிது இடைவெளியில் நம் மக்கள் “காலைக் கடன்” கழித்துக் கொண்டிருந்தார்களாம்! (அடப்பாவிகளா! எவன்யா இவர்களிடம் கடன் கேட்டது?) முகம் சுழித்தவாறு அருகிலிருந்த இந்தியப் பிரதமரிடம் “ஏன் உங்கள் நாட்டில் இந்த அவலம் இருந்து கொண்டிருக்கிறது?” என்று கேட்டதற்கு, இந்தியப் பிரதமர் பதில் சொல்ல முடியாமல் தவித்தாராம்.

பிறகு ஒரு சமயம் இந்தியப் பிரதமர் ஜப்பான் சென்றிருந்த போது, ஜப்பானின் கிராமங்களை விமானம் மூலம் தாழ்வாகப் பறந்து பார்க்க விரும்பினாராம். அவ்வாறு விமானத்தில் பறந்து கொண்டிருந்த போது சில இடங்களில் நம் சென்னையில் நடந்தது போல், அங்கும் சிலர் “காலைக்கடன்” கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

ஆஹா! நம்மைக் கேவலப்படுத்திய ஜப்பான் பிரதமரை நன்றாக வாரி விடலாம் என்ற எண்ணத்தில் ஜப்பான் பிரதமரிடம், “எங்கள் நாட்டிற்கு நீங்கள் வந்திருந்த போது இது போன்று பொதுவில் காலைக் கடன் கொடுத்துக் கொண்டிருப்பவர்களை கிண்டலடித்தீர்களே! உங்கள் நாட்டில் மட்டும் என்ன வாழுதாம்?” என்று கிண்டலாகக் கேட்டபோது, விமானத்தை தரை இறக்கச் சொல்லி இந்தியப் பிரதமரையும் உடன் அழைத்துச் சென்று அவர்களிடமே விசாரிப்போம் என்று அருகில் சென்ற போது, இந்தியப் பிரதமரைக் கண்ட “கடனாளிகள்” மரியாதையாக எழுந்து “பாரதப் பிரதமர் வாழ்க!” என்று கோஷமிட்டனராம்! (அதாவது ஜப்பானில் கடன் கொடுத்துக் கொண்டிருந்தவர்களும் நம்மவர்களே!)

இது நகைச்சுவைக்காகச் சொல்லப்பட்டாலும் நம் இந்தியாவில் நடந்து கொண்டிருக்கும் இந்த அவலத்தை துடைதெறிய (?!!) எந்த அரசியல்வாதியும் கண்டு கொள்வதில்லை. மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் (?) பஞ்சாயத்து போர்டுகள் ஆங்காங்கே கழிப்பிடங்களைக் கட்டி இருந்தாலும் மூக்கைப் பிடித்துக் கொண்டுதான் உள்ளே செல்ல முடியும். இந்த இலட்சனத்தில் கட்டணம் வேறு வசூலிப்பதுதான் கொடுமை!

அடுத்தவர் விசயத்தில் தேவையின்றி மூக்கை நுழைப்பது சட்டப்படி குற்றம். அதேசமயம் அடுத்தவர் மூக்கில் இது போன்ற துர்நாற்றங்களை நுழைப்பதை தடுப்பதற்கும் யாராவது சட்டம் போட்டால் நன்றாக இருக்கும்!

Read more...

யார் அந்தக் குழந்தை?

Thursday, May 25, 2006

அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் சமீபத்தில் இந்தியாவிற்கு வந்திருந்தபோது நம் ஜனாதிபதி அப்துல் கலாமுடன் உரையாடிக் கொண்டிருந்தார். ஜனாதிபதிகளை மக்கள் நேசிப்பதற்கான தலைத்துவத்துவ தத்துவத்தை சொல்லும் படி அப்துல் கலாமிடம் ஆலோசனைக் கேட்டார்.

அதற்கு அப்துல் கலாம் ஜார்ஜ் புஷ்ஷிடம், "தன்னைச் சுற்றி இருப்பவர்கள் புத்திசாலிகளாக இருக்க வேண்டும்" என்றார். அவர்கள் புத்திசாலிகளா என்று எப்படி அறிந்து கொள்வது? என்றார். இப்போது அதை உங்களுக்கு செய்து காட்டுகிறேன் என்றவாறு பிரதமர் மன்மோகன் சிங்கை போனில் அழைத்தார் நம் ஜனாதிபதி.

கலாம்: பிரதமர் மன்மோகன் ஜி! தயவு செய்து இந்தக் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்! "உங்கள் தாயாருக்கும் தந்தைக்கும் ஒரு குழந்தை இருக்கிறது. அந்தக் குழந்தை உங்களுக்கு சகோதரியோ அல்லது சகோதரனோ அல்ல! எனில் யார் அது?" என்று கேட்டு தனது போனின் ஸ்பீக்கரை ஆன் செய்தார்.

மன்மோகன்: (உடனடியாக) அதுதான் நான்! என்றார்.

கலாம்: மிகச்சரியாகச் சொன்னீர்கள் பிரதமரே! மிக்க நன்றி! என்றவாறு ஸ்பீக்கரை ஆஃப் செய்துவிட்டு புஷ்ஷைப் பார்த்து புன்னகைத்தார்.

புஷ்: சூப்பர் ஐடியாவாக இருக்கிறது. இதே முறையை நானும் செய்து பார்க்கிறேன்!

அமெரிக்கா திரும்பியதும் வெள்ளை மாளிகையில் தன் சகாக்களிடம் இதே கேள்வியைக் கேட்டார். முதலில் காண்டலிசாவிடம் கேட்டார். லிசா தன் தலையைச் சொரிந்து கொண்டே, யோசித்துச் சொல்கிறேன்! கொஞ்சம் டயம் வேண்டும் என்றார். புஷ்ஷும் OK சொல்லி விட்டார்.

உடனடியாக வெள்ளை மாளிகையின் சீனியர் செனட்டர்களை அழைத்த காண்டலிசா, இதே கேள்வியை அவர்களிடம் கேட்டார். யாருக்குமே பதில் தெரியவில்லை. ஏமாற்றத்துடன் காலின் பவலை அழைத்து அதே கேள்வியைச் சொன்னார்.

காண்டலிசா: "உங்கள் தாயாருக்கும் தந்தைகும் ஒரு குழந்தை இருக்கிறது. அந்தக் குழந்தை உங்களுக்கு சகோதரியோ அல்லது சகோதரனோ அல்ல! எனில் யார் அது?"

காலின்பவல்: ஹஹ்ஹா! அதுதான் நான்! என்றார்


மிகுந்த சந்தோசத்துடன் வெள்ளை மாளிகையில் புஷ்ஷின் அறைக்குள் நுழைந்த காண்டலிசா "எனக்கு விடை தெரியும்! அது நமது காலின் பவல்!" என்றார்.

இதனைக் கேட்ட புஷ் ஏளனமாக,"தவறு! அது மன்மோகன் சிங்! சந்தேகம் இருந்தால் ஜனாதிபதி அப்துல் கலாமிடம் கேட்டுக் கொள்! என்றார்.

மேலும் புஷ் சமாச்சாரங்களுக்கு,

அமெரிக்க அதிபருடன் ஒரு நேர்காணல்!

அமெரிக்க அதிபருடன்...

புஷ் விளையாட்டு

Read more...

யார் அந்தக் குழந்தை?

அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் சமீபத்தில் இந்தியாவிற்கு வந்திருந்தபோது நம் ஜனாதிபதி அப்துல் கலாமுடன் உரையாடிக் கொண்டிருந்தார். ஜனாதிபதிகளை மக்கள் நேசிப்பதற்கான தலைமைத்துவத்துவ ஐடியா சொல்லும் படி அப்துல் கலாமிடம் கேட்டார்.

அதற்கு அப்துல் கலாம் ஜார்ஜ் புஷ்ஷிடம், "தன்னைச் சுற்றி இருப்பவர்கள் புத்திசாலிகளாக இருக்க வேண்டும்" என்றார். அவர்கள் புத்திசாலிகளா என்று எப்படி அறிந்து கொள்வது? என்றார். இப்போது அதை உங்களுக்கு செய்து காட்டுகிறேன் என்றவாறு பிரதமர் மன்மோகன் சிங்கை போனில் அழைத்தார் நம் ஜனாதிபதி.

கலாம்: பிரதமர் மன்மோகன் ஜி! தயவு செய்து இந்தக் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்! "உங்கள் தாயாருக்கும் தந்தைக்கும் ஒரு குழந்தை இருக்கிறது. அந்தக் குழந்தை உங்களுக்கு சகோதரியோ அல்லது சகோதரனோ அல்ல! எனில் யார் அது?" என்று கேட்டு தனது போனின் ஸ்பீக்கரை ஆன் செய்தார்.

மன்மோகன்: (உடனடியாக) அதுதான் நான்! என்றார்.

கலாம்: மிகச்சரியாகச் சொன்னீர்கள் பிரதமரே! மிக்க நன்றி! என்றவாறு ஸ்பீக்கரை ஆஃப் செய்துவிட்டு புஷ்ஷைப் பார்த்து புன்னகைத்தார்.

புஷ்: சூப்பர் ஐடியாவாக இருக்கிறது. இதே முறையை நானும் செய்து பார்க்கிறேன்!

அமெரிக்கா திரும்பியதும் வெள்ளை மாளிகையில் தன் சகாக்களிடம் இதே கேள்வியைக் கேட்டார். முதலில் காண்டலிசாவிடம் கேட்டார். லிசா தன் தலையைச் சொரிந்து கொண்டே, யோசித்துச் சொல்கிறேன்! கொஞ்சம் டயம் வேண்டும் என்றார். புஷ்ஷும் OK சொல்லி விட்டார்.

உடனடியாக வெள்ளை மாளிகையின் சீனியர் செனட்டர்களை அழைத்த காண்டலிசா, இதே கேள்வியை அவர்களிடம் கேட்டார். யாருக்குமே பதில் தெரியவில்லை. ஏமாற்றத்துடன் காலின் பவலை அழைத்து அதே கேள்வியைச் சொன்னார்.

காண்டலிசா: "உங்கள் தாயாருக்கும் தந்தைகும் ஒரு குழந்தை இருக்கிறது. அந்தக் குழந்தை உங்களுக்கு சகோதரியோ அல்லது சகோதரனோ அல்ல! எனில் யார் அது?"

காலின்பவல்: ஹஹ்ஹா! அதுதான் நான்! என்றார்


மிகுந்த சந்தோசத்துடன் வெள்ளை மாளிகையில் புஷ்ஷின் அறைக்குள் நுழைந்த காண்டலிசா "எனக்கு விடை தெரியும்! அது நமது காலின் பவல்!" என்றார்.

இதனைக் கேட்ட புஷ் ஏளனமாக,"தவறு! அது மன்மோகன் சிங்! சந்தேகம் இருந்தால் ஜனாதிபதி அப்துல் கலாமிடம் கேட்டுக் கொள்! என்றார்.

Read more...

இனி நாய்களை நம்பக்கூடாது!

Friday, May 12, 2006

இண்டர்நெட்டின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை மனிதர்களே அதிகம் பயன்படுத்தி வந்த இண்டர்நெட்டின் சேவை தற்போது எல்லை மீறி விட்டது. ஆம்! தாய்லாந்தில் நாய்களுக்கு எனப் பிரத்யேகமான 24 மணிநேரமும் இயங்கும் மியூசிக் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.



http://www.dogradiothailand.com/ என்ற முகவரியில் இந்த இணையதளம் புதன்கிழமை தொடங்கப்பட்டது. இதில் நாய்களுக்குப் பிடித்தமான இசை வாத்தியங்களின் இசை ஒலிக்கப்படும் என்று பாங்காக் நகரில் இருந்து வெளிவரும் ஆங்கில நாளேடு "பாங்காக் போஸ்ட்' தெரிவித்துள்ளது.

ரேடியோ நிகழ்ச்சித் தொகுப்பாளர் அனுபன் பூன்சியோன் என்பவரை மேற்கோள் காட்டி இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. "இசையைக் கேட்டால் சில நாய்கள் வாலை ஆட்டும்; சில நாய்கள் தரையில் படுத்துக் கொண்டு தலையை உயர்த்தி ஆட்டி இசையை ரசிக்கும்' என்று அனுபன் தெரிவித்தார். (அடப்பாவிகளா! இப்படிக் கூட மார்க்கெட்டிங் பண்ணுவீங்களா?)

தனது வளர்ப்பு நாய்க்கு தாய்லாந்து நாட்டின் கிராமிய இசைதான் அதிகம் பிடிக்கும் எனக் கூறிய அனுபன், பெரும்பாலும் நாய்களுக்கு அதன் எஜமானர்களுக்குப் பிடித்தமான இசைதான் அதிக அளவில் பிடிக்கும் என்றும் கூறினார். (லொள்ளுதானே?)

முன்பெல்லாம் வீட்டுக் காவலுக்கு நாய் வளர்ப்பதாகச் சொல்வார்கள். இது போன்ற இணையவானொலிகள் இருபத்து நான்கு மணி நேரமும் இயங்குவதால் இனி நாய்களால் வீட்டை காவல் காக்க முடியுமா? என்று தெரியவில்லை. ஆகவே இனி காவலுக்கு நாய்களை நம்பக் கூடாது!

''This is a trial period. We're still checking the system and waiting for feedback from listeners'' said Anupan Boonchuen, programme. அதாவது இது பரிச்சார்த்த நிலையே. நாங்கள் இச்சேவையை இன்னும் ஆராய்ந்து வருகிறோம். இத்தளம் பற்றி நேயர்களின் கருத்தை எதிர்ப்பார்க்கிறோம்" என்றார் அதன் தொகுப்பாளர் அனுபன் பூன்சியோன்.

ஆகவே இதைப் படிப்பவர்கள் முடிந்தால் இண்டர்நெட் அறிந்த நாய்களிடம் சொல்லி, தொகுப்பாளருக்கு FEEDBACK (பின்னால் கடி?) கொடுக்கச் சொல்லவும்.

Read more...

நான்கு வேடங்களில் விஜயகாந்த்!?

Friday, April 21, 2006

இதுவரை சினிமாவில் அதிகபட்சம் மூன்று வேடங்களில் நடித்து வந்த கேப்டன்.விஜயகாந்த் விருத்தச்சலம் தொகுதியில் சட்டமன்ற வேட்பாளராக நடிக்கிறார்! ஸாரி போட்டியிடுகிறார். அதில் திடீர் திருப்பமாக விஜயகாந்த் என்ற பெயரில் மேலும் 3 பேர் போட்டியிடுவதால் தேமுதிகவினர் கலங்கிப் போயுள்ளனர்.

தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக அவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அவரது மனைவி பிரேமலதா மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்துள்ளார்.


இந் நிலையில் விஜயகாந்த் என்ற பெயரில் மேலும் 3 பேர் மனு தாக்கல் செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடைசி நாளான நேற்று இந்த மூன்று பேரும் அடுத்தடுத்து வந்து மனு தாக்கல் செய்தனர்.
ஓட்டு போடும் வரும் வாக்காளர்களைக் குழப்ப இந்த மூன்று விஜய்காந்த்களையும் பாமக தான் மறைமுகமாக நிறுத்தியுள்ளதாக விஜய்காந்த் தரப்பு கருதுகிறது.

மனுதாக்கல் செய்த 3 பேரில் ஒருவர் அ.விஜயகாந்த். இவர் கடலூர் மாவட்டம் சுத்துக்குளம் பகுதியைச் சேர்ந்தவர். இன்னொருவர் க. விஜயகாந்த். இவர் சிதம்பரம் வையலூர் காலனியைச் சேர்ந்தவர். 3வது விஜயகாந்த் ச.விஜயகாந்த். இவர் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியைச் சேர்ந்தவர்.

நடிகர் விஜயகாந்த்தின் இனிஷியலும் அ என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜயகாந்த் உள்பட நான்கு விஜயகாந்த்துகளுக்கும் சுயேச்சை சின்னமே ஒதுக்கப்படவுள்ளது.

இதனால் ஒரே தொகுதியில் நான்கு விஜயகாந்த்துகள் போட்டியிடுவதால் வாக்காளர்களிடையே பெரும் குழப்பம் ஏற்படும் எனத் தெரிகிறது.
இந்தக் குழப்பத்தில் விஜய்காந்த்துக்கு வரும் வாக்குகள் சிதறும் என கணக்குப் போட்டு இவர்களை களமிறக்கியதே பாமகவினர் என்று புலம்ப ஆரம்பித்துள்ளனர் தேமுதிகவினர்.

அ.விஜயகாந்த்க.விஜயகாந்த்ச.விஜயகாந்த்: பாமக வைத்த 'பாம்': அதிர்ச்சியில் தேமுதிக!

கேப்டன் பிரபாகரன் படத்தில் நடித்ததால் விஜயகாந்த் தன்னை "கேப்டன்" என்று அழைத்துக் கொள்வதை விரும்புகிறார். அதேபோல் "கரிமேடு கருவாயன்" படத்தில் நடித்திருப்பதால், கருவாயன் விஜயகாந்த் என்றாலும் ஏற்றுக் கொள்வாரா? என பா.ம.க. அனுதாபி ஒருவர் கேட்கிறார். வருங்கால முதல்வர் கேப்டன் விஜயகாந்த் பதில் சொல்வாரா?

நம்ம கமெண்ட்: சினிமாவில் விஜயகாந்திற்கு டூப்பாக நடிப்பவர்களும் பிரச்சாரத்திற்கு வராமல் இருந்தால் நல்லது!

Read more...

ஆதாயம் தரும் பதவிகள்.

Monday, March 27, 2006

சென்ற வாரத்தலைப்புச் செய்திகளில் "ஆதாயம் தரும் பதவி" என்ற வாசகம் அடிக்கடி கண்ணில் பட்டது. அரசு பதவியில் இருக்கும் ஒருவர், ஒரே நேரத்தில் அரசு உதவி பெறும் மற்ற பதவிகள் வகிப்பதால், அதற்கான இரட்டை நிர்வாகச் செலவுகளால் அரசுக்கு செலவு இரட்டிப்பாவதுடன், இரு பதவியில் இருக்கும் ஒருவரால் இரண்டையும் சரிவரச்செய்ய முடியாது என்ற நோக்கில், அரசு உதவி பெறும் பதவிகளில் "ஒருவருக்கு ஒரு பதவி" என்ற வழிகாட்டல் இந்திய அரசியல் அமைப்பிலும் சட்டத்திலும் இருக்கிறது.

சென்ற மாதம் சமாஜ்வாதி கட்சியின் எம்.பியும் அமிதாப்பச்சனின் மனைவியுமான ஜெயாபச்சனை இக்காரணம் சொல்லி பதவி நீக்கம் செய்ய தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்தது. காங்கிரஸ் எம்.பி ஒருவரால் எறியப்பட்ட இந்த அரசியல் அம்பு, அதே காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியாவின் பதவி இழப்பிற்கும் காரணமாகி விட்டது. இவ்விவகாரம் பெரிதாகும் முன்பே சோனியா தான் வகித்த சர்ச்சைக்குறிய ஆதாயம் தரும் பதவியையும், அதனால் இழக்கவிருந்த எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்து, இதை வைத்து அரசியல் குளிர்காய திட்டமிட்டிருந்த பா.ஜ.க.வினருக்கு அதிர்ச்சியளித்தார்.

சோனியாவின் பதவி இழப்பைக் காக்க ஆளும் காங்கிரஸ் அரசு அவசரமாக அரசியல் சட்டத் திருத்தம் கொண்டுவர முயன்றதன் மூலம் ஆளும் கட்சியினர் தங்கள் வசதிக்கு ஏற்ப சட்டங்களை திருத்திக் கொள்வார்கள் என்ற உண்மை அம்பலத்திற்கு வந்துள்ளது. நாட்டில் எத்தனையோ தலை போகிற காரியங்களுக்கு காட்டாத அவசரம், தங்கள் பதவிக்கு வேட்டு வைக்கப்படும் என்பதால் எதையும் செய்யத் துணிவார்கள். தகவல் பெறும் மசோதாவை சட்டமாக்கி விட்டு, புலணாய்வு (Investigation Journalizsm) ஊடகவியலாளர்களைக் கட்டுப்படுத்தவும் கட்சி சட்டம் கொண்டுவர பாகுபடின்றி திட்டமிட்டுள்ளார்கள்!

ஆதாயம் தரும் பதவியால் பாதிக்கப்பட்டது சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மட்டுமல்ல. கம்யூனிஸ்ட் கட்சியின் சோம்நாத் சட்டர்ஜி, பாஜகவின் மல்ஹோத்ரா ஆகியோரும் கூட ஆதாயம் தரும் பதவிகளில் இருந்து வருகிறார்கள். நான்கு திருடர்களை போலிஸ் விரட்டிக் கொண்டு வரும்போது முதலில் பிடிபட்ட திருடனுக்கு விழும் தர்ம அடிகள் அடுத்தடுத்து பிடிபடும் திருடர்களுக்கு விழுவதை விட குறைவாக விழும். திருடனே முதலில் பிடிபட்ட திருடனுக்கு தர்ம அடியைக் கொடுத்தால் தனக்கு அடி விழாது அல்லது குறைவாக விழும் என்ற நப்பாசையில் பா.ஜ.க. இப்பிரச்சினையை கிளறியது.

இன்னொரு வகையில் சொல்வதென்றால் தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை; எதிரியின் இரண்டு கண்ணும் போக வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தங்கள் கட்சியின் மல்ஹோத்ரா பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை ஆளும் கட்சியின் முக்கிய தலைகளும், பாராளுமன்றத்தில் சதா தலையில் குட்டிக் கொண்டிருக்கும் சபாநாயகரும் பதவி விலக வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இவ்விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளது.

ஆதாயம் தரும் பதவிகளால் பெரும்பாலும் பாதிக்கப்படுவது ஆளும் கட்சியினரே என்பதால் ஆட்சியில் இருக்கும் வரை ஆதாயம் அடைந்து விட்டு, திண்ணையைக் காலி செய்யும் போது புது வீட்டுக்காரரை திட்டிவிட்டுச் செல்வது மாதிரி, எதிர் கட்சியான பிறகு அல்லது ஆட்சியில் இல்லாத போது இது போன்ற பிரச்சினைகளைக் கிளப்பி (பா.ஜ.க, தெலுங்கு தேசம், திரிணாமூல் போன்றக் கட்சியினர்) அரசியல் நடத்துகிறார்கள்.

காங்கிரஸைப் பொருத்தவரை இன்னும் சில மாதங்களில் நடக்க இருக்கும் மாநில சட்டமன்ற தேர்தல்களில் சோனியா அனுதாப அலையை தக்க வைத்து அரசியல் ஆதாயம் பெறும் என்று அரசியல் வல்லுனர்கள் கருதுகிறார்கள். ஆனால் பிஜேபிக்கு புலிவாலைப் பிடித்தவன் கதையாகி விட்டது அல்லது சாண் ஏறினால் முழம் சறுக்குகிறது. நல்லவேளை சோனியா முன்னதாகவே ராஜினாமாச் செய்து விட்டார். இல்லாவிட்டால் இதைச் சொல்லி அத்வானி இதற்கும் ஒரு ரதயாத்திரை கிளம்பி இருப்பார்.

ஒரு புள்ளி விபரப்படி, அரசின் பாராளுமன்றச் செலவுகள் யாருக்கெல்லாம் வீணாக செலவளிக்கப் பட்டுள்ளது என்று பாருங்கள். மொத்தமுள்ள 545 எம்பிக்களில்,

29 பேர் மீது கணவன்/மணைவி துஷ்பிரயோகத்திற்காக வழக்குகள் உள்ளன.

7 பேர் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

117 பேர் கொலை, கற்பழிப்பு, அடிதடி கொள்ளை,வழிப்பறி வழக்குகளுக்காக விசாரிக்கப்பட்டுள்ளார்கள்.

71 பேர் மோசமான கடன் நடவடிக்கைகளால் எந்த வகைக்கடனும் பெற முடியாது.

21 பேர் பல்வேறு நீதிமன்ற வழக்குகளில் சிக்கியுள்ளார்கள்.

84 பேர் பல்வேறு குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டு அபராதம் விதிக்கப் பட்டுள்ளார்கள்.

சரி, இதெல்லாம் இருக்கட்டும் அரசியல்வாதிகள் வகிக்கும் பதவிகளில் எந்தப் பதவியில் ஆதாயம் இல்லை என்று யாராவது சிந்தித்தோமா? இது போன்ற பொறுப்பற்ற எம்.பிக்களுக்கு ஆகும் வெட்டிச் செலவுகளையும் நாடாளுமன்ற புறக்கணிப்பையும் குறைத்திருந்தால் நம்நாடு இருபது வருடங்களுக்கு முன்பே வல்லரசாகி இருக்கும்.

பாரத மாதாவுக்கு ச்சே....!

Read more...

தேர்தல்களினால் மக்களுக்கு என்ன பயன்?

Sunday, March 19, 2006

தேர்தல் நெருங்கிடுச்சு. வாக்காளர்களும் வேட்பாளர்களும் இன்னும் ஓரிரு மாதங்களுக்கு சொந்தக்காரர்களாக உறவு பாராட்டிக் கொள்வார்கள். ஓட்டு கேட்டு வரும் வேட்பாளர்களை "உங்கள் வீட்டுப் பிள்ளை..............உங்கள் பொற்பாதங்களை நோக்கி வருகிறார்" என்ற ஒலிபெருக்கி அறிவிப்புகள் இனி அடிக்கடி கேட்கும். ஐந்தாண்டுக்கொருமுறை வரும் தேர்தல்களினால் சாமான்ய மக்களுக்கு என்னென்ன பயன்கள் என்று யோசித்ததில் கிடைத்த அரிய கண்டுபிடிப்புகள்.

தோரனம், கொடி & பேனர்:

1) துணி பேனராக இருந்தால் போர்த்திக் கொள்ளலாம்.

2) டிஜிட்டல் பேனராக இருந்தால் கூரை மீது போர்த்தலாம்.

3) தோரனக் கொடியை சலூனில் சேவிங் பண்ணிய பிளேடை சுத்தம் செய்ய உபயோகிக்கலாம்.

4) தெருமுழுக்க தோரணம் கட்டி இருப்பதால் காக்கா-குருவி எச்சங்கள் தலையில் விழ வாய்ப்பு குறைவு


போஸ்டர்:

1) அழுக்கு சுவரை அலங்கரிக்க உதவுகிறது.

2) புது வீட்டில் திருஷ்டி பூசணிக்கு பதில் சில வேட்பாளர்கள் போட்டோ பொருத்தமாக இருக்கும்.

3) புது போஸ்டரை மேய்வதால் மாட்டுத் தீவனச் செலவு தேர்தல் முடியும் வரை மிச்சம்.

4) எதிர்க்கட்சியினர் போஸ்டரில் சாணி அடிக்கப்படுவதால், ரோடு சாணியின்றி சுத்தமாக இருக்கும்!


ஒலிபெருக்கி:

1) கரகர குரலில் பிரச்சாரம் செய்யப்படுவதால் சோடா,விக்ஸ் ஆகியவற்றின் விற்பனை கனிசமாக அதிகரிக்கும்.

2) வேட்பாளர் வருகிறார் என்பதை தூரத்திலிருந்தே அறிந்து கொள்ள முடிவதால் கடந்த வருடம் தொகுதிப்பக்கம் தலை காட்டாமல் இருந்த வேட்பாளர்களை விரட்டியடிக்க துடைப்பக்கட்டை, பழைய செருப்பு ஆகியவற்றை தயார் செய்து கொள்ள ஏதுவாகும்.

3) காக்கா, கழுதை,நாய் ஆகியவை, பிரச்சாரகர்களின் குரலைப்பார்த்து சந்தோசமடையும்.

தற்போதைக்கு இவைதான் யோசிக்க முடிந்தது! வேற எதுவும் இருந்தால் 'சும்மா நச்சுன்னு' பின்னூட்டமிடுங்க(டோய்!/டியோ!!)

Read more...

அன்பார்ந்த வாக்களப் பெருங்குடி மக்களே!

Wednesday, March 15, 2006

தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமடைந்து விட்டன. கூட்டணிக் கட்சிகளின் பிரச்சார பீரங்கிகள் இனி(தே) முழங்க ஆரம்பித்து விடுவார்கள். தேர்தலுக்கு முன்பு இருந்த கூட்டணிகள் தேர்தல் முடிந்து இடம் மாறி இருக்கலாம். முன்பு கூட்டணியில் இருக்கும் போது பேசியவற்றை அணி மாறியதும் சமாளிக்க வேண்டிய (?) காலத்தின் கட்டாயம் அரசியல் கட்சிகளுக்கு எழலாம். ஏற்கனவே கிடைத்த தொகுதிகளில் தங்கள் கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதி கிடைக்க வேண்டுமே என்ற கவலையில் இருக்கும் கட்சித் தலைவர்களுக்கு ஏதோ நம்மால் முடிஞ்ச உதவி.

1) சுனாமி

[கூட்டனியில் இருந்தால்]

அம்மா ஆட்சியில்தான் பெரும் திட்டங்களும் வெளிநாட்டுக் கம்பெனிகளும் தமிழகத்திற்கு வந்தன. அமெரிக்காவிலும் ஜப்பானிலும் மட்டுமே இருந்த("""பலத்தக் கைதட்டல்""") சுனாமி கூட அம்மா ஆட்சியில்தான் இந்தியாவிற்கு வந்தது! (மக்கள் எதற்கு கைதட்டுகிறார்கள் என்று பேச்சாளர் குழம்பிவிட்டார். சமாளித்துக் கொண்டே தொடர்கிறார்)

டிசம்பர்-24 ஐ மறக்க முடியுமா? சாதாரணமாக ஒரு நாளில் இருபது மணி நேரங்கள் பணி செய்யும் முதலமைச்சர் அம்மா சுனாமி தாக்கிய நாட்களில் ஒரு நாளைக்கு நாற்பது மணி நேரம் பணி செய்தார்கள். அள்ளிக் கொடுத்து சிவந்த கரங்களல்லவா? இன்னொரு முறை சுனாமி நிவாரண நிதி வழங்க எங்களுக்கு மீண்டும் வாய்ப்புக் கொடுங்கள். (சுனாமி வந்தது சாதனையா? சோதனையா? மக்களுக்கு ஒன்றுமே புரியவில்லை!)

[கூட்டனியில் இல்லாவிட்டால்]

இந்த ஆட்சியின் அவலங்கள் கொஞ்சமா நஞ்சமா? எந்த ஆட்சியிலும் வராத சுனாமி அந்த அம்மா ஆட்சியில வந்ததே? அந்தம்மாவின் அராஜகம் கடலுக்கே பொறுக்காமல் தானே சுனாமியாகப் பொங்கி எழுந்தது! வாக்காளர்களே! இன்னொரு சுனாமி இனி வராமல் தடுக்க சுனாமியாகப் பொங்கி இந்த காட்டாட்சிக்கும் முடிவு கட்டிடுவீர்!

2) சேது சமுத்திர திட்டம்

[கூட்டனியில் இருந்தால்]

சேதுக் கால்வாய் திட்டத்தால் கடற்கரையோர கிராம மக்கள் வெளிநாட்டுக் கப்பல்களை அடிக்கடி கண்டுகளிக்கலாம் இது இந்தக் கூட்டணியின் சாதனையல்லவா?

[கூட்டனியில் இல்லாவிட்டால்]

சேது சமுத்திரத் திட்டத்தால் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ருசியான மீன்களான கெளுத்தி, கெண்டையெல்லாம் இலங்கைக்குப் போய்விட்டன. கடலை ஆழப்படுத்துவதால் தமிழகக் கடற்கரையோரங்களில் மாசு ஏற்படுகிறது. அடிக்கடி கடல் கொந்தளிப்பது கூட, அடிக்கடி கப்பல்கள் கடந்து செல்வதால்தான் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.

3) நாடு முழுவதும் ஒரு ரூபாயில் தொலைபேசிச் சேவை

[கூட்டனியில் இருந்தால்]

காஷ்மீரிலுருந்து கன்னியாக்குமரி வரை ஒரு ரூபாயில் இனி நீங்கள் பேசச் செய்து மகத்தான சாதனை செய்தது எங்கள் கூட்டணி அரசுதான்.

[கூட்டனியில் இல்லாவிட்டால்]

ஒரு ரூபாய்ல நாடுமுழுவதும் டெலிபோன் பேசும் வசதியால் ஏற்பட்ட தொந்தரவு எக்கச்சக்கம். மக்கள் நிம்மதியா தூங்க முடியலே. நேற்று யாரோ ஒரு பஞ்சாப்காரன் போன் பண்ணி பல்பீர் சிங் வந்தானான்னு கேக்குறான். பல்பீர் சிங் எதுக்கய்யா பட்டுக்கோட்டைக்கு வரனும்? இனியும் இது போன்ற கொடுமைகள் தொடர வேண்டுமா?


பின்குறிப்பு: உங்களுக்கும் ஏதாச்சும் சமாளிஃபிகேஷன் தெரிஞ்சா கொடுத்து உதவலாமே! சிறந்த சமாளிப்பை வழங்குபவருக்கு அடுத்த தேர்தலில் கச்சத் தீவில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும்.!

Read more...

அமெரிக்க அதிபருடன் ஒரு நேர்காணல்!

Wednesday, March 01, 2006

இந்தியாவுக்கு மூன்று நாள் சுற்றுப்பயணம் வந்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷுடன் "ராஜாமடம்" பாலத்தில் நடந்து கொண்டே அதிரையின் பாரம்பரிய உடையான வெள்ளைக் கைலியணிந்து (!) பல விசயங்களை வெட்கப்படாமல் மனம் விட்டு பேசினோம். அதிராம்பட்டினதுக்கு வரும் பிரமுகர்கள் இந்த பாலத்திற்கு விசிட் அடிப்பது மரபு!

இப்பாலத்தின் சிறப்புகள் என்று சொன்னால் கலைஞர் ஆட்சியில் கட்டப்பட்ட பாலங்களில் விசாரனைக்குள்ளாகாத முப்பது வருடத்தைய பாலம். இந்தியாவின் மாதிரிக்கிராமங்களாக மத்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு முன்னாள் தமிழக ஆளுநர் திருமதி.ஃபாத்திமா பீவி அவர்களால் திறந்து வைக்கப்பட்ட மல்லிப்பட்டினம் அருகிலுள்ள மனோராவிற்குச் செல்லும் கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ளது. இவையன்றி கமலஹாசன் நடித்த கடல் மீன்கள் திரைப்படம் இங்கு சூட்டிங் எடுக்கப்பட்டது. இனி உரையாடலைக் கேளுங்கள்.

அதிரைக்காரன்: வாங்க புஷ் அவர்களே! நீங்கள் இந்தியாவுக்கு வருவது இதுதான் முதல் தடவை என்று நினைக்கிறேன்.

புஷ்: ஆமாம். இதுதான் முதல் தடவை!

அதிரைக்காரன்: மகிழ்ச்சி! உங்கள் வருகை நல்வருகையாகட்டும். உங்கள் வருகை மூலம் இந்திய-அமெரிக்க உறவு பலப்படட்டும்.

புஷ்: நன்றி அதிரைக்காரன்! ஒன்னு சொல்ல மறந்துட்டேன். எனக்கும் இந்தியா மீது தனிப்பிரியம் உண்டு. எப்படியும் நாளில் ஒருதடவையாவது இந்தியாவுடன் கொஞ்சி விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும்.

அதிரைக்காரன்: அப்படியா! நீங்க இருக்கிற பிஸிக்கு, டெய்லி இந்தியாவுடன் கொஞ்சுவது என்பது கஷ்டம். எப்படி போனில் பிரதமர்/ஜனாதிபதியோட பேசுவீங்களா? அல்லது இண்டெர்நெட்டில் சாட் பண்ணுவீங்களா?

புஷ்: அப்படியெல்லாம் இல்லே அதிரைக்காரன்! நான் சொன்னது என் செல்ல நாய்க்குட்டியைப் பற்றி! அதன் செல்லப்பெயர் "இந்தியா"

அதிரைக்காரன்: (மனசுக்குள்) கடிக்கும் வரை நாயும் அழகுதான். அப்புறம் உலக விசயத்தைப் பற்றி கொஞ்சம் கதைக்கலாமா?

புஷ்: ஓ! தாராளமாக!! எனக்கு அமெரிக்காவை விட உலக விசயங்களில் ரொம்ப ஆர்வம்.

அதிரைக்காரன்: ஒஸாமா பின் லாடனை எப்போ பிடிப்பதாக உத்தேசம்?

புஷ்: எங்கள் நாட்டு FBI யும் இன்னும் பல உளவு அமைப்புகளும் வலைவீசி தேடி வருகிறோம். அஞ்சு வருஷம் பொறுத்துட்டீங்க. மேற்கொண்டு சில வருஷங்கள் பொறுத்தா குடியா மூழ்கிடப்போகுது? உங்க நாட்டு சாதாரண வீரப்பனை பிடிக்கவே இருபது வருஷங்களாச்சு உங்களுக்கு. இஸ்ரேல் ராணுவம் கூட உங்க நாட்டு காட்டுல தேடிட்டு அலுத்துப் போயி திரும்பிட்டாங்க. உலகமகா தீவிரவாதி பின்லாடன்னா சும்மாவா?

அதிரைக்காரர்: சரியாச் சொன்னீங்க. ஒஸாமா பின் லாடன் மேல ஏன் உங்களுக்கு அவ்வளவு கோபம்?

புஷ்: என்ன அதிரைக்காரன் இப்படிக் கேட்டுட்டீங்க! எங்க நாட்டில் இருந்த உலக வர்த்தக மையத்தை பாம் போட்டு இடிச்சதும் அதன் மூலம் மூவாயிரத்திற்கும் அதிகமான அப்பாவி மக்களைக் கொன்றதும் தெரியும் தானே? அதை எப்படி எங்களால் பொறுத்துக் கொள்ள முடியும்? அதனால்தான் எங்களுக்கு அவனைப் பிடிக்கவில்லை.

அதிரைக்காரன்: ஓஹோ..அதனாலதான் பிடிக்கலையா? சரி, உலக வர்த்தகக் கட்டிடம் தகர்க்கப் பட்டபோது அமெரிக்கா மீது பரிவும், அதை செய்த தீவிரவாதிகள் மீது வெருப்பும் வந்தது. ஆனால் அதை விட மோசமாக ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் பல வீடுகளைத் தகர்த்ததும், அப்பாவிகளைக் கொன்றதும் நீங்கள்தான் என்பதால் உங்கள் மீதான பரிவு போய் விட்டது. உங்களுக்கும் ஒஸாமா பின் லாடனுக்கும் அதிகம் வித்தியாசமில்லை.

புஷ்: ஹி.ஹி..நானும் பார்த்தேன். இண்டெர்நெட்டுல ஒஸாமா பின்லாடன் மாதிரி என்னை படம் போட்டிருந்தாங்க. பிரபலமானவர்களைக் கார்ட்டூன் போட்டு கிண்டலடிப்பது நிச்சயம் ஜெயிலண்ட்ஸ் போஸ்டெனாத்தான் இருக்கனும்.

அதிரைக்காரன்: ஜயிலண்ட்ஸ் போஸ்டெனில் கிறிஸ்தவர்களைக் கார்ட்டூன் வரைந்து கேவலப்படுத்துவதில்லை என்பதை பாலிஸியாகக் கடைபிடிக்கிறார்கள் என்று ஒரு கார்ட்டூனிஸ்ட் வருத்தப்பட்டிருந்தார். சில மாதங்கள் முன்பு ஒரு கார்ட்டூனிஸ்ட் ஜீசஸ் கிறிஸ்டைக் கிண்டலடித்து வரைந்ததை பிரசுரிக்க மறுத்த செய்தியை கேள்விப்பட்டீங்களா?

புஷ்: அது கிடக்குது விடுங்க! கருத்துச் சுதந்திரத்தை மதிக்க வேண்டும்.

அதிரைக்காரன்: ஆமாமா! சரியாச் சொன்னீங்க!! நீங்க ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் செஞ்ச வண்டவாளங்களை அல்ஜஸீரா புட்டு புட்டு வெச்ச போது, அவர்களின் ஒளிபரப்பு நிலையங்கள் மீது குண்டு போட்டும் நிருபர்களையும் தாக்கியும் கருத்துச் சுதந்திரத்தை மதிச்சதை பார்த்தோமே!

புஷ்: அதிரைக்காரன்! உங்களுக்கு அரசியல் தெரியலேன்னா சும்மா கம்முன்னு கிடங்க. மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடாதீங்க. வேற ஏதாவது ஜாலியான விஷயத்துக்கு வருவோம். பல அப்பாவிகளைக் கொன்ற ஒஸாமாவுக்கு அடைக்கலம் கொடுத்ததால்தான் ஆப்கானிஸ்தானை தாக்கி தாலிபான்களை விரட்டி விட்டு ஆப்கானில் ஜனநாயகத்தை மலரச் செய்தோம்.

அதிரைக்காரன்: மத்தியப் பிரதேசம் போபாலில் பல அப்பாவிகளைக் கொன்ற யூனியன் கார்பைடு ஆண்டெர்ஸனுக்கு நீங்க அடைக்கலம் கொடுத்து வருவது மாதிரின்னு சொல்லுங்க! அப்படியே பாகிஸ்தானிலும் முஷர்ராபையும் கவுத்திட்டு இராணுவ சர்வாதிகரத்திற்கும் முடிவு கட்டணும்.

புஷ்: மத்தியப் பிரதேசத்தை விட எங்களுக்கு மத்தியக் கிழக்குதான் முக்கியம். முஷராப் பேரழிவு ஆயுதங்களை வைத்திருக்கவில்லை. ஆனால் சதாம் ஹுசேன் பேரழிவு ஆயுதங்களை வைத்திருந்தார். அவற்றைக் கொண்டு அமெரிக்காவை 45 நிமிடங்களுக்குள் தாக்க முடிந்திருக்கும். அதற்குள் நாங்கள் போரிட்டு தடுத்து விட்டோம்.

அதிரைக்காரன்: சதாம் பேரழிவு ஆயுதங்களை வைத்திருந்ததால் தானே படையெடுத்து போய் நாட்டை துவம்சம் செய்து விட்டு, இன்று உங்களின் பிடியில் கோர்ட்டு,கேஸு என்று அலைந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் உண்ணாவிரதம் கூட இருந்திருக்கிறார். கடைசியில் பேரழிவு ஆயுதங்கள் அவரிடம் இல்லையல்லவா?

புஷ்: அதுக்குத்தான் தவறான தகவல் கொடுத்த உளவுத் துறைத் தலைவரை பதவி நீக்கம் செய்து தண்டித்து விட்டோமே!

அதிரைக்காரன்: உங்களுக்கு தவறான தகவல் கொடுத்தவருக்கு தண்டனை கொடுத்துட்டீங்க. ஆனால் உலகத்துக்கு தவறான தகவல் கொடுத்த நீங்களும் டோனி பிளேரும் தப்பிச்சுட்டீங்க. ரொம்ப புத்திசாலிகள்தான் நீங்கள் ரெண்டுபேரும்!

புஷ்: காதைக் கொடுங்க அதிரைக்காரன்! (ரகசியமாக) டோனி பிளேருக்கு அவ்வளவு புத்திசாலித்தனம் கிடையாது. எங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தியதைக் காரணம் சொல்லி இன்று ஆப்கானிஸ்தானும், இராக்கும் எங்கள் வசம். அதே மாதிரி இலண்டன் குண்டு வெடிப்பைக் காரணம் காட்டி ஏதாச்சும் ஒரு முஸ்லிம் நாட்டை பிடித்திருக்கலாம். இலண்டன் குண்டு வெடிப்புகளுக்கு ஈரான்தான் காரணம் என்று சொன்னால் நாங்கள் என்ன இல்லை என்றா மறுக்கப் போறோம்?

அதிரைக்காரன்: மறந்தே போச்சு, ஆமா உங்கள் அடுத்த குறி ஈரானாமே?

புஷ்: (நமுட்டுச் சிரிப்பை அடக்கிக் கொண்டு) ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கிறது. இதனால் மிடில் ஈஸ்ட்டில் அமைதிக்கு ஆபத்து என்று இஸ்ரேல் எங்களிடம் முறையிட்டுள்ளது.

அதிரைக்காரன்: இஸ்ரேலும் கூட அணு ஆயுதங்களை வைத்திருக்கிறதே?

புஷ்: நான் என்ன இல்லைன்னா சொன்னேன்? எங்கள் அனுமதியோடு வைத்திருந்தால் பிரச்சினையில்லை. அதிரைக்காரன்! உங்களுக்கு பாலஸ்தீன தீவிரவாதிகளால் இஸ்ரேலியர்கள் எப்படியெல்லாம் இன்னல் படுகிறார்கள் என்று தெரியுமா? தேவையே இல்லாத விசயத்துக்கெல்லாம் இஸ்ரேல் இராணுவ டாங்கிகளை "கல்லால்" அடிக்கிறார்கள். நீங்களே சொல்லுங்கள் "கல்"லு பெரிசா? "அணு" பெரிசா?

அதிரைக்காரன்: உங்களோட பேசிக் கொண்டிருந்ததில் சட்டென்று முடிவுக்கு வர முடியவில்லை. கொஞ்சம் டயம் கொடுங்க எங்கள் வலைப்பூ வாசகர்களிடம் கேட்டுச் சொல்றேன். சரி, இவ்வளவு தூரம் எங்க ஊருக்கு வந்துட்டீங்க. என்ன சாப்பிடுகிறீர்கள்?

புஷ்: எது வேணும்னாலும் கொடுங்க "அதிராம்பட்டினம் அல்வா" மட்டும் வேணாம்! ஏன்னா எனக்கு அல்வா கொடுத்துதான் பழக்கம்!

பி.கு: இந்தியாவிற்கு வந்து விட்டு பாகிஸ்தானுக்கும் செல்லும் வெளிநாட்டு பிரமுகர்கள், இந்தியாவில் இருக்கும் வரை ஒரு மாதிரி பேசிவிட்டு, பாகிஸ்தானுக்குச் சென்ற பிறகு வேறு மாதிரி பேசுவது அல்லது அவ்வாறு பேசியதை பத்திரிக்கைகாரர்கள் திரித்து எழுதி விட்டனர் என்று மறுப்பது வழக்கம். அதனால அடுத்த முறை யாரும் இந்தியாவிற்கு வரும் முன் பாகிஸ்தான் சென்று விட்டு இந்தியாவுக்கு கடைசியாக வந்தால் நல்லது!

Read more...

ஆதலினால் காதல் கொ'ல்'வீர்

Tuesday, February 14, 2006

காதலர் தினத்தை முன்னிட்டு நானும் கவிஞர் வைரமுத்துவும் இணைந்து எழுதிய ஒரு கவிதை. காதலர் தினத்தில் பிரிந்து சென்ற அந்த ஜீவன்களுக்காக இந்தக் கவிதை சமர்ப்பிக்கின்றேன்.

  • சாதி மத பேதமில்லை நமக்குள் - இருந்தும்
    நம் காதல் தோற்றது கண்ணே!

  • தாவித்திரிந்த என்னைக் காதல் மொழியால்
    கூவியழைத்தவளே!

  • என்னைக் கொள்ளென்று அழைத்தபோது"லொள்"ளென்று குரைத்தவளே!

  • நாயே! என்று அன்பாகத்தானடி சொன்னேன் - அதற்கு
    போடா குரங்கு என்று பிரிந்து சென்றாயே!


கவிஞர்.அதிரைக்காரன்


  • 'காதல் வந்தால் சொல்லியனுப்பு

  • உயிரோடிருந்தால் வருகிறேன்

  • கண்ணீர் வழிய உயிரும் வழியக்

  • கரையில் கரைந்து கிடக்கிறேன்

  • சுட்ட மண்ணிலே மீனாக - மனம்

  • வெட்ட வெளியிலே வாடுதடி

  • கண்ணீர் கலந்து கண்ணீர் கலந்து

  • கடல் நீர் மட்டம் கூடுதடி'

கவிஞர்.மதுரைக்காரன்

Read more...

புகை பிடித்தால் நாய் கடிக்காது

Tuesday, February 07, 2006

மதுரையிலேர்ந்து ஒருத்தர் குதிரை வண்டி நெறய சிகரெட்டுகளை ஏத்திக்கிட்டு வந்து அதிரையில் பெட்டிக்கடை வச்சார். ஒரு பாக்கெட் சிகரெட் வாங்கினால் ஒரு தீப்பெட்டி இலவசங்கற ஆஃபரோட கடை நடத்தினார். பெரும்பாலான கடைகளில் அமுல் டப்பாக்குள்ள சிம்னி விளக்கும் பற்றவைக்க கட் பண்ணிய சிகரெட் அட்டைகளுமோ அல்லது நீண்ட கயிற்றின் நுனியில் கொள்ளி வைத்தோ இருந்ததால், அந்த ஆஃபர் யாரையும் கவரவில்லை.

மதுரைக்காரர் என்னென்னமோ செஞ்சு பார்த்தார் அதிரைக்காரர்கள் யாரும் சிகரெட் வாங்குவதா இல்லை. தன் வியாபார யுக்தியை மாற்றி மறுநாள் விளம்பரம் செய்தார். கூட்டம் அலை மோதியது. (அந்த கூட்டத்தில் என் ஃபிரண்டோட அழகான வார் செருப்பு (விலை ரூ39.95) அறுந்து விட்டது என்றால் பாருங்கள்!) விளம்பர வாசகம் இதுதான்:

1) இந்த சிகரெட் பிடிப்பவரை நாய் கடிக்காது.
2) இந்த சிகரெட் பிடிப்பவர் இருக்கும் வீட்டிற்கு திருடன் வரமாட்டான்.
3) இந்த சிகரெட் பிடிப்பவருக்கு பெண் குழந்தையே பிறக்காது.
4) இந்த சிகரெட் பிடிப்பவருக்கு முதுமையே வராது.

அவ்வளவுதான் போங்க. வியாபாரம் வெளுத்து வாங்கியது. மதுரைக்காரருக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. கல்லா பெட்டி நிரம்பி வழிந்தது. இவ்வாறாக மதுரைக்காரரின் சிகரெட் வியாபாரம் நன்றாக போய்க் கொண்டிருந்தது.

இதை பொறுமையாக கவனித்துக் கொண்டிருந்த, கொஞ்சம் விபரம் அறிந்த (என்னை மாதிரி) ஒருத்தர் மெதுவாக மதுரைக்காரரின் வாயைக் கிளறினார்.

அதிரைக்காரர்: என்ன மதுரைக்காரரே. இப்படி பொய் சொல்லி எங்க ஊரு மக்களை ஏமாற்றலாமா?

மதுரைக்காரர்: என்ன தம்பீ இப்டி சொல்லிப்புட்டிய. நான் உண்மையத்தானே சொல்லி விக்கிறேன்.

அதிரைக்காரர்: உங்க சிகரெட் பிடிப்பவரை நாய் கடிக்காதுங்கறீங்களே/

மதுரைக்காரர்: ஆமா. நெசந்தேன். சிகரெட் பிடிச்சா உடல் இளைச்சுடும். நடக்க கஷ்டமா இருக்கும். அதனால கைத்தடி துணையோடுதான் நடக்கனும். கையில கம்பு வச்சிருந்தா நாயி கடிக்காதுதானே?

அதிரைக்காரர்: ஓஹோ. அப்ப திருடன் வரமாட்டாங்கறது பீலாதானே?

மதுரைக்காரர்: நெசமாத்தேன் தம்பி. சிகரெட் அடிச்சா இருமல் வரும். இரவில் தூங்க முடியாது. ஒரே லொக்கு லொக்குன்னு இருமிக்கிட்டே இருப்பாங்க. திருடன் வரும்போது இருமல் சத்தம் கேட்டா, வீட்டுக்காரங்க விழிச்சிக்கிட்டு இருக்காங்கன்னு வேற தெருவுக்கு போயிடுவாந்தானே?

அதிரைக்காரர்: (மனதுக்குள்: எமகாதகங்கப்பா இந்த மதுரைக்காரங்க!) ஆமா, பெண் பிள்ளை பிறக்காதுங்கிரீங்களே. அது எப்படி?

மதுரைக்காரர்: என்னா தம்பி ஒன்னும் வெளங்காதப் புள்ளையா இருக்கீங்க. சிகரெட் பிடிச்சா சரியா குடும்பம் நடத்த முடியாது. இவங்களுக்கு இல்லறத்தில் ஈடுபாடு இருக்காது. அதனால பெண் குழந்தை இல்லே, எந்தக் குழந்தையுமே பிறக்காது.

அதிரைக்காரர்: ச்சே உங்களைப் போயி தப்பா நெனெச்சுட்டேன். முதுமை வராதுன்னியலே....

மதுரைக்காரர்: ஆமா தம்பி. சிகரெட் பிடிச்சா இளவயதிலேயே கான்சர் வந்து செத்துடுவாங்க. அப்ப எப்ப்டி முதுமை வரும்?

ஆகவே, மக்களே மதுரையிலிருந்து மட்டுமில்லை எந்த ஊரிலிருந்து வந்து சிகரெட் விற்றாலும் தயவு செய்து புகை பிடிக்காதீர்கள்.

சிகரெட் ஜோக்ஸ் இருந்தால் பின்னூட்டுங்க. சிறந்த ஜோக்குக்கு ஒரு கட்டு செய்யதுபீடி

Read more...

முடிஞ்சா சிரிச்சிட்டு போங்க!

Thursday, February 02, 2006

மனைவியிடம் கோபித்துக் கொண்டு ஒரு சர்தார்ஜி (அல்லது அதிரைக்காரர்) வாழ்க்கையை வெறுத்து தற்கொலை செய்துகொள்வதற்காக சென்றார்.ஆழமான குளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொள்வது என்று முடிவாகி விட்டது. நேராக குளம் நோக்கி சென்றார். சுற்றும் முற்றும் பார்த்தார்.மெதுவாக குளக்கரையில் இறங்கியவர், வேகமாக வெளியேறினார். பயந்து நடுங்கிய படியே வீட்டிற்கு வந்தார். அவரை ஏளனமாகப் பார்த்த மணைவி "என்னாச்சு? குளத்தில் விழுந்து தற்கொலை செய்யப் போறேன்னீங்க? இப்ப திரும்பி வந்துட்டீங்க" என்றாள். அதற்கு சர்தார்ஜி "சொன்னது நிஜம்தான். ஆனால் அந்த குளத்தில் ஏகப்பட்ட பாம்பு கிடக்குது" என்றார்.

*****

பேச்சு மூச்சற்றநிலையில் உடல்நலம் சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த தாத்தாவை சந்திக்கச் சென்றார் ஒரு சர்தார்ஜி. பேரனைப்பார்த்ததும் தாத்தாவுக்கு கண்களில் ஆனந்தக் கண்ணீர் வந்தது. பரிவுடன் பேரனும் அருகில் சென்றார். பேரனின் பாக்கெட்டிலிருந்த பேனாவை உருவிய தாத்தா, ஏதோ கஷ்டப்பட்டு எழுதி விட்டு உயிரை விட்டார்.

பதறியபடியே அந்த பேப்பரை வாங்கிய பேரன் தனது சட்டை பாக்கெடில் வைத்து விட்டு தாத்தாவின் பிணத்தின் மேல் விழுந்து அழுதான். ஈமக்கிரியையும் முடிந்தது. சில நாள் கழித்து தாத்தா கடைசியாக எழுதிய பேப்பர் நினவில் வந்தது. அவசரமாக அழுக்குக் கூடையிலிருந்த சட்டைப் பாக்கேட்டிலிருந்து எடுத்து படித்து விட்டு மீண்டும் கதறி அழுதான். அந்த பேப்பரில் தாத்தா எழுதி இருந்தது "டேய் கஸ்மாலம். எனக்கு ஆக்ஜிஜன் வரும் டியுப்பின் மீது நிற்காதேடா!"

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP